பக்கம் - 232 -
“பயத்தில் நெஞ்சு திக்திக்கென்று அடிக்கிறது. (அதாவது தொடை நடுங்கி)’ என்ற அபூஜஹ்லின் கூற்று, உத்பாவுக்கு எட்டியபோது “பயத்தால் காற்றை வெளியிடும் அவனுக்கு நெஞ்சு அடிக்கிறதா? இல்லை எனக்கா? என்பதை அதிவிரைவில் அறிந்து கொள்ளத்தான் போகிறான் என்று உத்பா கூறினான்.” உடனே அபூஜஹ்ல் எங்கே இந்த எதிர்ப்பு பெரிதாகிவிடுமோ எனப் பயந்து, அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷின் படையினரால் கொல்லப்பட்ட அம்ர் இப்னு ஹழ்ரமியின் சகோதரர் ஆமீர் இப்னு ஹழ்ரமியை அழைத்து வரச் செய்தான். ஆமீடம் “இதோ உனது நண்பன் உத்பா மக்களை அழைத்துக் கொண்டு திரும்ப விரும்புகிறார். நானோ உனது கண்ணில் பழிவாங்கும் உணர்வைப் பார்க்கிறேன். எனவே, எழுந்து உமது ஒப்பந்தத்தையும், உமது சகோதரனுக்காக பழிவாங்குவதையும் வலியுறுத்து!” என்றான். தன் பின்பக்க ஆடையை ஆமீர் அவிழ்த்துவிட்டு “அம்ருக்கு ஏற்பட்ட கைசேதமே! அம்ருக்கு ஏற்பட்ட கைசேதமே!” என ஆமிர் கூச்சலிட்டான். இவனது கூக்குரலைக் கேட்ட கூட்டத்தினர் ஆவேசம் கொண்டு கொதித்தெழுந்தனர். இதனால் சண்டையிட வேண்டுமென்ற தங்களது தீய எண்ணத்தில் குறைஷிகள் உறுதியாக நின்றனர்.

இவ்வாறு, உத்பா மக்களுக்கு கூறிய நல்ல ஆலோசனையை அபூஜஹ்ல் கெடுத்து விட்டான். ஆம்! அவ்வாறுதான் மடமை ஞானத்தை மிகைத்தது. ஹக்கீமின் இந்த எதிர்ப்பு எவ்வித பலனுமின்றி மறைந்தது.

இரு படைகளும் நேருக்கு நேர்...

குறைஷிகள் மைதானத்திற்கு வந்தனர். குறைஷிப் படையும் இஸ்லாமியப் படையும் ஒன்று மற்றொன்றை நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது, நபி (ஸல்) “அல்லாஹ்வே! இதோ குறைஷிகள் கர்வத்துடனும் மமதையுடனும் உன்னிடம் போர் செய்பவர்களாக உன்னுடைய தூதரைப் பொய்ப்பிப்பவர்களாக வந்திருக்கின்றனர். அல்லாஹ்வே! நீ எனக்கு வாக்களித்த உனது உதவியைத் தருவாயாக! இக்காலைப் பொழுதில் அவர்களை அழிப்பாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.

சிவப்பு நிற ஒட்டகையின் மீது உத்பா உலாவிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த நபி (ஸல்) “இந்தக் கூட்டத்திலேயே நலத்தை விரும்பும் ஒருவர் இவராகத்தான் இருக்க முடியும். இவருக்கு இக்கூட்டம் கட்டுப்பட்டால் அவர்கள் சரியான வழியை அடையக்கூடும்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) முஸ்லிம்களின் அணிகளைச் சரிசெய்து கொண்டிருந்த போது ஓர் அற்புதமான நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது நபி (ஸல்) அவர்களின் கையில் ஓர் அம்பு இருந்தது. அதன்மூலம் அணிவகுப்பைச் சரிசெய்து கொண்டிருந்தார்கள். ஸவாது இப்னு கஸிய்யா (ரழி) அணியில் சற்று முன்னால் நிற்கவே நபி (ஸல்) அவரது வயிற்றில் அந்த அம்பால் லேசாக ஒரு குத்து குத்தி “ஸவாதே! சரியாக நிற்பீராக” என்றார்கள். உடனே ஸவாது (ரழி), “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வலியை உண்டாக்கி விட்டீர்கள். நான் உங்களிடம் பழிவாங்க வேண்டும்” என்றார். நபி (ஸல்) தனது வயிற்றை திறந்து காட்டி “பழி தீர்த்துக் கொள் ஸவாதே!” என்றார்கள். ஸவாது நபி (ஸல்) அவர்களைக் கட்டியணைத்து வயிற்றில் முத்தமிட்டார். நபி (ஸல்), “ஸவாதே! ஏன் இப்படி செய்தீர்” என்று கேட்டதற்கு “அல்லாஹ்வின் தூதரே! இதோ... என்ன நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இறுதியாக எனது மேனி உங்களுடைய மேனியை தொட்டு விட வேண்டும் என்று பிரியப்பட்டேன்” என்றார் ஸவாது. அவன் நலத்திற்காக நபி (ஸல்) பிரார்தித்தார்கள்.