பக்கம் - 454 -
ஃபழாலா- இவர் மிக்க துணிச்சலானவர். நபி (ஸல்) அவர்களைக் கொல்வதற்காகக் கிளம்பினார். நபியவர்களின் அருகில் வந்தவுடன் இவர் என்ன எண்ணத்தில் வந்துள்ளார் என்பதை வெளிச்சமாக்கிக் காட்டினார்கள். இதைச் செவிமடுத்த ஃபழாலா இவர் உண்மையான திருத்தூதர்தான் என விளங்கி இஸ்லாமை ஏற்றார்.

நபியவர்களின் சொற்பொழிவு

மக்கா வெற்றி கொண்ட இரண்டாம் நாள் மக்களுக்கு நபி (ஸல்) சொற்பொழிவாற்றினார்கள். அல்லாஹ்வை அவனுக்குரிய சிறப்புகள், தன்மைகள் ஆகியவற்றால் புகழ்ந்து மேன்மைப்படுத்திய பின் உரை நிகழ்த்தத் தொடங்கினார்கள். “மக்களே! நிச்சயமாக அல்லாஹ் வானங்கள், பூமியை படைத்த அன்றே மக்காவுக்கு அளப்பெரும் கண்ணியம் வழங்கியிருப்பதால் மறுமை நாள் வரை கண்ணியம் பொருந்தியதாகவே கருதப்பட வேண்டும். அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பிக்கை கொண்டுள்ள யாரும் அங்குக் கொலை புரிவதோ, மரம் செடி கொடிகளை அகற்றுவதோ கூடாது. நபி இங்கு போர் புரிந்தார்கள் என்று முன்னுதாரணம் காட்டினால் நீங்கள் அவருக்குச் சொல்லுங்கள், நிச்சயமாக அல்லாஹ் அவனது தூதருக்குத்தான் இந்த சிறப்புத் தகுதியை வழங்கியிருக்கின்றான் உங்களுக்கு அந்த உரிமையோ தகுதியோ அவன் வழங்க வில்லை மேலும் எனக்குப் பகல்பொழுதின் ஒரு குறிப்பிட்ட குறுகிய நேரத்திற்குத்தான் அனுமதிக்கப்பட்டது. அதன்பின் அதற்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியம் நேற்று அதற்குரிய கண்ணியத்தைப் போன்றே இன்று முதல் மீண்டும் திரும்பிவிட்டது. இங்குள்ளவர்கள் இங்கு வராதவர்களுக்குத் தெரிவித்து விடட்டும்”.

நபி (ஸல்) அவர்களின் உரையைப் பற்றி வரும் மற்றொரு அறிவிப்பில் பின்வரும் அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

“அங்குள்ள முட்களை ஒடிக்கவோ, அங்குள்ள வேட்டைப் பிராணிகளை அங்கிருந்து விரட்டவோ, அங்கு கீழே கிடக்கும் பொருட்களை எடுக்கவோ கூடாது. ஆயினும், அதை உரியவரிடம் சேர்த்து வைக்கவும் மக்களிடம் தெரிவிக்கவும் எடுக்க அனுமதி உண்டு. இங்குள்ள புற்களைக்களையக் கூடாது.” அப்பொழுது அப்பாஸ் (ரழி) அவர்கள் ‘இத்கிர்’ என்ற செடியை களைந்து கொள்ள அனுமதி தாருங்கள். இது எங்கள் கொல்லர்களுக்கும் மற்ற வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது” எனக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) இத்கிர் செடியை எடுத்து பயன்படுத்த அனுமதி அளித்தார்கள்.

குஜாஆ கிளையினர் மக்கா வெற்றியின் போது லைஸ் கிளையைச் சேர்ந்த ஒருவரைக் கொன்று விட்டனர். இதற்கு முன் அறியாமைக் காலத்தில் லைஸ் கிளையினர் குஜாஆ கிளையினரில் ஒருவரைக் கொன்றிருக்கின்றனர். அதற்குப் பழிவாங்கும் முகமாக இச்சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். இது தொடர்பாக நபி (ஸல்) இவ்வுரையில் குறிப்பிட்டுக் கூறினார்கள்:

“குஜாஆ சமூகத்தினரே! கொலை புதலைக் கைவிடுங்கள். கொலை புரிவது பயன்தக்கதாக இருந்தால் இதற்கு முன்னர் புரிந்த கொலைகளே உங்களுக்குப் போதும். இதற்குப் பிறகு அந்த மாபாதகச் செயலை செய்யாதீர்கள். நீங்கள் கொன்று விட்டவர்களுக்குரிய தியத்தை (கொலைக்கான நஷ்டஈட்டை) இன்று நான் நிறைவேற்றுகிறேன். இதற்குப் பின் யாராவது கொலை செய்யப்பட்டால் கொலையுண்டவன் உறவினர் இரண்டு வாய்ப்புகளில் ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒன்று, கொலையாளியைப் பழிக்குப் பழி கொல்வது அல்லது அவரிடமிருந்து தியத் வசூல் செய்து கொள்வது.” யமன் வாசியான ‘அபூ ஷாஹ்’ என்பவர் “அல்லாஹ்வின் தூதரே! இதனை எனக்கு எழுதிக் கொடுங்கள்” என்றார். “இதனை இவருக்கு எழுதி வழங்குங்கள்” என நபி (ஸல்) தோழர்களுக்குக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஸுனன் அபூதாவூது, இப்னு ஹிஷாம்)