பக்கம் - 535 -


வார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள். மக்களுடைய உள்ளங்களின் ஆழத்தில் அவர்களது கண்ணியம் வேரூன்றி இருந்தது. நபியவர்களை பாதுகாக்க மக்கள் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டார்கள். இதுபோன்றதொரு மரியாதையையும் மதிப்பையும் வேறு எவரிடமும் இவ்வுலகம் கண்டதில்லை. அவர்களோடு வாழ்ந்தவர்கள் அவர்களை ஆழமாக நேசித்தனர். தங்களின் கழுத்துகள் வெட்டப்படுவதைக் கூட பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால், நபியவர்களின் நகத்துக்கு ஓர் இடையூறு ஏற்படுவதை கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். சிறந்த பண்புகளும் அழகிய குணங்களும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்ததுதான் தோழர்களின் இந்த நேசத்திற்குரிய காரணமாகும். நபியவர்களின் குணங்களையும் பண்புகளையும் முழுமையாக நம்மால் விவரிக்க முடியாது என்ற இயலாமையை ஏற்றுக் கொள்வதுடன் அடுத்து வரும் பக்கங்களில் அவற்றைப் பற்றிய அறிவிப்புகளை முடிந்தளவு சுருக்கமாகக் கூறுகிறோம்.

பேரழகு உடையவர்

நபி (ஸல்) ஹிஜ்ரா செய்து மதீனா செல்லும் வழியில் குஜாம்ய்யா கிளையைச் சார்ந்த ‘உம்மு மஅபத்’ என்ற பெண்ணின் கூடாரத்தைக் கடந்துச் சென்றார்கள். இந்நிகழ்ச்சியைப் பற்றி ஹிஜ்ரா பாடத்தில் முன்னர் கூறியிருக்கிறோம். வீடு திரும்பிய தனது கணவர் விசாரித்த போது நபியவர்களைப் பற்றி உம்மு மஅபத் விவரித்தது யாதெனில்:

பிரகாசமான முகம் உடையவர் அழகிய குணம் பெற்றவர் வயிறோ தலையோ பெருத்தவர் அல்லர் தலை சிறுத்தவரும் அல்லர் கவர்ச்சிமிக்கவர் பேரழகு உடையவர் கருத்த புருவம் கொண்டவர் நீண்ட இமைமுடி பெற்றவர் கம்பீரக் குரல் வளம் கொண்டவர் உயர்ந்த கழுத்துள்ளவர் கருவிழி கொண்டவர் மை தீட்டியது போன்ற கண்ணுள்ளவர் வில் புருவம் கொண்டவர் கூட்டுப் புருவம் கொண்டவர் கருண்ட தலைமுடி கொண்டவர் அவரது அமைதி கம்பீரத்தைத் தரும் ஒளி இலங்கும் பேச்சுடையவர் தூரமாகப் பார்த்தால் அழகும் வனப்பும் பெற்றவராய்த் திகழ்வார் அருகில் சென்றால் பழக இனிமையானவர் நற்பண்பாளர் நாவலர் தெளிந்த நடையுடைய பேச்சாளர் நீளமாகவோ சுருக்கமாகவோ இல்லாமல் நடுத்தரமான சொல்லாற்றல் பெற்றவர் அவருடைய மொழிதல் மணிமாலை உதிர்வது போல் இருக்கும் நடுத்தர உயரமுடையவர் பார்வைக்கு நெட்டையாகவோ குட்டையாகவோ இருக்க மாட்டார் இரண்டு கிளைகளுக்கு இடையிலுள்ள ஒரு கிளையைப் போன்றவர் மூவர் குழுவில் பளிச்செனத் தெரிபவர் சிறந்த கண்ணியம் வாய்ந்தவர் நண்பர்கள் புடை சூழ இருப்பவர் அவர் உரைத்தால் யாவரும் செவிமடுக்கின்றனர் அவர் ஆணையிட்டால் நிறைவேற்ற விரைகின்றனர் பணிவிடைக்குரியவர் மக்கள் கூட்டம் பெற்றவர் கடுகடுப்பானவருமல்லர் பிறரைக் குறைவாக மதிப்பவரும் அல்லர். (ஜாதுல் மஆது)