பக்கம் - 119 -
இந்நிலையிலும் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் ஹஜ்ஜுடைய காலங்களில் வெளியே புறப்பட்டு, மக்களைச் சந்தித்து, அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைப்பார்கள். இந்நேரத்தில் அபூலஹப் செய்து வந்த செயல்கள் பற்றி முன்பே நாம் கூறியிருக்கின்றோம்.

கிழிக்கப்பட்டது தீர்மானம்!

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இப்படியே உருண்டோடின. குறைஷிகள் இந்த ஒப்பந்தத்தை எழுதினாலும் அவர்களில் சிலர் இந்த ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்து வெறுத்தே வந்தனர். இவ்வாறு வெறுத்தவர்கள்தான் இப்பத்திரத்தை கிழித்தெறிய முயற்சி எடுத்தனர். இம்முயற்சி நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடந்தேறியது.

ஹிஷாம் இப்னு அம்ர் என்பவர்தான் இதற்குக் காரணமாக இருந்தார். அவர் இரவில் மறைமுகமாக ஹாஷிம் கிளையாருக்கு உணவு வழங்கி வந்தார். ஒரு நாள் அவர் ஸுஹைர் இப்னு அபூ உமைய்யா மக்ஜூமீ என்பவரிடம் வந்தார். இவரது தாய் அப்துல் முத்தலிபின் மகள் ஆத்திகாவாகும். ஹிஷாம், “ஜுஹைரே! நீ சாப்பிடுகிறாய், குடிக்கிறாய். உனது தாய்மாமன்கள் எவ்வாறு கஷ்டத்திலிருக்கிறார்கள் என்பது உனக்கு நன்றாகத் தெரியும். இது உனக்கு சந்தோஷமாக இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு ஜுஹைர் “நான் ஒருவன் என்ன செய்ய?” என்று கூறினார். அதற்கு ஹிஷாம் “உனக்கு உதவ ஒருவர் இருக்கிறார்” என்று கூற, “யார் அவர்?” என்று வினவினார். “அது நான்தான்” என்று கூறினார். அதற்கு ஜுஹைர் “நீ மூன்றாவது ஒருவரைத் தேடு” என்று கூறினார்.

முத்இம் இப்னு அதீ என்பவரிடம் ஹிஷாம் சென்று அப்து மனாஃபின் மக்களான ஹாஷிம், முத்தலிப் இவ்விருவரின் குடும்ப உறவுகளை (இரத்த பந்தங்களை) நினைவூட்டி “இவர்களுக்கு அநியாயம் செய்யக் குறைஷிகளுக்கு நீ உடந்தையாக இருக்கிறாயே” என பழித்துக் கூறியவுடன் “நான் ஒருவனாக இருந்து என்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார். அதற்கு ஹிஷாம் “உன்னுடன் இரண்டாமவரும் இருக்கிறார்” என்று கூற, அதற்கு “அவர் யார்?” என்று கேட்டார். அதற்கு ஹிஷாம் “நான்தான்” என்று கூறினார். முத்இம் “மூன்றாவது ஒருவரும் நமக்கு வேண்டும்” என்று கூற, ஹிஷாம் “ஆம்! மூன்றாமவரும் இருக்கிறார். அவர்தான் ஜுஹைர் இப்னு அபூ உமைய்யா” என்று கூறினார். உடனே முத்இம் ஷாமிடம் “நான்காம் ஒருவரையும் தேடுங்கள்” என்றார்.

ஹிஷாம், அபுல் புக்தயிடம் வந்து முத்இமிடம் பேசியது போன்றே பேசவே “இதற்கு யாராவது உதவிக்கு இருக்கிறார்களா?” என்று அவர் வினவினார். அப்போது “ஹிஷாம் ஆம்! ஜுஹைர், முத்இம், நான் ஆகியோர் உம்முடன் இருக்கிறோம்” என்றார்.

ஹிஷாம், ஸம்ஆவிடம் வந்தார். அவருக்கும் ஹாஷிம் குடும்பத்திற்கும் உள்ள உறவுகளையும், உரிமைகளையும் பற்றி அவரிடம் கூறவே “நீர் அழைக்கும் இக்காரியத்தில் வேறு யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்க, ஹிஷாம் “ஆம்!” என்ற கூறி அனைவரது பெயர்களையும் கூறினார்.

இவர்கள் அனைவரும் ஹஜுனுக்கு அருகில் ஒன்றுகூடினர். பிறகு, ஒப்பந்தப் பத்திரத்தை கிழிக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது “இதை நானே முதலில் செய்வேன். இதைப் பற்றி நான்தான் முதலில் பேசுவேன்” என்றார் ஜுஹைர்.