பக்கம் - 327 -
கைபர் போருக்கு பின்புதான் ‘தாதுர் காஃ’ நடைபெற்றது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. கைபர் போர் ஹிஜ்ரி 7ஆம் ஆண்டில் நடைபெற்றது. எனவே, ஹிஜ்ரி 4ல் நடைபெற்ற யுத்தத்தை ‘தாதுர் காஃ’ என்று சொல்வது தவறாகும். இதற்கு மேலும் ஓர் ஆதாரத்தைப் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் தாதுர் காஃ போரில்தான் ‘ஸலாத்துல் கவ்ஃப்’ (அச்சம் ஏற்படும்போது தொழுதல்) முறைப்படி தொழுகை நடத்தினார்கள். இத்தொழுகை அஸ்ஃபான் போரில்தான் முதன் முதலில் அனுமதிக்கப்பட்டது. அஸ்ஃபான் போர் அகழ்ப் போருக்குப் பின் நடைப்பெற்றது. அகழ்ப் போர் ஹிஜ்ரி 5ன் இறுதியில் நடைபெற்றது. இதிலிருந்து ஹிஜ்ரி 4ல் நடந்த போரை தாதுர் காஃ என்று குறிப்பிடுவது தவறாகும். தாதுர் காஃ போர் வேறு, ஹிஜ்ரி 4ல் நடைபெற்ற போர் வேறு.

இரண்டாம் பத்ர் போர் (ஹிஜ் 4, ஷஃபான் மாதம், கி.பி. 626, ஜனவரி)

இவ்வாறு முஸ்லிம்கள் கிராமவாசிகளின் கொடுக்கை வெட்டி, அவர்களது விஷமத்தை ஒழித்து விட்டார்கள். இதற்குப் பின் பெரிய எதிரியான அபூ ஸுஃப்யானையும் குறைஷிகளையும் சந்திக்கத் தயாராகினர். ஏனெனில், உஹுத் போரில் குறிப்பிடப்பட்ட காலம் நெருங்கி விட்டது. அதன்படி மீண்டும் ஒருமுறை போர் செய்து, சத்தியவான்கள் யார்? யாருக்கு அல்லாஹ்வின் உதவி? என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். பிறகு 1500 தோழர்கள் மற்றும் 10 குதிரைகளுடன் பத்ரை நோக்கி புறப்பட்டார்கள். படையின் கொடி அலீ (ரழி) அவர்களிடம் இருந்தது. பத்ரில் சென்று குறைஷிகளின் வருகையை எதிர்பார்த்து தங்கியிருந்தார்கள்.

அபூஸுஃப்யான் 2000 மக்காவாசிகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார். இவர்களிடம் 50 குதிரைகள் இருந்தன. அபூஸுஃப்யான் மக்காவிலிருந்து ஒரு நாள் பயண தூரமுள்ள ‘மர்ருள் ளஹ்ரான்’ என்ற பகுதியிலுள்ள ‘மஜன்னா’ என்ற கிணற்றருகில் தங்கினார்.

அபூஸுஃப்யான் மக்காவிலிருந்து புறப்படும் போதே போரின் முடிவு எப்படி அமையும் என்று ஆழ்ந்து சிந்தித்தவராகவே பயணித்துக் கொண்டிருந்தார். இவரது உள்ளத்தில் அச்சம் குடிகொண்டது. இறுதியாக ‘மர்ருள் ளஹ்ரான்’ வந்தவுடன் அவரது உறுதி முற்றிலும் நிலைகுலைந்து விட்டது. அவர் திரும்பிவிட முடிவு செய்தவராக தனது தோழர்களிடம் “குறைஷியர்களே நல்ல பசுமையான செழிப்பான காலத்தில் நாம் போர் செய்யலாம். இது மிக பஞ்சமான ஆண்டு. எனவே இவ்வாண்டு நமக்கு ஏற்றமாகாது. நான் திரும்பிவிட நாடுகிறேன். நீங்களும் திரும்பி விடுங்கள்” என்று கூறினார்.

பொதுவாக, படையினர் அனைவரும் பயத்தால் உள்ளுக்குள் நடுங்கி கொண்டுதான் இருந்தனர். எனவேதான், அபூஸுஃப்யான் இந்த யோசனையைக் கூறியவுடன் பிடிவாதம் பிடிக்காமல், ஆட்சேபனை ஏதும் செய்யாமல் அனைவரும் திரும்பி விட்டனர்.