பக்கம் - 420 -
மதீனா திரும்பும் வழியில் ஓர் இரவு முற்பகுதியில் பயணித்து விட்டு பிற்பகுதியில் ஓய்வெடுத்தார்கள். ஓய்வெடுப்பதற்கு முன் பிலாலிடம் “இன்றிரவு தூங்காமல் எங்களுக்கு பாதுகாப்பாய் இருங்கள்” என்று கூறினார்கள். ஆனால், வாகனத்தில் சாய்ந்தவராக அமர்ந்திருந்த பிலாலுக்குத் தூக்கம் மிகைத்து விட்டது. சூரியன் உதயமாகும் வரை யாரும் விழிக்கவில்லை. முதன்முதலாக நபியவர்களே விழித்தார்கள். அங்கிருந்து புறப்பட்டு வேறோர் இடத்திற்கு வந்து ஃபஜ்ர் தொழுதார்கள். சிலர் இச்சம்பவம் வேறொரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டது என்றும் கூறுகின்றனர். (ஜாதுல் மஆது)

கைபர் போரின் பல நிகழ்வுகளைக் கவனித்துப் பார்க்கும்போது நபி (ஸல்) அவர்கள் ஸஃபர் மாதம் இறுதி அல்லது ரபீஉல் அவ்வல் ஆரம்பத்தில் மதீனாவை நோக்கித் திரும்பியிருக்க வேண்டும் என்றே தெரிய வருகிறது.

அபான் இப்னு ஸஈத் படைப்பிரிவு

சங்கைமிக்க மாதங்கள் முடிந்ததற்குப் பின், வீரர்கள் யாருமின்றி மதீனாவைக் காலியாக வைப்பது முறையல்ல என்பதை ஒரு ராணுவத் தலைவர் அறிந்து வைத்திருப்பதை விட நபி (ஸல்) நன்றாகவே அறிந்திருந்தார்கள். ஏனெனில், மதீனாவைச் சுற்றியிருந்த கிராம அரபிகள், முஸ்லிம்கள் எப்பொழுது அயர்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர். எனவேதான் கைபருக்கு போய்க் கொண்டிருக்கும் வழியிலேயே அபான் இப்னு ஸஈதின் தலைமையின் கீழ் நஜ்தில் உள்ள கிராம அரபிகளை அச்சுறுத்துவதற்காக ஒரு படையை நபி (ஸல்) அனுப்பி விட்டார்கள். நபியவர்கள் கொடுத்த கடமையை நிறைவேற்றிவிட்டு கைபர் நோக்கி அபான் இப்னு ஸஈத் (ரழி) திரும்பினார். அதற்குள் நபியவர்கள் கைபரை வெற்றி கொண்டு விட்டார்கள்.

அநேகமாக இப்படையை ஹிஜ்ரி 7, ஸஃபர் மாதத்தில் அனுப்பியிருக்க வேண்டும். இப்போரைப் பற்றிய சில குறிப்புகள் புகாரியில் இடம் பெற்றுள்ளது. ஆனால், புகாரியின் விரிவுரையாளர் இப்னு ஹஜர் (ரஹ்) “இப்போரைப் பற்றிய சரியான தகவல் தனக்குத் தெரியவில்லை” என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.(ஸஹீஹுல் புகாரி, ஃபத்ஹுல் பாரி)