பக்கம் - 525 -
இப்பணியில் அப்பாஸ், அலீ, ஃபழ்ல் இப்னு அப்பாஸ், குஸம் இப்னு அப்பாஸ், நபி (ஸல்) அவர்களின் முன்னாள் அடிமை ஷுக்ரான், உஸாமா இப்னு ஜைத், அவ்ஸ் இப்னு கவ்லீ (ரழி) ஆகியோர் ஈடுபட்டனர்.

அப்பாஸ், ஃபழ்ல், குஸம் (ரழி) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் உடலைப் புரட்ட, உஸாமாவும் ஷுக்ரானும் நீர் ஊற்ற, அலீ (ரழி) குளிப்பாட்டினார்கள். அவ்ஸ் (ரழி) நபி (ஸல்) அவர்களை தனது நெஞ்சின் மீது சாய்த்திருந்தார்கள். (இப்னு மாஜா)

இவ்வாறே இலந்தை இலை கலந்த நீரால் மும்முறை குளிப்பாட்டினார்கள். நபி (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதற்காக ஸஅதுப்னு கைஸமாவுக்குச் சொந்தமான ‘கர்ஸ்’ என்ற கிணற்றிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டது. இந்நீரையே நபி (ஸல்) வாழ்நாளில் அருந்தி வந்தார்கள். (தபகாத் இப்னு ஸஅத்)

நபி (ஸல்) அவர்களை வெள்ளை நிற யமன் நாட்டு பருத்தி ஆடையினால் (கஃபன்) போர்த்தினார்கள். அதில் தைக்கப்பட்ட சட்டையோ தலைப்பாகையோ ஏதுமில்லை. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அடக்கம் செய்வது

நபி (ஸல்) அவர்களை எங்கு அடக்கம் செய்வது என்று கேள்வி எழுந்தது. அப்போது அபூபக்ர் (ரழி) “இறைத்தூதர்களின் உயிர் எங்கு பிரிகிறதோ அங்குதான் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்” என்று நபி (ஸல்) கூற, நான் கேட்டிருக்கிறேன் என்றார்கள். உடனடியாக நபி (ஸல்) மரணித்த இடத்திலுள்ள விரிப்பை அகற்றி அங்கேயே அபூ தல்ஹா (ரழி) குழி தோண்டி அதில் பக்கவாட்டில் ஒரு குழி அமைத்தார்கள். மக்கள் பத்து பத்து பேர் கொண்ட கூட்டம், கூட்டமாக நபி (ஸல்) அவர்களின் அறைக்குள் சென்று தனித்தனியாக தொழுதார்கள்.

முதலில் நெருங்கிய குடும்பத்தார்களும், பின்பு முஹாஜிர்களும், அடுத்து அன்சாரிகளும், தொடர்ந்து சிறுவர்களும், பின்னர் பெண்களும் தொழுதனர். சிலர், “பெண்கள் முதலிலும் அடுத்து சிறுவர்களும் தொழுததாக அறிவிக்கின்றனர். (முவத்தா மாலிக், தபகாத் இப்னு ஸஅத்)

இதே நிலையில் செவ்வாயும் முழுமையாக கழிந்து புதன் இரவின் பெரும் பகுதி கழிந்தது. இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்:

“இரவின் நடுநிசியில் மண்வெட்டிகளின் சப்தத்தை வைத்தே நபி (ஸல்) அடக்கம் செய்யப்பட்டதை அறிந்து கொண்டோம்.”

இரவின் கடைசிப் பகுதியில் நல்லடக்கம் நடைபெற்றதாகவும் ஓர் அறிவிப்பு உள்ளது. (முஸ்னது அஹ்மது)