பக்கம் - 373 -
உர்வாவின் பேச்சு அபூபக்ர் (ரழி) அவர்களுக்குச் சினமூட்டியது. “நீ லாத்தின் மர்மஸ்தானத்தைச் சப்பு! நாங்களா இவரை விட்டுவிட்டு ஓடி விடுவோம்?” என்று கர்ஜித்தார்கள். அதற்கு உர்வா “இவர் யார்?” என்றார். “அபூபக்ர்” என கூடியிருந்தோர் கூறினர். அதற்கு உர்வா “எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீ எனக்கு ஓர் உதவி செய்திருக்கிறாய். நான் அதற்கு எந்தப் பகரமும் செய்யவில்லை. அப்படி மட்டும் இல்லையென்றால் நான் உனக்கு நல்ல பதில் கூறியிருப்பேன்” என்றார். மேலும், நபியவர்களிடம் உர்வா பேசும் போது ஒவ்வொரு பேச்சுக்கும் நபியவர்களின் தாடியைப் பிடித்துப் பிடித்து பேசினார். நபி (ஸல்) அவர்களின் அருகில் முகீரா இப்னு ஷுஃபா (ரழி) நின்றிருந்தார்கள். அவரது கையில் உறையிடப்பட்ட வாள் ஒன்று இருந்தது. நபியவர்களின் தாடியை உர்வா பிடிக்கும் போதெல்லாம் அந்த உறையிடப்பட்ட வாளைக் கொண்டு உர்வாவின் கையில் அடித்து “நபியவர்களின் தாடியை விட்டு உனது கையை அகற்றிக் கொள்” என்று கூறினார்.

உர்வா தனது தலையை உயர்த்தி “இவர் யார்” என்றார். மக்கள் “முகீரா இப்னு ஷுஃபா” என்றனர். “ஓ வாக்குத் தவறியவனே! நீ செய்த மோசடிக் குற்றத்திற்கு நான்தானே பரிகாரம் செய்தேன்” என்று முகீராவை உர்வா பழித்தார். இவ்வாறு உர்வா கூறக் காரணம்: முகீரா இஸ்லாமை ஏற்பதற்கு முன் ஒரு கூட்டத்தினருடன் நட்பு வைத்திருந்தார். சமயம் பார்த்து அவர்களைக் கொன்று பொருட்களைக் கொள்ளையடித்து விட்டார். அதற்கு சிறிது காலத்திற்குப் பின்பு நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபியவர்கள் “நீர் முஸ்லிமாவதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், நீ கொள்ளை அடித்த பொருட்களுக்கு நான் பொறுப்பல்ல” என்று கூறிவிட்டார்கள். இக்குற்றத்திற்குரிய பரிகாரத்தை உர்வாதான் நிறைவேற்றினார் ஏனெனில் முகீராவுடைய தந்தை, உர்வாவின் சகோதரராவார்.

பேச்சுவார்த்தைகளுக்கு இடையில் நபித்தோழர்களையும் அவர்கள் நபியவர்களுக்குச் செய்யும் கண்ணியத்தையும் நன்கு கவனித்து உர்வா பிரமிப்படைந்தார். அங்கிருந்து தனது நண்பர்களிடம் வந்த பின் இது குறித்து அவர் தனது இனத்தவர்களிடம் விமர்சித்தார். “எனது கூட்டத்தினரே! நான் பல அரசர்களிடம் சென்றிருக்கின்றேன். கைஸர், கிஸ்ரா, நஜ்ஜாஷி என பல மன்னர்களை பார்த்திருக்கின்றேன். ஆனால், முஹம்மதின் தோழர்கள் முஹம்மதைக் கண்ணியப்படுத்துவது போன்று எந்த ஓர் அரசனின் தோழர்களும் தங்கள் அரசரைக் கண்ணியப் படுத்துவதை நான் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் ஏதாவது ஒரு கட்டளையிட்டால் அதை உடனடியாக அவர்கள் செய்கிறார்கள். அவர் ‘உழு’ செய்யும் தண்ணீரைப் பிடிப்பதற்குக் கூட போட்டியிட்டுக் கொள்கின்றனர். அவர் பேசினால் அனைவரும் அமைதியாகி விடுகின்றனர். அவர் மீதுள்ள கண்ணியத்தால் அவரை அவர்கள் நேருக்கு நேர் கூர்ந்து பார்ப்பதில்லை. ஆக, நான் உங்களுக்கு முன் நேரான ஒரு திட்டத்தை சமர்ப்பித்து விட்டேன். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறி உர்வா தனது பேச்சை முடித்தார்.

அல்லாஹ்வின் ஏற்பாடு

போர் வெறிபிடித்த குறைஷி வாலிபர்கள் தங்களின் தலைவர்கள் சமாதான உடன்படிக்கையில் ஆர்வமாக இருப்பதை விரும்பவில்லை. உடனே, அதைத் தடுக்க வேண்டுமென ஆலோசித்தனர். அதன்படி இரவில் முஸ்லிம்களின் கூடாரத்திற்குள் புகுந்து போரைத் தூண்டும் சதி செயல்களைச் செய்ய முடிவெடுத்தனர். இம்முடிவை நிறைவேற்றுவதற்கு எழுபது அல்லது எண்பது நபர்கள் புறப்பட்டு ‘தன்யீம்’ மலை வழியாக முஸ்லிம்களின் கூடாரத்தை நோக்கி முன்னேறினர். ஆனால், நபியவர்கள் நியமித்த பாதுகாப்புப் படையின் தளபதியான முஹம்மது இப்னு மஸ்லமா, வந்த எதிரிகள் அனைவரையும் சுற்றி வளைத்து கைது செய்தார். எனினும், நபி (ஸல்) அவர்கள் சமாதானத்தில் ஆர்வம் கொண்டு அனைவரையும் மன்னித்து விடுதலை செய்து விட்டார்கள். இது குறித்து பின்வரும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான்: