பக்கம் - 112 -
பேரம் பேசும் தலைவர்கள்!

உத்பாவிற்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்த பதிலால் குறைஷிகள் முற்றிலும் நிராசை அடைந்து விடவில்லை. ஏனெனில், உத்பாவிற்கு நபி (ஸல்) அவர்கள் சில வசனங்களை ஓதிக் காட்டினார்கள். அது கோரிக்கையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வது அல்லது மறுப்பதாக ஆகமுடியாது. எனவே, மிகுந்த ஆராய்ச்சியுடனும் சிந்தனையுடனும் பிரச்சனையின் பல கோணங்களை அலசியப் பின், ஆலோசனை செய்வதற்காக சூரியன் மறைந்ததும் கஅபாவின் பின்புறம் குறைஷித் தலைவர்கள் ஒன்று கூடி நபி (ஸல்) அவர்களை அழைத்து வரச் செய்தனர். ஏதோ நன்மையை இவர்கள் நாடிவிட்டார்கள் என்ற பேராவலில் நபி (ஸல்) அவர்கள் விரைந்து வந்து அவர்களருகில் அமர்ந்தபோது உத்பா கூறியதையே குறைஷித் தலைவர்கள் கூறினர். அதாவது உத்பா மட்டும் கூறியதால் நபி (ஸல்) அவர்கள் இதை நம்பவில்லை. நாம் அனைவரும் சேர்ந்து கூறினால் நம்மை நம்பி ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொள்வார் என்று அவர்கள் எண்ணினார்கள் போலும்!

நபி (ஸஸ்) அவர்கள் அந்த குறைஷிகளுக்குக் கூறிய பதிலாவது: “நீங்கள் கூறுவது எதுவும் என்னிடமில்லை. உங்களின் பொருளை அல்லது உங்களிடம் சிறப்பை அல்லது உங்கள் மீது ஆட்சி செய்வதைத் தேடி நான் இம்மார்க்கத்தை கொண்டு வரவில்லை. எனினும், அல்லாஹ் என்னை உங்களிடம் தூதராக அனுப்பி என்மீது ஒரு வேதத்தையும் இறக்கியிருக்கின்றான். உங்களுக்கு நற்செய்தி சொல்பவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் நான் இருக்க வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டிருக்கிறான். எனது இறைவனின் தூதுத்துவத்தை நான் உங்களுக்கு முன் வைத்துவிட்டேன். உங்களுக்கு நல்லுபதேசம் செய்துவிட்டேன்; நான் உங்களிடம் கொண்டு வந்த மார்க்கத்தை நீங்கள் என்னிடமிருந்து ஏற்றுக் கொண்டால் அது உங்களுக்கு ஈருலக பாக்கியமாகும். நீங்கள் அதை மறுத்தால் அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்கும் வரை அல்லாஹ்வின் கட்டளைக்காக நான் பொறுத்திருப்பேன்.”

இத்திட்டம் நிறைவேறாததால் மற்றொரு திட்டத்திற்குச் சென்றனர். அதாவது “நீங்கள் உங்களது இறைவனிடம் கூறி இம்மலைகளை இடம்பெயரச் செய்ய வேண்டும்; இவ்வூர்களை செழிப்பாக்க வேண்டும்; அவற்றின் நதிகளை ஓடவைக்க வேண்டும்; இறந்துவிட்ட முன்னோர்களைக் குறிப்பாக, குஸை இப்னு கிலாஃபை உயிர்ப்பிக்க வேண்டும்; மரணித்தவர்கள் எழுந்து நீங்கள் கூறுவது உண்மை என்று கூறினால் நாங்கள் உங்கள் கூற்றை நம்பிக்கைக் கொள்வோம்” என்று கூறினார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் முன் கூறிய பதிலையே கூறினார்கள்.

மற்றொரு திட்டத்தையும் முன் வைத்தனர். “அதாவது நீங்கள் உங்களைக் காப்பதற்கு உங்களுடைய இறைவனிடம் ஒரு மலக்கை (வானவரை) அனுப்பும்படி கோருங்கள். நாங்கள் அவருடன் பேசித் தெரிந்துகொள்வோம். உங்களுக்காகப் பல தோட்டங்களையும், மாட மாளிகைகளையும் தங்கம், வெள்ளியினாலான கஜானாக்களையும் அருளும்படி கோருங்கள்” என்றனர். இதற்கும் நபி (ஸல்) முன் கூறிய பதிலையே கூறினார்கள்.

அடுத்து மற்றொரு திட்டத்திற்கு சென்றனர். “அதாவது எங்களுக்கு வேதனையை இறக்குங்கள்; வானத்தை உடைத்து எங்கள் மீது போடுங்கள்; நீங்கள் எச்சரிப்பவற்றை இப்போதே எங்களுக்குக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அது அல்லாஹ்வின் நாட்டம். அவன் நாடினால் அதைச் செய்வான்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த இணைவைப்பவர்கள் “நாங்கள் உங்களுடன் உட்கார்ந்து உங்களிடம் பல கேள்விகளைக் கேட்போம்; பல கோரிக்கைகளை விடுப்போம் என்பது உங்களது இறைவனுக்குத் தெரியாதா? நீங்கள் எங்களுக்கு பதில் சொல்வதற்குத் தேவையானதை உங்களுக்கு இறைவன் கற்றுத் தரவில்லையா? நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் அவன் எங்களிடம் எப்படி நடந்து கொள்வான் என்பதை உங்களுக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டனர்.