பக்கம் - 240 -
போர் முடிந்த போது நபி (ஸல்) “அபூஜஹ்லுக்கு என்னவானது என யார் பார்த்து வருவீர்கள்?” என்று கேட்டார்கள். அப்போது அவனைத் தேடிப் பார்ப்பதற்குத் தோழர்கள் பல திசைகளிலும் பிரிந்து சென்றார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அபூஜஹ்லைப் பார்த்து விட்டார்கள். அவன் தனது இறுதி மூச்சை வாங்கிக் கொண்டிருந்தான். இப்னு மஸ்ஊது (ரழி) தனது காலை அவனது கழுத்தின் மீது வைத்து அவன் தலையைத் தனியாக அறுத்தெடுப்பதற்காக அவன் தாடியைப் பிடித்து “அல்லாஹ்வின் எதிரியே! அல்லாஹ் உன்னைக் கேவலப்படுத்தி விட்டானா?” என்று கேட்டார்கள். அதற்கவன் “என்னை அல்லாஹ் எப்படி கேவலப்படுத்துவான்? நீங்கள் கொன்றிருக்கும் மனிதர்களில் என்னை விட உயர்ந்தவர் யார் இருக்க முடியும்? அல்லது நீங்கள் கொன்றிருக்கும் மனிதர்களில் என்னை விட மேலானவர் யார் இருக்க முடியும்?” என்று கேட்டுவிட்டு, “கேவலம்! சாதாரண விவசாயிகளைத் தவிர்த்து வேறு யாராவது (என் இனத்தவர்) என்னை கொன்றிருக்க வேண்டுமே என்று கூறி, சரி இன்றைய தினத்தில் வெற்றி யாருக்கு என்று சொல்?” என்றான். அதற்கு இப்னு மஸ்ஊது (ரழி) “அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும்தான் கிடைத்தது” என்று கூறினார்கள். பின்பு அவனது கழுத்தின் மீது காலை வைத்திருந்த இப்னு மஸ்ஊதிடம் “ஏ... ஆடு மேய்த்த பொடியனே!” நீ மிகுந்த சிரமமான ஓர் இடத்தின் மேல் நிற்கிறாய் என்பதைத் தெரிந்துகொள்” என்று கூறினான்.

இதற்குப் பிறகு இப்னு மஸ்ஊது (ரழி) அவர்கள் அபூஜஹ்லின் தலையைத் தனியாக வெட்டியெடுத்து நபி (ஸல்) அவர்களிடம் சென்று “அல்லாஹ்வின் தூதரே! இதோ அல்லாஹ்வின் எதிரி அபூஜஹ்லின் தலை!” என்று கூறினார்கள். நபி (ஸல்) “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை” என்று மூன்று முறை கூறிவிட்டு “அல்லாஹ் மிகப் பெரியவன்! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் தனது வாக்கை உண்மைப்படுத்தினான். தனது அடியாருக்கு உதவி செய்தான். எதிரி படைகள் அனைத்தையும் தோற்கடித்தான்” என்று கூறி, என்னை அழைத்துச் சென்று அவனை எனக்குக் காட்டு என்றார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரழி) கூறுகிறார்கள்: நாங்கள் அவன் இருந்த இடத்திற்குச் சென்றோம். அவனைக் கண்ட நபி (ஸல்) “இவன்தான் இந்த சமுதாயத்தின் ஃபிர்அவ்ன்”” என்றார்கள்.

இறைநம்பிக்கை நிகழ்த்திய அதிசயங்கள்

உமைர் இப்னு ஹுமாம் (ரழி) மற்றும் அவ்ஃப் இப்னு ஹாரிஸ் (ரழி) ஆகிய இருவரின் அற்புதமான முன் உதாரணங்களை இதற்கு முன் கூறினோம். அதுமட்டுமல்லாமல், மேலும் பல அதிசயமான நிகழ்ச்சிகள் இப்போரில் நடந்தன. கொள்கையில் அவர்களுக்கிருந்த உறுதியையும் நிலைத்தன்மையையும் அந்நிகழ்ச்சிகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.

இப்போரில் தந்தை பிள்ளைக்கு எதிராகவும், பிள்ளை தந்தைக்கு எதிராகவும், சகோதரர்கள் சகோதரர்களுக்கு எதிராகவும் போரிட்டனர். இவர்களுக்கு மத்தியில் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு வாட்கள் தீர்ப்பளித்தன. மக்காவில் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் தம்மைக் கொடுமைப்படுத்தியவர்களைக் கொன்று தங்களுடைய சினத்தை ஆற்றிக் கொண்டனர்.