பக்கம் - 213 -
3. ‘கர்ரார்’

ஹிஜ்ரி 1, துல்கஅதா (கி.பி. 623 மே) மாதம் ‘கர்ரார்’ என்ற இடத்திற்கு ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) தலைமையில் படைப் பிரிவு ஒன்றை நபி (ஸல்) அனுப்பினார்கள். குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடைமறிப்பதற்காகப் புறப்பட்ட இவர்களிடம் ‘கர்ரார்’ என்ற இடத்தை தாண்டிச் செல்லக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். இந்தப் படை கால்நடையாகவே சென்றது. பகலில் பதுங்குவதும் இரவில் நடப்பதுமாக வியாழன் காலை கர்ராரை அடைந்தது. ஆனால், அந்த வியாபாரக் கூட்டமோ இவர்கள் சென்றடைவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அந்த இடத்தைக் கடந்து சென்று விட்டிருந்ததால், இவர்கள் சண்டையின்றித் திரும்பினர்.

இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

4) ‘அப்வா’ (அ) ‘வத்தான்’

ஹிஜ் 2, ஸஃபர் (கி.பி. 623 ஆகஸ்டு) மாதம் நபி (ஸல்) அவர்கள் 70 முஹாஜிர்களுடன் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடை மறிப்பதற்காக ‘அல்அப்வா’ அல்லது ‘வத்தான்’ என்ற இடத்தை நோக்கிச் சென்றார்கள். ஆனால், சண்டை ஏதும் நடைபெறவில்லை. இந்தப் போருக்குச் செல்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் ஸஅது இப்னு உபாதாவை மதீனாவில் தனக்குக் கலீஃபாவாக (பிரதிநிதியாக) ஆக்கினார்கள். இந்த போரின் போது ‘ழம்ரா’ கிளையினரின் தலைவரான அம்ர் இப்னு மக்ஷி என்பவருடன் நட்பு உடன்படிக்கை செய்தார்கள். அந்த உடன்படிக்கையில் எழுதப்பட்டதாவது:

“இது அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மது ‘ழம்ரா’ கிளையினருடன் செய்யும் ஒப்பந்தம். ழம்ரா கிளையினர் தங்களது உயிர், பொருள் அனைத்திலும் பாதுகாப்புப் பெற்றவர்களே! அவர்களிடம் சண்டை செய்பவர்களை நாங்களும் எதிர்ப்போம். சண்டை செய்பவர்களுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்வோம். இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக போரில் ஈடுபடக் கூடாது. அவ்வாறே நபி (ஸல்) உதவிக்காக அழைத்தால் அவர்களும் உதவ வரவேண்டும். கடல் வற்றினாலும் இந்த உடன்படிக்கை நிலைத்திருக்கும்.”

இதுதான் நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட முதல் போராகும். நபி (ஸல்) அவர்கள் இந்தப் பயணத்தில் பதினைந்து நாட்கள் மதீனாவிற்கு வெளியில் இருந்தார்கள். இந்தப் போரிலும் வெள்ளைக் கொடியே பயன்படுத்தப்பட்டது. அதை ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) ஏந்தியிருந்தார்.

5) ‘பூவாத்“

ஹிஜ் 2, ரபீவுல் அவ்வல் (கி.பி. 623 செப்டம்பர்) மாதம் நபி (ஸல்) தங்களது 200 தோழர்களுடன் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை வழிமறிப்பதற்காகச் சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் உமய்யா இப்னு கலஃபும் நூறு குறைஷிகளும் இருந்தனர். இவர்களுடன் 2500 ஒட்டகங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் ‘ரழ்வா’ என்ற மலைக்கருகில் உள்ள ‘பூவாத்’ என்ற இடம் வரை சென்றார்கள். ஆனால், வியாபாரக் கூட்டம் அந்த இடத்தை முன்கூட்டியே கடந்து விட்டதால் சண்டை ஏதும் நடைபெறவில்லை.

இந்தப் போருக்கு நபி (ஸல்) செல்லும் போது மதீனாவில் ஸஅது இப்னு முஆதை பிரதிநிதியாக நியமித்தார்கள். இப்போரிலும் வெள்ளை நிறக் கொடியே பயன்படுத்தப்பட்டது. அதை ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.