பக்கம் - 374 -
மக்காவின் சமீபமாக அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியைக் கொடுத்ததன் பின்னர், அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்களுடைய கைகளையும் அவர்களை விட்டும் அவனே தடுத்தான். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 48:24)

குறைஷிகளை சந்திக்க முஸ்லிம் தூதர்...

இந்நேரத்தில் நபி (ஸல்) தனது நிலையையும், தனது நோக்கத்தையும் உறுதியாகத் தெளிவுபடுத்திக் கூறவும், குறைஷிகளிடம் ஒரு தூதரை அனுப்ப விரும்பியும் உமரை அழைத்தார்கள். ஆனால், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு துன்பம் ஏற்பட்டால் எனக்காக கோபப்படும் அதீ இப்னு கஅப் கிளையைச் சேர்ந்த எவரும் அங்கில்லை. எனவே, உஸ்மான் இப்னு அஃப்ஃபானை அனுப்புங்கள். நீங்கள் விரும்பும் விஷயத்தை அவர் சரியான முறையில் குறைஷிகளிடம் எடுத்து வைப்பார்” என்றார் உமர் (ரழி). நபியவர்கள் உஸ்மானை அழைத்து “நீர் குறைஷிகளிடம் சென்று, நாம் போருக்காக வரவில்லை உம்ராவிற்காகத்தான் வந்திருக்கிறோம் என்று எடுத்துச் சொல்லுங்கள்! பிறகு அவர்களை இஸ்லாமின் பக்கம் அழையுங்கள். மேலும், மக்காவிலிருக்கும் முஸ்லிம்களை சந்தித்து வெற்றி நமக்குத்தான் என்ற நற்செய்தியைக் கூறுங்கள்! அல்லாஹ் அவனது மார்க்கத்தை மக்காவில் ஓங்கச் செய்வான். ஆகவே, யாரும் இறை நம்பிக்கையை மறைத்து வாழ வேண்டிய அவசியமேற்படாது என்றும் அவர்களுக்கு சொல்லுங்கள்!” என்றார்கள்.

உஸ்மான் (ரழி) அங்கிருந்து புறப்பட்டு ‘பல்தஹ்’ என்ற இடத்தை அடைந்த போது, அங்கிருந்த குறைஷிகள் “உஸ்மானே! நீர் எங்கு செல்கின்றீர்!” என்றனர். அதற்கு உஸ்மான் (ரழி) சில விஷயங்களைக் கூறி அதை சொல்வதற்காகத்தான் நபியவர்கள் என்னை அனுப்பினார்கள் என்றார். அதற்கு குறைஷிகள், “நீர் கூறியதை நாங்கள் கேட்டு விட்டோம். நீர் உமது நோக்கத்தை நிறைவேற்ற செல்லலாம்” என்றனர். அவையில் இருந்த அபான் இப்னு ஸயீத் இப்னு அல்ஆஸ் என்பவர் எழுந்து உஸ்மான் (ரழி) அவர்களை வரவேற்றார். மேலும், தனது குதிரைக்குக் கடிவாளமிட்டு, அதில் தனக்குப் பின்னால் உஸ்மானை அமரச் செய்து, அவருக்கு அடைக்கலமும் கொடுத்து மக்காவிற்குள் அழைத்து வந்தார். மக்கா வந்தவுடன் நபி (ஸல்) கூறி அனுப்பிய செய்தியைக் குறைஷித் தலைவர்களிடம் உஸ்மான் (ரழி) விவரித்தார். உஸ்மான் பேசி முடித்தவுடன் குறைஷிகள் “நீங்கள் கஅபாவை வலம் வந்து கொள்ளுங்கள்” என்றனர். ஆனால், “நபி (ஸல்) கஅபாவை வலம் வரும் வரை நான் வரமாட்டேன்” என்று உஸ்மான் மறுத்துவிட்டார்.