பக்கம் - 130 -
அன்று பகலின் இறுதியில் அவர்கள் பேசத் தொடங்கியபோது “அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்” என்றுதான் கேட்டார்கள். இதைக் கேட்ட தைம் கிளையினர் அவரைக் குறை கூறிவிட்டு “அன்னாரது தாயார் உம்முல் கைடம் இவருக்கு உணவளியுங்கள்; ஏதாவது குடிக்கக் கொடுங்கள்; அவரை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு எழுந்துச் சென்றனர்.

அன்னாரது தாய் அனைவரும் சென்றபின் உணவு சாப்பிட அவரை வற்புறுத்திக் கொண்டே இருந்தார். ஆனால் அபூபக்ரோ “அல்லாஹ்வின் தூதர் என்னவானார்கள்?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அன்னாரது தாய் “உனது தோழரைப் பற்றி அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒன்றுமே எனக்குத் தெரியாது” என்று கூறினார். “நீங்கள் கத்தாபின் மகள் உம்மு ஜமீல் (உமரின் சகோதரி) இடம் சென்று நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரித்து வாருங்கள்” என்று அபூபக்ர் (ரழி) கூறினார்கள். தாயார் உம்மு ஜமீலிடம் வந்து “அபூபக்ர் (ரழி) உன்னிடம் முஹம்மது இப்னு அப்துல்லாஹ்வைப் பற்றி விசாரித்து வர என்னை அனுப்பினார்” என்று கூற, அவர் “எனக்கு அபூபக்ரையும் தெரியாது, முஹம்மது இப்னு அப்துல்லாஹ்வையும் தெரியாது. நீங்கள் விரும்பினால் உங்களுடன் உங்கள் மகனைப் பார்க்க நான் வருகிறேன்” என்று கூறினார். அவர் “சரி” எனக் கூறவே, உம்மு ஜமீல் அவருடன் அபூபக்ரைப் பார்க்கப் புறப்பட்டார்.

உம்மு ஜமீல் அபூபக்ரை மயக்கமுற்று மரணித்தவரைப் போன்று பார்த்தவுடன் கூச்சலிட்டு “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! கல் நெஞ்சம் கொண்ட இறைநிராகரிப்போரும் பாவிகளும் உங்களை இவ்வாறு செய்துவிட்டார்கள். அல்லாஹ் உங்களுக்காக அவர்களிடம் பழிவாங்க வேண்டுமென நான் ஆதரவு வைக்கிறேன்” என்று கூறினார். அவரிடம் அபூபக்ர் (ரழி), “அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்” என்று கேட்டதற்கு “இதோ உமது தாய் (நமது பேச்சை) கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறவே அவரைப் பற்றி பரவாயில்லை என்று கூறியவுடன் “நபி (ஸல்) நல்ல விதமாக பாதுகாப்புடன் இருக்கிறார்கள்” என்று உம்மு ஜமீல் கூறினார். “அவர்கள் எங்கிருக்கிறார்” என்று அபூபக்ர் (ரழி) கேட்கவே “அவர்கள் தாருல் அர்கமில் இருக்கிறார்கள்” என்றவுடன் “அல்லாஹ்வின் தூதரைச் சென்று பார்க்காமல் நான் உண்ணவுமாட்டேன், குடிக்கவுமாட்டேன். இது அல்லாஹ்விற்காக என்மீது கடமையாகும்” என்று நேர்ச்சை செய்து கொண்டார்கள்.

அன்னாரது தாயாரும் உம்மு ஜமீலும் ஆள் நடமாட்டங்கள் குறைந்து மக்களின் ஆரவாரங்கள் அமைதியாகும் வரை சற்று தாமதித்து நபி (ஸல்) அவர்களிடம் அவரை அழைத்துச் சென்றார்கள். அபூபக்ர் (ரழி) நடக்க இயலாமல் அவர்கள் இருவர் மீதும் சாய்ந்து நடந்து சென்றார்கள். (அல்பிதாயா வந்நிஹாயா)

இந்த நூலின் பல இடங்களில் நபி (ஸல்) அவர்களின் மீது நபித்தோழர்கள் வைத்திருந்த அன்பை விவரிக்கும் அற்புதமான சம்பவங்களையெல்லாம் நாம் கூறுவோம். குறிப்பாக உஹுத் போரில் நடந்த நிகழ்ச்சிகள், “குபைப்“, இன்னும் அவர் போன்ற நபித்தோழர்கள் மூலம் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நாம் பின்னால் பார்ப்போம்.

3) கடமை உணர்வு

நபித்தோழர்கள் தங்களின் மீது இறைவனால் சுமத்தப்பட்டுள்ள மாபெரும் பொறுப்பை முழுமையாக உணர்ந்திருந்தார்கள். “எந்த நிலையிலும் இப்பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. இப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் விலகிக்கொள்ளும் போது ஏற்படக்கூடிய மிக மோசமான முடிவை விட இவ்வுலகத்தின் சிரமங்களை தாங்கிக்கொள்வதே மேல். இப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லையெனில் தங்களுக்கும் மனித சமுதாயத்துக்கும் ஏற்படும் நஷ்டத்தை இப்பொறுப்பினை சுமந்துகொள்ளும் போது சந்திக்கும் சிரமங்களுடன் ஒருக்காலும் ஒப்பிட முடியாது” என்று நபித்தோழர்கள் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர்.