பக்கம் - 315 -



உஹுத் போரில் ஏற்பட்ட துக்ககரமான நிகழ்ச்சி இறைநம்பிக்கையாளர்களைப் பற்றி பிற மக்களிடம் இருந்த நற்பெயருக்கு பெரும் பங்கமாக அமைந்தது. முஸ்லிம்களைப் பற்றி பிறர் உள்ளத்தில் இருந்த அச்சம் அகன்று விட்டது. உள்நாட்டு வெளிநாட்டு பிரச்சனைகள் முஸ்லிம்களுக்கு அதிகரித்தன. அனைத்து திசைகளிலிருந்தும் ஆபத்துகள் மதீனாவைச் சூழ்ந்தன. யூதர்களும், நயவஞ்சகர்களும் கிராமத்து அரபிகளும் தங்களின் பகைமையை வெளிப்படையாகக் காட்டினர். இவர்களில் ஒவ்வொரு வகுப்பினரும் முஸ்லிம்களுக்குத் தீங்கிழைக்க நாடினர். மேலும், முஸ்லிம்களை முழுவதுமாக அழித்து விட வேண்டும் என்றும் ஆசைப்பட்டனர்.

உஹுத் போர் முடிந்து இரண்டு மாதங்கள்தான் ஆகியிருக்கும். அதற்குள் அஸத் கோத்திரத்தினர் மதீனாவின் மீது கொள்ளையிட திட்டம் தீட்டினர். இதற்குப் பின் அழல், காரா என்ற இரு வமிசத்தினர் ஹிஜ்ரி 4, ஸஃபர் மாதம் ஒரு சதித்திட்டம் தீட்டி 10 நபித்தோழர்களைக் கொன்றனர். மேலும், இம்மாதத்தில் ஆமிர் இப்னு துபைல் என்பவன் சில கிளையினரை தூண்டிவிட்டு 70 முஸ்லிம்களைக் கொல்ல வைத்தான். இச்சம்பவம் வரலாற்றில் பிஃரு மஊனா என்ற அறியப்படுகிறது. மேலும், இக்கால கட்டத்தில் நழிர் வமிச யூதர்கள் வெளிப்படையாக தங்களின் எதிர்ப்பைக் காட்டினர். இறுதியாக, ஹிஜ்ரி 4, ரபீஉல் அவ்வல் மாதம் நபி (ஸல்) அவர்களை கொன்று விடுவதற்கு சூழ்ச்சி செய்தனர். இதே ஆண்டு ஜமாத்துல் அவ்வல் மாதத்தில் கத்ஃபான் கோத்திரத்தார் மதீனாவின் மீது தாக்குதல் நடத்தத் துணிவு கொண்டனர். முஸ்லிம்கள் மீது பிறருக்கு முன்பிருந்த பயம் உஹுத் போரினால் அகன்றுவிட்டதால் ஒரு காலம் வரை முஸ்லிம்கள் மாற்றார்கள் மூலம் பல ஆபத்துகளுக்கும் அச்சுறத்தல்களுக்கும் இலக்காயினர்.

இருப்பினும் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் ஞானமிக்க நுட்பமான நடவடிக்கை இந்நிலைமையை மாற்றியது. முஸ்லிம்களுக்கு அவர்கள் இழந்த மதிப்பை மீட்டு தந்தது. உயர்வையும் கண்ணியத்தையும் அவர்களுக்கு புதிதாக அளித்தது. இந்த அடிப்படையில் நபியவர்கள் எடுத்த முதல் முயற்சி அபூஸுஃப்யானின் படையை விரட்டியடிக்க அவர்கள் எடுத்த நடவடிக்கையாகும். இதன் காரணமாக முஸ்லிம்கள் மதிப்பு சற்று பாதுகாக்கப்பட்டது. அவர்களுக்கு இருந்த உயர்வில் ஓரளவு தக்கவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேலும் பல தாக்குதல்களை நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள். இத்தாக்குதல்கள் முஸ்லிம்களுக்கு இழந்த கண்ணியத்தையும் மதிப்பையும் மீட்டு கொடுத்தது மட்டுமல்லாமல் அதைவிட அதிகமாகவே இப்போது மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தியது. அடுத்து வரும் பக்கங்களில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவர்களுக்கும் இடையில் நடந்த சில சம்பவங்களை நாம் பார்போம்.