பக்கம் - 126 -
மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களைக் கொடுமைப்படுத்தியது போன்றே அவர்களது தோழர்களையும் கொடுமைப்படுத்தினர். நபி (ஸல்) அவர்களின் நெருக்கமான தோழரான அபூ பக்ருக்கும் இக்கொடுமைகள் நிகழ்ந்தன. இதனால் அவரும் மக்காவை விட்டு ஹபஷாவிற்கு செல்ல வேண்டுமென முடிவு செய்தார். மக்காவை விட்டு வெளியேறி “பர்குல் கிமாத்’ என்ற இடத்தை அடைந்த போது அவரை “இப்னு துகுன்னா’ என்பவர் சந்தித்து தனது பாதுகாப்பில் மீண்டும் அவரை மக்காவிற்கு அழைத்து வந்தார். (ஸஹீஹுல் புகாரி)

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு அவன் வாழ்நாளில் கொடுக்க முடியாத வேதனைகளைக் குறைஷிகள் நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்து வந்தனர். ஒருமுறை குறைஷி மடையர்களில் ஒருவன் நபி (ஸல்) அவர்களின் தலை மீது மண்ணை வாரி இறைத்தான். வீட்டுக்குள் நுழைந்த நபியவர்களின் தலை மீது மண் இருப்பதைக் கண்ட அவர்களின் மகளால் ஒருவர் அழுதவராக அதனை அகற்றினார்கள். “எனது அருமை மகளே! அழாதே! நிச்சயமாக அல்லாஹ் உனது தந்தையைப் பாதுகாப்பான். அபூதாலிப் மரணிக்கும் வரை நான் அதிகம் வெறுக்கும் ஒன்றை குறைஷிகள் எனக்கு செய்ததில்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

இவ்வாறு இந்த ஆண்டில் துயரங்கள் தொடர்ந்து கொண்டே இருந்ததால் வரலாற்றில் “ஆமுல் ஹுஸ்ன்’ துயர ஆண்டு என்று இந்த ஆண்டைக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸவ்தா உடன் மறுமணம்

நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில் நபி (ஸல்), ஸவ்தா (ரழி) அவர்களை திருமணம் செய்தார்கள். இவர் அழைப்புப் பணியின் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாமைத் தழுவியவர். முஸ்லிம்கள் இரண்டாவது முறையாக ஹபஷாவிற்கு ஹிஜ்ரா சென்றபோது இவரும் தனது கணவருடன் சென்றிருந்தார். இவர் கணவர் ஹபஷாவில் மரணித்துவிட்டார். அதற்குப் பின் இவர் மக்கா வந்தவுடன் இவருடைய இத்தா”வுடைய காலம் முடிவுறவே நபி (ஸல்) அவர்கள் இவரை பெண் பேசி திருமணம் முடித்துக் கொண்டார்கள். கதீஜா (ரழி) அவர்களின் மரணத்திற்குப் பின் இவர்களைத்தான் முதலில் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இறுதி காலத்தில் நபி (ஸல்) அவர்கள் தனக்கு ஒதுக்கியிருந்த நாட்களையும் ஆயிஷாவிற்குக் கொடுத்து விட்டார்கள்.