பக்கம் - 207 -


குறைஷியர்களின் அச்சுறுத்துதலும் இப்னு உபையுடன் தொடர்பும்

மக்காவில் முஸ்லிம்களுக்கு நிராகரிப்பாளர்கள் அளவிலா துன்பங்களைக் கொடுத்து வந்தார்கள். முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்குச் செல்ல நாடிய போது அவர்களைப் பல விதத்திலும் தடுத்தார்கள். முஸ்லிம்களுக்குச் சொல்லிலடங்கா கொடுமைகளை அளித்தனர். உண்மையில் அவர்களுடைய குற்றங்களுக்காக அவர்களிடம் போர் செய்வதும், அவர்களுடைய சொத்துகளைச் சூறையாடுவதும் தகும் என்று இதற்கு முன்னுள்ள பக்கங்களில் கூறியிருக்கிறோம். முஸ்லிம்கள் மதீனாவிற்கு வந்த பிறகும் அந்த நிராகரிப்போர் முஸ்லிம்கள் மீது அத்துமீறுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. தங்களது அடாவடி அழிச்சாட்டியங்களை முடித்துக் கொள்ளவில்லை. முஸ்லிம்கள் தங்களிடமிருந்து தப்பித்து மதீனாவில் நிம்மதியான, பாதுகாப்பான இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்களே என்ற கோபத்தால் கொதித்தெழுந்தார்கள். எப்படியாவது முஸ்லிம்களை மதீனாவிலிருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார்கள். இதற்காக அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூலுக்குக் கடிதம் எழுதினார்கள். அவன் அந்நேரத்தில் இணைவைப்பவனாக இருந்தான். அவனுடன் மக்காவாசிகள் தொடர்பு கொண்டதன் காரணம் என்னவெனில், நபி (ஸல்) மதீனா வருவதற்கு முன் அவன்தான் மதீனாவாசிகளின் தலைவனாக இருந்தான். மதீனாவாசிகள் அவனையே தங்களது அரசனாக ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வராமல் இருந்திருந்தால் அவனே அவர்களின் அரசனாகியிருப்பான். இதனால் அவனுக்கு நபி (ஸல்) அவர்கள் மீதுள்ள கோபத்தை அறிந்த மக்காவாசிகள், அப்துல்லாஹ் இப்னு உபைக்கும் அவனுடன் இருந்த இணைவைப்போருக்கும் கடிதம் எழுதினர். அதில் அவர்கள் கூறியதாவது:

“நீங்கள் எங்கள் ஊரைச் சார்ந்தவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளீர்கள். இது அல்லாஹ்வின் மீது சத்தியம்! நிச்சயமாக நீங்கள் அவரிடம் போர் செய்ய வேண்டும் அல்லது அவரை வெளியாக்கி விட வேண்டும். அல்லது நாங்கள் (மக்காவாசிகள்) அனைவரும் ஒன்று சேர்ந்து உங்கள் மீது போர் தொடுத்து உங்களின் போர் வீரர்களைக் கொன்று குவித்து, உங்கள் பெண்களின் கற்புகளைச் சூறையாடுவோம்”- இவ்வாறு அக்கடிதத்தில் கூறியிருந்தனர். (ஸுனன் அபூதாவூது)

ஏற்கனவே, நபி (ஸல்) தனது ஆட்சியைப் பறித்துக் கொண்டார் என்று அப்துல்லாஹ் இப்னு உபை எண்ணி வந்ததால், நபியவர்களின் மீது கடுமையான வகையில் பகைமை கொண்டிருந்தான். எனவே, மக்கா முஷ்ரிக்குகள் கூறிய வார்த்தையை உடனடியாகச் செயல்படுத்தினான். இது சம்பந்தமாக அப்துர் ரஹ்மான் இப்னு கஅப் (ரழி) கூறுகிறார்கள்:

குறைஷிகளின் செய்தி அப்துல்லாஹ் இப்னு உபைம்க்கும், அவனுடன் இருந்த சிலை வணங்கிகளுக்கும் கிடைத்த போது அவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களிடம் போர் செய்வதற்கு ஆயத்தமானார்கள். அவர்கள் ஆயத்தமாகும் இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தவுடன் அவர்களை சந்திக்கப் போனார்கள். அப்போது அவர்களிடம், “குறைஷிகள் உங்களை எச்சரித்ததால் நீங்கள் மிக பயந்துவிட்டீர்களோ! அவர்கள் உங்களுக்கு செய்யும் சூழ்ச்சியை விட நீங்கள் உங்களுக்குச் செய்யும் சூழ்ச்சிதான் மிக மோசமானது. என்ன! அவர்களின் சொல்லுக்கிணங்க உங்களது பிள்ளைகளிடமும், சகோதரர்களிடமும் நீங்கள் போர் புரிய எண்ணுகிறீர்களா?” என்று சிந்தனையைத் தூண்டும் விதத்தில் நபி (ஸல்) கேட்டதும், கூடி இருந்தவர்கள் மறுப்பின்றி பிரிந்து சென்றனர். (ஸஹீஹுல் புகாரி)