பக்கம் - 344 -
1) அனைவரும் முஸ்லிமாகி முஹம்மதுடைய மார்க்கத்தில் சேர்வது. அப்படி சேர்ந்தால் நாம் நமது உயிர், பொருள், பிள்ளைகள், பெண்கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்ளலாம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹம்மது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதர் என்பதும், அவரைப் பற்றி தவ்றாத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பதும் உங்களுக்கு தௌ;ளத் தெளிவாக தெரியும்.

2) நமது பிள்ளைகளையும் பெண்களையும் நாமே நமது கரத்தால் கொன்றுவிடவேண்டும். பிறகு வாளை உருவி முஹம்மதுடன் போர் புரிவோம் நாம் அவர்களை வெற்றி கொள்வோம் அல்லது நாம் அனைவரும் மரணமாகும் வரை அவருடன் போர் புரிவோம்.

3) சனிக்கிழமை வருவதை எதிர்பார்ப்போம். அன்று நாம் போர் புரியமாட்டோம் என்று முஸ்லிம்கள் எண்ணிக் கொண்டிருப்பார்கள். அந்நேரத்தில் அவர்களைத் திடீரெனத் தாக்குவோம்.

இவ்வாறு மூன்று கருத்துகளை கஅப் முன்வைத்தும் அதில் எந்த ஒன்றையும் யூதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கஅப் கடும் கோபமடைந்து, “உங்களில் ஒருவர் கூட வாழ்நாளில் ஒரு நாளும் உறுதியுடன் வாழந்ததில்லை” என்று கடுகடுத்தார். குரைளாவினர் இவ்வாறு தங்களது தலைவர் கஅபுடைய எந்த ஆலோசனையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியாக நபியவர்கள் கூறும் தீர்ப்பையே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர்.

இருப்பினும் சரணடைவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு என்ன தீர்ப்பளிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள தங்களுக்கு நண்பர்களாக இருந்த சில முஸ்லிம்களுடன் தொடர்பு கொண்டு அறிய விரும்பினர். ஆகவே, நபியவர்களிடம் தூதனுப்பி அபூலுபாபாவை தங்களிடம் அனுப்பும்படி கேட்டுக் கொண்டனர். அபூலுபாபா யூதர்களின் நட்புரீதியான ஒப்பந்தக்காரராக இருந்தார். இவருடைய பொருட்களும், பிள்ளைகளும் யூதர்களின் பகுதியில் இருந்தன. அபூலுபாபா யூதர்களைச் சந்தித்தவுடன் அவரிடம் பெண்களும், சிறுவர்களும் எழுந்து வந்து அழுதனர். இதைப் பார்த்து அவரது உள்ளம் இளகிவிட்டது. அவர்கள் “அபூலுபாபாவே! நாங்கள் நபியவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் நபியவர்கள் எங்களுக்கு என்ன தீர்ப்பளிப்பார்கள்?” என்றனர். அப்போது அபூலுபாபா “தனது கழுத்தைச் சீவுவது போல் செய்து காட்டி, அந்தத் தீர்ப்பு கொலை!” என்று சூசகமாகக் கூறினார்.

நபி (ஸல்) அவர்களின் இந்த இரகசிய முடிவை வெளிப்படுத்தி தவறு செய்து விட்டோம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மோசடி செய்து விட்டோம் என்று அபூலுபாபா உணர்ந்தார் வருந்தினார். எனவே, நபியவர்களைச் சந்திக்கச் செல்லாமல் மஸ்ஜிதுந் நபவிக்குச் சென்று தன்னை ஒரு தூணுடன் கயிற்றால் பிணைத்துக் கொண்டார். நபியவர்கள்தான் தன்னை அவிழ்த்துவிட வேண்டும், இனி ஒருக்காலும் குரைளாவினன் பூமிக்கு செல்லவே மாட்டேன் என்று சத்தியம் செய்து கொண்டார். நபியவர்கள் அபூலுபாபாவின் வருகையை எதிர்பார்த்திருந்தார்கள். இவன் செய்தி நபியவர்களுக்கு கிடைத்தவுடன் “அபூலுபாபா என்னிடம் நேரடியாக வந்து விஷயத்தை கூறியிருந்தால் நான் அவருக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டிருப்பேன். ஆனால், எப்போது அவர் அவருடைய விருப்பப்படி நடந்து கொண்டாரோ அல்லாஹ் அவரது பிழை பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வரை நான் அவரை அவிழ்த்துவிட முடியாது” என்றார்கள்.