பக்கம் - 512 -
ஹஜ்ஜத்துல் விதா உரை

மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது.

மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது.

அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என் குடும்பத்தாரின் வட்டியிலிருந்து அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபுக்கு உரித்தான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்கிறேன்.

பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அமானிதமாக அவர்களை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். அவனது நாட்டப்படி அவர்களை நீங்கள் மனைவியராக ஏற்றிருக்கிறீர்கள். அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாவது நீங்கள் விரும்பாத வர்களை உங்கள் இல்லத்துக்குள் அவர்கள் அனுமதிக்கக் கூடாது. மீறி அனுமதித்தால் காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாதெனில் நல்ல முறையில் அவர்களுக்கு உணவும் ஆடையும் அளிக்க வேண்டும்.

நான் உங்களிடம் விட்டுச் செல்வதை நீங்கள் உறுதியாகப் பின்பற்றினால் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். அதுதான் அல்லாஹ்வின் வேதமாகும்.

மக்களே! எனக்குப் பின் எந்தவொரு நபியும் (இறைத்தூதரும்) இல்லை. உங்களுக்குப் பின் எந்தவொரு சமுதாயமும் இல்லை. உங்களைப் படைத்துக் காப்பவனான அல்லாஹ்வையே வணங்குங்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றுங்கள். ரமழான் மாதத்தில் நோன்பு வையுங்கள். மனமுவந்து உங்கள் செல்வத்துக்கான ஜகாத்தை நிறைவேற்றுங்கள். உங்கள் இறைவனின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள். உங்கள் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். (மேற்கூறிய நற்செயல்களால்) இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள சுவனத்தில் நுழைவீர்கள்.

உங்கள் இறைவனை அதிவிரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரணை செய்வான். எனக்குப் பிறகு நீங்கள் உங்களுக்குள் கொலை குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிட வேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஷைத்தான் உங்களது இந்த பூமியில் அவனை நீங்கள் வணங்குவதிலிருந்து முற்றிலும் நிராசையடைந்து விட்டான். எனினும், நீங்கள் மிக எளிதாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்து ஷைத்தானுக்கு வழிப்படுவீர்கள். அதனால் அவனோ மகிழ்ச்சியடைவான்.