பக்கம் - 453 -
ஹப்பார் இப்னு அஸ்வத்- இவர்தான் நபி (ஸல்) அவர்களின் மகள் ஜைனப் (ரழி) ஹிஜ்ரத் செய்து மதீனா சென்றபோது வழிமறித்து தனது ஈட்டியால் குத்தினார் இதனால் அவர்கள் அமர்ந்திருந்த (கஜாவா) ஒட்டகத் தொட்டியிலிருந்து கீழே விழுந்தார்கள் அவர்களது வயிற்றில் காயமேற்பட்டு கரு கலைந்துவிட்டது. இவர் மக்கா வெற்றியின் போது அங்கிருந்து தப்பி ஓடினார் பின்பு சில காலம் கழித்து இஸ்லாமை ஏற்றார்.

மற்ற இப்னு கத்லுடைய இரு அடிமைப் பாடகிகளில் ஒருத்தி கொலையுண்டாள். மற்றவள் முஸ்லிம் ஒருவரால் அடைக்கலம் தரப்பட்டு பின்னர் இஸ்லாமை ஏற்றார். அவ்வாறே ‘சாரா’ என்ற அடிமைப் பெண்ணும் அடைக்கலமாகி இஸ்லாமைத் தழுவினார்.

அறிஞர் இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: ஹாரிஸ் இப்னு துலாத்தில் அல்குஸாயீ என்பவனையும் கொல்லும்படி நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். எனவே, அவனை அலீ (ரழி) கொன்றொழித்தார்கள் என அபூ மஃஷக் (ரழி) கூறுகிறார்.

பிரபல கவிஞர் கஅப் இப்னு ஜுஹைரையும் கொல்லும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள். ஆனால், இவர் நபி (ஸல்) அவர்கள் சமூகம் வந்து இஸ்லாமை ஏற்று தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டார். இவரைப் பற்றிய விரிவான செய்தி பின்னால் வரவிருக்கின்றது.

இவ்வாறே ஹம்ஜா (ரழி) அவர்களைக் கொலை செய்த வஹ்ஷியையும் கொன்றுவிட கட்டளையிடப்பட்டது. பின்னர் இஸ்லாமைத் தழுவியதால் மன்னிக்கப்பட்டது. அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பாவும் கொலைப் பட்டியலில் இருந்தார். அவரும் இஸ்லாமை ஏற்றதால் மன்னிக்கப்பட்டார். இப்னு கதலின் அடிமைப் பெண் அர்னப் என்பவளும் கொலையுண்டாள் என இமாம் ஹாகிம் (ரஹ்) குறிப்பிடுகின்றார். கொலையுண்டவர்களில் உம்மு ஸஅத் என்பவரும் உண்டு என இப்னு இஸ்ஹாக் (ரஹ்) குறிப்பிடுகின்றார். இந்த கணக்கின்படி எட்டு ஆண்களும் ஆறு பெண்களும் இப்பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். ஆனால், இங்கு கூறப்பட்ட அர்னப், உம்மு ஸஅத் இருவரும் இப்னு கத்தலின் இரண்டு பாடகிகளாக இருக்கலாம். அவ்விருவருடைய பெயர்கள் அல்லது புனைப் பெயர்களில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் தனித் தனியாகக் கூறப்பட்டிருக்கலாம். (இப்னு ஹஜர் (ரஹ்) கூற்று முடிவுற்றது.) (ஃபத்ஹுல் பாரி)

ஸஃப்வான் இப்னு உமய்யா, ஃபழாலா இப்னு உமைய்யா இஸ்லாமைத் தழுவுதல்

ஸஃப்வான் குறைஷிகளின் பெருந்தலைவர்களில் ஒருவராக இருந்தும் அவரைக் கொல்ல வேண்டுமென்று நபி (ஸல்) கட்டளையிடவில்லை. இருப்பினும் அவர் பயந்து மக்காவிலிருந்து ஓட்டம் பிடித்தார். அவருடைய முன்னாள் நண்பர் உமைர் இப்னு வஹப் அல் ஜும நபியிடம் அவருக்காக (பாதுகாப்பு) அபயம் தேடினார். நபி (ஸல்) அதனை ஏற்று மக்காவுக்குள் வரும் போது தாம் அணிந்திருந்த தலைப்பாகையைக் கொடுத்தனுப்பினார்கள். உமைர் (ரழி) அதனை பெற்றுக் கொண்டு ஸஃப்வானைத் தேடிப் புறப்பட்டார். ‘ஜுத்தா’ எனும் கடற்கரையில் யமன் நோக்கிய பயணத்திற்கு ஸஃப்வான் ஆயத்தமான போது உமைர் (ரழி) அவரைச் சந்தித்து நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார். ஸஃப்வான் நபியிடம் தனக்கு இரண்டு மாத கால அவகாசம் வேண்டுமெனக் கோரினார். அதற்கு நபி (ஸல்) நான்கு மாத கால அவகாசம் தருவதாக மொழிந்தார்கள். சில நாட்களுக்கு பின் ஸஃப்வான் இஸ்லாமைத் தழுவினார். இவருடைய மனைவியோ இவருக்கு முன்பே இஸ்லாமை ஏற்றிருந்தார். நபி (ஸல்) இருவரையும் பழைய திருமண உறவைக் கொண்டே சேர்த்து வைத்தார்கள்.