பக்கம் - 524 -
அபூபக்ரின் நிலை

அபூபக்ர் (ரழி) இந்நேரத்தில் மஸ்ஜிது நபவியிலிருந்து சற்று தொலைவிலுள்ள ‘சுன்ஹ்’ என்ற இடத்திலுள்ள வீட்டில் தங்கியிருந்தார்கள். இந்தத் துக்கமானச் செய்தியைக் கேட்டவுடன் தனது குதிரையில் ஏறி மஸ்ஜிது நபவிக்கு வந்து, யாரிடமும் பேசாமல் நபி (ஸல்) அவர்களைக் காண்பதற்காக ஆயிஷாவின் அறை நோக்கி நடந்தார்கள். நபி (ஸல்) ஹிபரா நாட்டு ஆடையால் போர்த்தப்பட்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் முகத்திலிருந்து போர்வையை அகற்றி முகத்தைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அழலானார்கள். “என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணத்தைத் தரமாட்டான். அல்லாஹ் உங்களுக்கு விதித்த முதல் மரணத்தையே நீங்கள் அடைந்து கொண்டீர்கள்” என்றும் கூறினார்கள்.

பின்பு அறையிலிருந்து வெளியேறி அபூபக்ர் (ரழி) மஸ்ஜிது நபவிக்கு வந்தார்கள். அங்கு உமர் (ரழி) மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) “உமரே! அமருங்கள்” என்றுரைத்தும் உமர் (ரழி) அமர மறுத்து விட்டார்கள். அபூபக்ர் (ரழி) மிம்பரில் ஏறி சப்தமிட்டு தஷஹ்ஹுத் முழங்கினார். மக்கள் உமர் (ரழி) அவர்களை விட்டு நீங்கி அபூபக்ர் (ரழி) அவர்களை நோக்கி விரைந்தனர். அப்போது அபூபக்ர் (ரழி) “உங்களில் யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தாரோ! நிச்சயம் முஹம்மது மரணித்தார் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்! உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கினாரோ! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிருடன் இருப்பவன் மரணிக்க மாட்டான். அல்லாஹ் கூறுகிறான்:

முஹம்மது (நபி) ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக் கூடிய இறைவன்) அல்ல. அவருக்கு முன்னரும் (இவ்வாறே) பல தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டு விட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச் சென்று விட்டால் அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கி விடமாட்டான். நன்றி அறிபவர்களுக்கு அல்லாஹ் அதிசீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான். (அல்குர்ஆன் 3:144)

என்று உரையாற்றினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: “அபூபக்ர் (ரழி) இந்த வசனத்தை ஓதிக் காட்டும் வரை அல்லாஹ் இதனை இறக்கி வைத்ததை மக்கள் அறியாதது போல் இருந்தனர். அபூபக்ரிடமிருந்து அதை செவியேற்ற மக்கள் அதனையே திரும்பத் திரும்ப ஓதினர்.”

இப்னுல் முஸய்ம்ப் (ரழி) கூறுகிறார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் (ரழி) அந்த வசனத்தை ஓதியவுடன் அவர்கள் கூறுவதுதான் உண்மை என நான் அறிந்து கொண்டேன். என்னுடைய கால்கள் சோர்ந்து என்னால் நிற்க இயலவில்லை. அப்படியே பூமியில் சாய்ந்து விட்டேன். நபி (ஸல்) இறந்து விட்டார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.” (ஸஹீஹுல் புகாரி)

அடக்கம் செய்ய ஏற்பாடுகள்

நபி (ஸல்) அவர்களை அடக்கம் செய்வதற்கு முன்னதாக முஸ்லிம்களின் காரியங்களை நிர்வகிக்கும் கலீஃபாவை நிர்ணயம் செய்வதில் மக்கள் ஈடுபட்டனர். பனூ சாம்தாவின் வீட்டு வராண்டாவில் இது தொடர்பாக நடந்த விவாதங்களுக்கும் கருத்து பரிமாற்றங்களுக்கும் பிறகு, முஹாஜிர்களும் அன்சாரிகளும் ஒரு மனதாக அபூபக்ரை கலீஃபாவாக நிர்ணயித்தனர். இந்த வேலையில் திங்கட்கிழமையின் பகல் முழுதும் முடிந்து இரவும் முழுமையாக முடிந்தது. அது வரை நபி (ஸல்) அவர்களின் புனித உடல் ஹிபரா போர்வையுடன் இருந்தது. நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்கள் அறையை மூடி வைத்திருந்தனர். செவ்வாய் பகல் அன்று நபி (ஸல்) அவர்களின் ஆடையைக் களையாமல் அப்படியே குளிப்பாட்டினர்.