பக்கம் - 293 -
இதைப் பற்றி ஸஅது (ரழி) அறிவிக்கும் ஒரு செய்தி ஸஹீஹுல் புகாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. ஸஅது (ரழி) கூறுகிறார்கள்: உஹுத் போரில் நான் நபியவர்களைப் பார்த்தேன். அவர்களைப் பாதுகாப்பதற்காக அவர்களைச் சுற்றி இருவர் கடுமையாக சண்டை செய்து கொண்டிருந்தனர் அவர்கள் வெண்மையான ஆடை அணிந்திருந்தனர் இந்நாளுக்கு முன்போ, பின்போ அவர்களை நான் பார்த்ததில்லை அவர்கள் ஜிப்ரீல், மீக்காயில் ஆவார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபியவர்கள் அருகே தோழர்கள் திரளுதல்

மேற்கூறப்பட்ட நிகழ்ச்சிகளெல்லாம் கண் சிமிட்டும் சில நிமிடங்களில் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தன. நபி (ஸல்) அவர்களுக்கு மிக நெருக்கமான பல தோழர்கள் போரில் முதல் அணியில் நின்று எதிரிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். திடீரென போரின் நிலை இவ்வாறு மாறும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை அல்லது நபியவர்களின் சப்தத்தை அவர்கள் உடனடியாகக் கேட்டிருந்தால் நபியவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விரைந்துச் சென்று நபியவர்களைப் பாதுகாத்திருப்பார்கள். ஆனால், இவர்கள் நபியவர்களிடம் வருவதற்கு முன்னதாகவே நபியவர்களுக்கு அத்தனை காயங்களும் ஏற்பட்டு விட்டன் ஆறு அன்சாரிகள் கொல்லப்பட்டு விட்டனர். ஏழாவதாக ஓர் அன்சாரி தோழர் காயமடைந்து, குற்றுயிராக பூமியில் விழுந்து கிடந்தார் அவரும் சிறிது நேரத்தில் மரணித்தார். ஸஅது, தல்ஹா (ரழி) ஆகிய இருவர் மட்டும் எதிரிகளை நபி (ஸல்) அவர்களை நெருங்கவிடமால் எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

படையின் முன்அணியில் இருந்து சண்டை செய்து கொண்டிருந்த சிறப்புமிக்க நபித்தோழர்கள் நிலைமையறிந்து நபியவர்களிடம் விரைந்து வந்து, அவர்களைச் சுற்றி வலையாகப் பின்னி நின்று, எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக கடும் போர் புரிந்தனர். இவ்வாறு திரும்பிய தோழர்களில் முதலாமவர் நபியவர்களின் குகைத் தோழரான அபூபக்ர் (ரழி) ஆவார்கள்.

இதோ... அந்த தோழரின் அருமை மகளார் நமது அன்னை ஆயிஷா (ரழி) தனது தந்தை அபூபக்ர் ஸித்தீக் (ரழி) கூறியதாக அறிவிக்கிறார்கள்:

“உஹுத் போரன்று மக்கள் நபி (ஸல்) அவர்களை விட்டும் பல திசைகளில் சிதறிவிட்டார்கள். பின்பு நான்தான் முதலில் நபியவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போது அவர்களுக்கு முன் ஒருவர் அவர்களைப் பாதுகாத்தவராக எதிரிகளிடம் சண்டை செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். நான் என் மனதிற்குள் “நீ தல்ஹாதானே! எனது தந்தையும் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும். நீ தல்ஹாதானே! எனது தந்தையும் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும். எனக்குத்தான் வாய்ப்பு தவறிவிட்டது. எனது இனத்தை சேர்ந்த உனக்காவது நபியவர்களைப் பாதுகாக்கும் வாய்ப்புக் கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறிக்கொண்டேன். அதற்குள் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் (ரழி) பறவையைப் போன்று விரைந்து வந்து என்னை அடைந்தார். நாங்கள் இருவரும் நபியவர்களை நோக்கி விரைந்தோம். அங்கு நாங்கள் சென்றடையும் போது தல்ஹா (ரழி) நபியவர்களுக்கு முன் மயங்கி விழுகிறார்.