பக்கம் - 434 -
முஃதா போர்க்களச் செய்திகளை அல்லாஹ் வஹியின் மூலமாக நபியவர்களுக்கு உடனுக்குடன் தெரிவித்தான். போரின் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முதலில் கொடியை ஜைது ஏந்தினார் அவர் கொல்லப்பட்டார் இரண்டாவதாக ஜஅஃபர் ஏந்தினார் அவரும் கொல்லப்பட்டார் மூன்றாவதாக அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ஏந்தினார் அவரும் கொல்லப்பட்டார் -இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போது நபியவர்களின் கண்களிலிருந்து நீர் வழிந்தோடியது- இதற்குப் பின் கொடியை அல்லாஹ்வின் வாள்களில் ஒரு வாள் ஏந்தியது அல்லாஹ் அவர் மூலமாக முஸ்லிம்களுக்கு வெற்றியளித்தான்.” (ஸஹீஹுல் புகாரி)

சண்டை ஓய்கிறது

முஸ்லிம் வீரர்கள் தங்களது முழு வீரத்தையும், திறமையையும், துணிவையும் வெளிக் கொணர்ந்தாலும் கடல் போன்ற மிகப் பயங்கரமான எதிரிப் படைகளைச் சமாளிப்பது மிகச் சிரமமாகவே இருந்தது. இதையறிந்த காலித் இப்னு அல்வலீது (ரழி) முஸ்லிம்களை ஆபத்திலிருந்து தந்திரமாகப் பாதுகாக்க சரியான திட்டம் ஒன்றைத் தீட்டினார்.

போரின் முடிவைப் பற்றி பலவிதமான கருத்துகள் கூறப்படுகின்றன. அந்த அனைத்து அறிவிப்புகளையும் ஒன்று திரட்டி நாம் ஆய்வு செய்யும்போது நமக்குப் புலப்படுவதாவது: கொடியை ஏந்திய அன்றைய தினம் மாலை வரை ரோம் நாட்டுப் படைக்கு முன்பாக மிகத் துணிச்சலாக காலித் (ரழி) எதிர்த்து நின்றார். முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கு ஒரு போர் தந்திரத்தைக் கையாண்டார். அது ரோமர்களின் உள்ளங்களில் கடுமையான பயத்தை உண்டு பண்ணியது. அதாவது, முஸ்லிம்கள் பின்னோக்கிச் செல்லும்பொழுது ரோமர்கள் விரட்ட ஆரம்பித்தால் அவர்களிடமிருந்து தப்பிப்பதென்பது மிகக் கடினமே என காலித் (ரழி) நன்கு விளங்கியிருந்தார்.

எனவே, மறுநாள் படைக்கு முற்றிலும் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கினார். படையின் முற்பகுதியை பிற்பகுதியாகவும், வலப்பக்கத்தில் உள்ளவர்களை இடப்பக்கத்திலும் மாற்றி அமைத்தார். மறுநாள் காலை போர் தொடங்கியபோது முஸ்லிம்களின் புதிய அமைப்பைப் பார்த்த எதிரிகள் தங்களுக்கு முன் நேற்று இல்லாத புதிய படை இருப்பதைப் பார்த்தவுடன் இவர்களுக்கு உதவிப்படை வந்திருக்கின்றது என்று கூற ஆரம்பித்தனர். சிறுகச் சிறுக அவர்களது உள்ளத்தை அச்சம் ஆட்கொண்டது.

சிறிது நேரம் இரு தரப்பினரும் சண்டையிட்டு கொண்டிருக்கும் போதே தனது படையில் எவ்வித மாற்றமும் ஏற்படாத அளவிற்கு முற்றிலும் பாதுகாப்புடன் படையை பின்னோக்கி அழைத்துச் சென்றார். முஸ்லிம்கள் ஏதோ சதி செய்ய நாடுகின்றனர் என்று எண்ணிய ரோம் வீரர்கள் முஸ்லிம்களைப் பின்தொடர்வதை விட்டுவிட்டு அவர்களும் பின்வாங்கினர். இவ்வாறு முஸ்லிம்களை விரட்டும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தங்களது நாடுகளுக்கு எதிரிகள் திரும்பி விட்டனர். இவ்வாறு முஸ்லிம்கள் எவ்வித ஆபத்துமின்றி மதீனா வந்து சேர்ந்தனர். (ஃபத்ஹுல் பாரி, ஜாதுல் மஆது)