பக்கம் - 125 -
நபி (ஸல்) கூற தான் கேட்டதாக அபூ ஸஈது அல்குத் (ரழி) அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்களிடம் அவர்களது பெரியதந்தை அபூதாலிபைப் பற்றி பேசப்பட்டபோது “மறுமையில் அவருக்கு எனது சிபாரிசு பலனளிக்கலாம். அதனால் அவரது கரண்டைக்கால் வரையுள்ள நெருப்பின் ஆழத்தில் அவர் வைக்கப்படுவார்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

துணைவி கதீஜா மரணம்

அபூதாலிபின் மரணத்திற்கு இரண்டு மாதங்களுக்குப் பின் துணைவி கதீஜா (ரழி) மரணமானார்கள். இவர்களது மரணம் நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமழான் மாதத்தில், அவர்களின் 65வது வயதில் நிகழ்ந்தது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வயது ஐம்பது. (தல்கீஹ்)

அபூதாலிபின் மரணத்திற்கு மூன்று நாட்களுக்குப் பின் கதீஜா (ரழி) மரணமானார்கள் என்று சிலர் கூறுகின்றனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மிகப்பெரியஅருளாக கதீஜா (ரழி) விளங்கினார்கள். நபி (ஸல்) அவர்களுடன் கால் நூற்றாண்டுக் காலம் வாழ்ந்த நமது அன்னை கதீஜா (ரழி), நபியவர்களின் துக்க நேரத்தில் அவர்களுக்கு ஆறுதலாக, சிரமமான நேரத்தில் உறுதுணையாக இருந்து, அவர்களின் தூதுத்துவத்தை எடுத்துக் கூறுவதற்கு பலவகையில் தியாகம் செய்தார்கள். மேலும், அறப்போரின் கஷ்டங்களில் பங்கெடுத்து தனது உயிராலும் பொருளாலும் உதவி ஒத்தாசை செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: “மக்கள் என்னை நிராகரித்த போது, கதீஜா என்னை நம்பினார். மக்கள் என்னை பொய்ப்பித்த போது, அவர் என்னை உண்மைப்படுத்தினார். மக்கள் என்னை ஒதுக்கிய போது, அவர் என்னைத் தனது பொருளில் சேர்த்துக் கொண்டார். அல்லாஹ் அவர் மூலமாகத்தான் எனக்குக் குழந்தைகளைக் கொடுத்தான். அவரல்லாத மற்ற மனைவிகள் மூலம் குழந்தைகள் இல்லாமல் செய்துவிட்டான்.” (முஸ்னது அஹ்மது)

அபூஹுரைரா (ரழி) அறிவிப்பதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் வந்தார். “அல்லாஹ்வின் தூதரே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் உணவு எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் ஸலாம் கூறி சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காணமுடியாத முத்து மாளிகை ஒன்று அவருக்கு கிடைக்க இருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அடுக்கடுக்கான துயரங்கள்

சில நாட்களுக்குள் துக்கம் தரும் இவ்விரு நிகழ்ச்சிகளும் நடந்து முடிந்தன. நபி (ஸல்) அவர்களின் உள்ளம் வேதனையால் துடிதுடித்தது. தொடர்ந்து சமுதாயத்தவர்களும் துன்பங்களைத் தந்தனர். அபூதாலிபின் மரணத்திற்குப் பின் நபி (ஸல்) அவர்களுக்குத் துயரத்திற்கு மேல் துயரம் அதிகரித்தது. முற்றிலும் நிராசையாகி “தாயிஃப்’ நகர மக்களாவது அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள் அல்லது ஆதரவு அளிப்பார்கள் என்று தாயிஃபை நோக்கி பயணமானார்கள். ஆனால், அங்கு அவர்களுக்கு ஆதரவளிப்பவரோ உதவி செய்பவரோ இல்லை. மாறாக, அம்மக்கள் நபி (ஸல்) அவர்களின் கூட்டத்தார் கொடுக்காத நோவினைகளை அவர்களுக்குக் கொடுத்தனர். கல் நெஞ்சம் கொண்ட அம்மக்கள் நபியவர்களை அடித்து துன்புறுத்தினர்.