பக்கம் - 326 -
“நஜ்து“ போர் (ஹிஜ் 4, ரபீவுல் ஆகிர் (அ) ஜுமாதா அல்ஊலா)

சண்டையும், உயிர்ப் பலியுமின்றி நழீர் போல் முஸ்லிம்களுக்குக் கிடைத்த வெற்றி முஸ்லிம்களின் வலிமையை மீண்டும் மதீனாவில் நிலைநாட்டியது. நயவஞ்சகர்கள் தங்களது சூழ்ச்சிகளை வெளிப்படுத்துவதைக் கைவிட்டனர். அதனால் முஸ்லிம்களுக்கு உள்நாட்டுக் குழப்பம் குறைந்தது. ஆகவே, இப்போது மதீனாவிற்கு வெளியில் விஷமம் செய்து வந்த கிராம அரபிகளின் அக்கிரமத்தை அடக்க நபி (ஸல்) அவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள். இந்த கிராம அரபிகள்தான் உஹுத் போருக்குப் பின் முஸ்லிம்களுக்கு பெரும் இன்னல்கள் விளைவித்து வந்தனர். அழைப்புப் பணிக்காக அனுப்பப்படும் குழுக்களை வஞ்சகமாகக் கொன்று குவித்தனர். இவ்வாறு செய்து வந்த இவர்களுக்கு, அடுத்தபடியாக மதீனாவில் தாக்குதல் நடத்தும் அளவுக்குத் துணிவும் பிறந்தது.

முஸ்லிம் குழுக்களுக்கு மோசடி செய்து வந்த அந்தக் கிராம அரபிகளைத் தண்டிப்பதற்கு முன் கத்ஃபான் கோத்திரத்தைச் சேர்ந்த ‘பனூ ஸஅலபா’ என்ற பிரிவினரும், ‘பனூ முஹாப்’ என்ற பிரிவினரும் மதீனாவின் மீது படையெடுக்க ஒன்று சேருகின்றனர் எனும் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. இந்த செய்தி கிடைத்ததும் உடனடியாக நபியவர்கள் படையை திரட்டிக்கொண்டு நஜ்து பகுதியிலுள்ள கிராமங்களுக்குச் சென்றார்கள். அங்குள்ள அனைத்து இடங்களையும், கிராமங்களையும் படையுடன் சுற்றி வந்தார்கள்.

முஸ்லிம்களின் வருகையை அறிந்த அந்த ஊர்வாசிகள், தங்களின் இல்லங்களிலிருந்து வெளியேறி மலை உச்சிக்குச் சென்று தப்பித்துக் கொண்டனர். இவ்வாறு அழிச்சாட்டியம் செய்யும் இந்தக் கூட்டங்களையெல்லாம் முஸ்லிம்கள் பதிலுக்கு மிரட்டி அவர்களது உள்ளங்களில் தங்களைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்திவிட்டு பாதுகாப்புடன் மதீனா திரும்பினர்.

மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக நடந்த குறிப்பிட்ட ஒரு போரைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருப்பதின் விவரமாவது: ஹிஜ்ரி 4, ரபீஉல் ஆகிர் அல்லது ஜுமாதா அல்ஊலா மாதம் ஒரு போர் நடைபெற்றது. அதற்கு ‘தாதுர் காஃ’ என்று கூறப்படும். இந்தப் போர் காலத்தின் சூழ்நிலைக்கேற்ப அவசியமான ஒன்றாக இருந்தது. ஏனெனில், உஹுதிலிருந்து திரும்பச் செல்லும் போது அபூஸுஃப்யான் அடுத்த வருடம் (ஹிஜ் 4ல்) பத்ரு மைதானத்தில் சந்திப்போம் என்று கூறி சென்றிருந்தார். அந்த நாளும் மிக நெருக்கமாக இருந்தது. இந்நேரத்தில் மதீனாவை முற்றிலுமாக காலி செய்துவிட்டு செல்வதும் உசிதமானதல்ல. ஏனெனில், கிராம வாசிகளின் அட்டகாசம் அத்துமீறி இருந்தது. இவர்களின் கொடுக்கை நறுக்காமல், இவர்களின் விஷமத்தனத்திற்கு முடிவு கட்டாமல் மதீனாவை காலியாக விட்டுச் செல்வது நல்லதல்ல. இவர்கள் மதீனா காலியாகி விட்டதை தங்களுக்கு வாய்ப்பாகக் கருதி மதீனாவின் மீது கொள்ளையிட அல்லது தாக்குதல் நடத்த வரலாம். எனவே, அபூஸுஃப்யானின் படையைப் பத்ரில் சந்திக்க செல்லும் முன் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்டி இவர்களை அடக்க வேண்டும் என நபியவர்கள் முடிவெடுத்தார்கள். அதற்குப் பின் கிராமவாசிகளை அவர்களது கிராமங்களுக்குச் சென்று அச்சுறுத்திவிட்டு நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பினார்கள். இப்பயணத்தில் சண்டை ஏதும் நடைபெறவில்லை. ஆக, இந்தப் போருக்கு வரலாற்று ஆசிரியர்கள் ‘தாதுர் காஃ’ என்று கூறுகின்றனர்.

ஆனால், இக்கூற்று சயல்ல! இப்போருக்கு ‘தாதுர் காஃ’ என்று சொல்வது தவறாகும். ஏனெனில் ‘தாதுர் காஃ’ போரில் அபூஹுரைராவும் அபூமூஸாவும் (ரழி) கலந்து கொண்டனர். அபூஹுரைரா (ரழி) கைபர் போருக்கு சில நாட்கள் முன்புதான் முஸ்லிமானார்கள். அவ்வாறே அபூமூஸாவும் நபி (ஸல்) அவர்களை கைபர் போரில்தான் சந்தித்தார்கள்.