பக்கம் - 452 -
‘ஸலாத்துல் ஃபத்ஹ்’ அல்லது ‘ஸலாத்துஷ் ஷுக்ர்“

அன்றைய தினம் நபி (ஸல்) உம்மு ஹானி பின்த் அபூதாலிப் (ரழி) அவர்களின் வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு எட்டு ரகஅத்துகள் தொழுதார்கள். அல்லாஹ் அவர்களுக்களித்த வெற்றியை முன்னிட்டு நன்றி செலுத்தும் பொருட்டு தொழுத தொழுகை என்பதால் இந்தத் தொழுகையை ‘ஸலாத்துல் ஃபத்ஹ்’ (வெற்றிக்கான தொழுகை) அல்லது ‘ஸலாத்துஷ் ஷுக்ர்’ (நன்றி தொழுகை) என்று கூறலாம். ஆனால் சிலர், நபி (ஸல்) இத்தொழுகையைத் தொழுத நேரம் ‘ழுஹா’ (முற்பகல்) நேரமாக இருந்ததால் இதனை ‘ஸலாத்துழ் ழுஹா’ என எண்ணிக் கொள்கின்றனர்.

உம்மு ஹானி (ரழி) தனது கணவன் இரண்டு சகோதரர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு வழங்கியிருந்தார். இவ்விருவரையும் கொன்றுவிட அலீ (ரழி) விரும்பினார்கள். ஆனால், இவ்விருவரையும் வீட்டிற்குள் வைத்துக் கொண்டே உம்மு ஹானி (ரழி) வீட்டைத் தாழிட்டு விட்டார்கள். நபி (ஸல்) வீடு வந்தவுடன் அவ்விருவருக்காக பாதுகாப்புக் கோரினார்கள். அதற்கு நபி (ஸல்) “உம்மு ஹானியே! நீங்கள் பாதுகாப்புத் தந்தவர்களுக்கு நாமும் பாதுகாப்பை வழங்குகிறோம்” என்று கூறினார்கள்.

பெருங்குற்றவாளிகளைக் கொல்ல கட்டளையிடுதல்

நபி (ஸல்) இன்றைய தினம் ஒன்பது கொடுங்காஃபிர்களை அவர்கள் கஅபாவின் திரைக்குள் நுழைந்தாலும் கொல்லப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். அவர்களின் பெயர்கள்: 1) அப்துல் உஜ்ஜா இப்னு கதல், 2) அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபூ சரஹ், 3) இக்மா இப்னு அபூஜஹ்ல், 4) ஹாரிஸ் இப்னு நுஃபைசல் இப்னு துஹப், 5) மகீஸ் இப்னு சுபாபஹ், 6) ஹபார் இப்னு அல் அஸ்வத், 7, 8) இப்னு கத்தலின் இரண்டு அடிமைப் பாடகிகள், 9) அப்துல் முத்தலிப் வம்சத்திற்குச் சொந்தமான ‘சாரா’ எனும் அடிமை. இப்பெண்ணிடம்தான் ஹாதிப் அனுப்பிய ராணுவ இரகசிய கடிதம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களைப் பற்றியுள்ள குறிப்புகள் அடுத்து வருகின்றன.

அப்துல்லாஹ் இப்னு ஸஅதை உஸ்மான் (ரழி) அழைத்து வந்து சிபாரிசு செய்ய நபி (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். எனவே, அவர் உயிர் பாதுகாக்கப்பட்டது. இவர் இதற்கு முன் ஒருமுறை இஸ்லாமை ஏற்று ஹிஜ்ரத் செய்து மதீனா வந்திருந்தார். சில காலங்கள் அங்கு தங்கிய பின் இஸ்லாமை விட்டு வெளியேறி மக்கா வந்துவிட்டார். இவர் நபியின் அவையில் தான் இப்போது முஸ்லிமாகி விடுவதாக அறிவித்தார். ஆனால், தங்களது தோழர்களில் யாராவது ஒருவர் அவரை கொன்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நபி (ஸல்) இருந்ததால் அவரது இஸ்லாமை ஏற்க தயக்கம் காட்டினார்கள். பின்பு சிறிது நேரம் கழித்து அவரது இஸ்லாமை நபி (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். அப்துல் உஜ்ஜா இப்னு கத்தல் கஅபாவின் திரையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டான். நபித்தோழர் ஒருவர் நபியிடம் வந்து “என்ன செய்வது?” என்று கேட்டார். “அவனைக் கொன்று விடவேண்டியதுதான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியவுடன் அவர் அவனைக் கொன்று விட்டார்.

மகீஸ் இப்னு சபாபா- இவன் ஏற்கனவே முஸ்லிமாக இருந்தான். ஓர் அன்சாரித் தோழரை கொன்றுவிட்டு மதம் மாறி முஷ்ரிக்குகளுடன் சேர்ந்து கொண்டான். இவனை நுபைலா இப்னு அப்துல்லாஹ் (ரழி) என்பவர் கொன்றொழித்தார்.

ஹாரிஸ் இப்னு நுஃபைல்- இவன் மக்காவில் நபியவர்களை அதிகம் துன்புறுத்திக் கொண்டிருந்தான். இவனை அலீ (ரழி) கொன்றார்கள்.