பக்கம் - 290 -
நபியவர்களைச் சுற்றி கடும் சண்டை

முஸ்லிம்களில் இதற்கு முன் கூறப்பட்ட பிரிவினர்கள் எதிரிகளால் சூழப்பட்டு கடுமையான தாக்குதலைச் சமாளித்துக் கொண்டிருந்த அதே வேளையில் இங்கே நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்திருந்த முஸ்லிம்களையும் குறைஷிகள் தாக்கினர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் ஒன்பது நபர்கள் மட்டுமே இருந்தனர். இப்போதுதான் நாம் முன்னால் கண்டவாறு நபியவர்கள் “முஸ்லிம்களே என்னிடம் வாருங்கள். நான் அல்லாஹ்வின் தூதர்” என்று அழைத்தார்கள். அப்போது நபியவர்களின் சப்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்திலிருந்த மற்ற எதிரிகளும் நபியவர்கள் இருந்த திசை நோக்கிப் பாய்ந்தனர். அதனால் நபியவர்களுடன் இருந்த ஒன்பது நபித்தோழர்களுக்கும் தாக்க வந்த எதிரிகளுக்குமிடையில் கடுமையான சண்டை நடந்தது. அச்சண்டையில் அந்தத் தோழர்கள் நபியவர்கள் மீது வைத்திருந்த அன்பும் அவர்களுக்காக தங்களையே அர்ப்பணிக்கும் தியாக உணர்வும் நன்கு வெளிப்பட்டது.

அனஸ் இப்னு மாலிக் (ரழி) இது தொடர்பாக அறிவிக்கும் ஒரு செய்தி ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது. அனஸ் இப்னு மாலிக் (ரழி) கூறுகிறார்கள்: உஹுத் போரன்று நபி (ஸல்) அவர்கள் ஏழு அன்சாரி தோழர்களுடனும் இரண்டு குறைஷித் தோழர்களுடனும் தனித்து விட்டார்கள். இணைவைப்பவர்கள் நபியவர்களைச் சூழ்ந்து கொண்ட போது “இவர்களை நம்மிடமிருந்து யார் விரட்டுவாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு. (அல்லது) அவர் சொர்க்கத்தில் என்னுடன் இருப்பார்” என்று நபியவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அன்சாரி ஒருவர் அந்த எதிரிகளை நோக்கிப் பாய்ந்து சண்டையிட்டு வீரமரணம் எய்தினார். மீண்டும் இணைவைப்பவர்கள் நபியவர்களைத் தாக்க சூழ்ந்த போது முன்பு கூறியது போலவே கூறினார்கள். மீண்டும் அன்சாரிகளில் ஒருவர் முன்சென்று போரிட்டு வீரமரணம் எய்தினார். இவ்வாறே ஏழு அன்சாரித் தோழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது நபியவர்கள் தனது இரு குறைஷித் தோழர்களிடம் “நமது தோழர்களுக்கு நாம் நீதம் செலுத்தவில்லை” என்று கூறினார்கள். (முஹாஜிர்கள் அன்றி அன்சாரிகள் கொல்லப்பட்டதைப் பற்றி நபி (ஸல்) இவ்வாறு கூறினார்கள்.) (ஸஹீஹ் முஸ்லிம்)

நபியவர்களின் வாழ்க்கையில் மிக இக்கட்டான நேரம்

மேற்கூறப்பட்ட ஏழு அன்சாரித் தோழர்களில் இறுதியாக எதிரிகளிடம் சண்டையிட்டவர் உமாரா இப்னு யஜீத் (ரழி) என்பவராவார். இவர் சண்டையில் படுகாயமடைந்து கீழே விழுந்தார். அப்போது இரு குறைஷித் தோழர்கள் (தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் மற்றும் ஸஅது இப்னு அபீ வக்காஸ்) மட்டும்தான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தனர். அல்லாஹ்வின் அருளால் சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த சில முஸ்லிம்கள் உமாராவை எதிரிகளிடமிருந்துக் காப்பற்றினர். கீழே விழுந்த அன்சாரித் தோழர் நபியவர்களின் பாதத்தை தன் தலைக்குத் தலையனையாக்கிக் கொண்டார். சற்று நேரத்தில் அவர் உயிர் பிந்த போது அவரது கன்னம் நபியவர்களின் பாதத்தின் மீது இருந்தது. (இப்னு ஹிஷாம்)