பக்கம் - 351 -
நான் “அபூ ராஃபி! என்று சப்தமிட்டு அழைத்தேன். அவன் “யாரது?” என்று வியந்து கேட்டான். உடனே நான் சப்தம் வந்த திசையை நோக்கிப் பயந்தவனாகவே எனது வாளை வீசினேன். ஆனால், எனது முயற்சி பலனளிக்கவில்லை. அவன் கூச்சலிடவே நான் உடனடியாக அறையிலிருந்து வெளியேறி ஒளிந்து கொண்டேன். சிறிது நேரம் கழித்து திரும்ப அறைக்குள் சென்று “அபூ ராஃபியே! சற்று நேரத்திற்கு முன் இங்கு என்ன சப்தம்?” என்றேன். அதற்கவன் “உனது தாய்க்கு நாசம் உண்டாகட்டும். சற்று நேரத்திற்கு முன் ஒருவன் என்னைக் கொல்ல வந்தான்” என்றான். உடனே நான் மற்றொரு முறை அவனை வாளால் வெட்டிக் காயப்படுத்தினேன். ஆனால், அவனைக் கொல்ல முடியவில்லை. பின்பு வாளால் அவனது வயிற்றில் குத்தினேன். அதன் நுனி முதுகுப்புறமாக வெளிவந்தது. அதனால் நான் அவனை இம்முறை நிச்சயமாக கொன்றுவிட்டேன் என்று தெரிந்து கொண்டேன். பின்பு ஒவ்வொரு கதவாக திறந்து கொண்டு ஓர் ஏணியின் வழியாக கீழே இறங்கும் போது ஏணிப்படிகள் முடிந்துவிட்டன என்று எண்ணிக் காலை வைக்கும்போது தவறி கீழே விழுந்துவிட்டேன். அதில் எனது கெண்டைக் கால் உடைந்து விட்டது. தலைப்பாகையால் என் காலைக் கட்டிக் கொண்டு நடந்து வந்து வாசலருகில் உட்கார்ந்து கொண்டேன்.

அவனைக் கொன்று விட்டேன் என்று உறுதியாகத் தெரியும்வரை வெளியில் செல்லாமல் இன்றிரவை இங்கேயே கழிப்பது என்று முடிவு செய்தேன். காலையில் மரணச் செய்தி அறிவிப்பவன் “ஜாஸ் மாநிலத்தின் மாபெரும் வியாபாரப் பிரமுகர் அபூ ராஃபி கொல்லப்பட்டு விட்டார்” என்று அறிவித்தான். இதை நான் எனது தோழர்களிடம் வந்து கூறினேன். “வெற்றி கிடைத்து விட்டது, அல்லாஹ் அபூ ராஃபியைக் கொன்று விட்டான்” என்று கூறினேன். இதற்குப் பின் நான் நபியவர்களிடம் சென்று முழு விவரத்தையும் கூறினேன். அப்போது நபியவர்கள் உனது காலை நீட்டுவாயாக! என்று கூறினார்கள். நான் எனது காலை நீட்டியவுடன் நபியவர்கள் அதன் மீது தடவினார்கள். அது முற்றிலும் குணமடைந்து விட்டது. (ஸஹீஹுல் புகாரி)

இதுவரை நாம் கூறிய இந்நிகழ்ச்சி இமாம் புகாரி (ரஹ்) அறிவித்ததாகும். இப்னு இஸ்ஹாக் (ரஹ்) இதற்கு சற்று மாற்றமாக அறிவிக்கிறார்: அதாவது, அனைத்து நபித்தோழர்களும் கோட்டைக்குள் சென்று அபூ ராஃபியைக் கொல்வதில் பங்கெடுத்தனர். அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரழி) என்ற தோழர்தான் அவனை வாளால் வெட்டினார். அப்துல்லாஹ் இப்னு அதீக்கின் கெண்டைக்கால் உடைந்து விட்டதால் மற்ற தோழர்கள் அவரைச் சுமந்து கொண்டு கோட்டைக்குள் தண்ணீர் வருவதற்காக இருந்த வழியின் உள் பகுதிக்குள் நுழைந்து கொண்டனர். கோட்டையில் இருந்த யூதர்கள் நெருப்பை மூட்டி விரைந்து சென்று பல இடங்களில் தேடியும் அவர்களால் நபித்தோழர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்பு யூதர்கள் அனைவரும் தங்கள் தலைவன் நிலையை அறிய திரும்பினர். அதற்குப் பின் நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு அதீக்கை சுமந்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தனர். (இப்னு ஹிஷாம்)

இச்சம்பவம் ஹிஜ்ரி 5 துல்கஅதா அல்லது துல்ஹஜ் மாதத்தில் நடைபெற்றது. (ரஹ்மதுல் லில் ஆலமீன்)

மேற்கூறப்பட்ட அகழ் மற்றும் குரைளா போர்களிலிருந்து ஓய்வு பெற்றபோது அமைதிக்கும், சமாதானத்திற்கும் பணியாமல் இருந்த கிராம அரபிகளையும் மற்ற அரபுக் குலத்தவர்களையும் கண்டித்து பாடம் கற்பிக்கும் விதமாக பல தாக்குதல்களை நபி (ஸல்) அவர்கள் கையாண்டார்கள். அவற்றின் விவரம் வருமாறு: