பக்கம் -102-

பின்தங்கியவர்கள்

இப்போர் அதன் விசேஷ நிலைமைகளைப் பொறுத்து அல்லாஹ்வின் மிகப்பெரும் சோதனையாக அமைந்திருந்தது. உண்மை முஸ்லிம் யார் என இப்போர் இனங்காட்டிவிட்டது. ஆம்! இதுபோன்ற நிலைமையில் அல்லாஹ்வின் நடைமுறை அவ்வாறே அமைந்திருந்தது. இதையே அல்லாஹ் சுட்டிக்காட்டுகிறான்.

(நயவஞ்சகர்களே!) நீங்கள் இருக்கும் இந்த நிலைமையில் நல்லவர்கள் இன்னாரென்றும் தீயவர்கள் இன்னாரென்றும் பிரித்தறிவிக்கும் வரையில் (உங்களுடன் கலந்திருக்க) அல்லாஹ் (நம்பிக்கையாளர்களை) விட்டுவைக்க மாட்டான். (அல்குர்ஆன் 3:179)

அல்லாஹ்வையும் நபி (ஸல்) அவர்களையும் முழுமையாக ஏற்று நடந்த நம்பிக்கையாளர்கள் அனைவரும் இப்போல் கலந்து கொள்ள புறப்பட்டனர். இதில் கலந்து கொள்ளாதவர்களை உள்ளத்தில் நயவஞ்சகம் உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டது. ஒரு நபர் போருக்குச் செல்லாது பின்தங்கி விட்டார் என நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டால் “அவரைப் பற்றி எதுவும் பேசாதீர்கள் அவரிடம் ஏதேனும் நன்மை இருக்குமாயின் அல்லாஹ் நம்முடன் அவரை இணைத்து வைப்பான். அவ்வாறு இல்லாவிட்டால் நம்மை அவரை விட்டு காப்பாற்றி நிம்மதியைத் தருவான்” என்று ஆறுதல் கூறுவார்கள். உண்மையில் தகுந்த காரணமுள்ளவர்கள் அல்லது நயவஞ்சகர்கள் இவர்களைத் தவிர அனைவரும் போரில் கலந்து கொண்டனர். சில நயவஞ்சகர்கள் பொய்க் காரணங்களைக் கூறியும், சில நயவஞ்சகர்கள் காரணம் ஏதும் கூறாமலேயே போரைப் புறக்கணித்தனர். ஆம்! உண்மையான நம்பிக்கையாளல் மூவர் தகுந்த காரணமின்றியே போரில் கலந்து கொள்ளவில்லை. அதனால் அவர்களை அல்லாஹ் சோதித்தான். பிறகு அவர்கள் மனம் வருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டதால் அவர்களை மன்னித்து விட்டான்.

மதீனாவிற்கு வருகை தந்த நபி (ஸல்) பள்ளியில் இரண்டு ரகஅத் தொழுதுவிட்டு மக்களைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தார்கள். எண்பதுக்கும் அதிகமான நயவஞ்சகர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பல காரணங்களைக் கூறி, தாங்கள் கலந்து கொள்ள முடியாமைக்கு வருத்தம் தெரிவித்தனர். தாங்கள் உண்மையே உரைப்பதாகக் கூறி தங்களது சொல்லுக்கு வலிமை சேர்ப்பதற்காக பொய் சத்தியமும் செய்தனர். நபி (ஸல்) அந்தரங்கக் காரணங்களைத் தோண்டித் துருவாமல் வெளிப்படையான அவர்களது காரணங்களை ஏற்று, வாக்குறுதி வாங்கிக் கொண்டு, அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி, அவர்களது அந்தரங்க விஷயத்தை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டார்கள்.

உண்மை விசுவாசிகளில் பின்தங்கிய கஅப் இப்னு மாலிக், முராரா இப்னு ரபீ, ஹிலால் இப்னு உமையா (ரழி) ஆகிய மூவரும் பொய்க் காரணங்களைக் கூறாமல் தங்களது உண்மை நிலைமையைத் தெரிவித்து விட்டனர். நபி (ஸல்) இம்மூவரின் விஷயத்தில் “அல்லாஹ்வின் தீர்ப்பு வரும்வரை யாரும் இவர்களிடம் பேச வேண்டாம்” என தோழர்களுக்குக் கட்டளையிட்டு விட்டார்கள். நபியவர்களும் தோழர்களும் அவர்களிடம் பேசாமல் புறக்கணித்து ஒதுக்கி வைத்த காரணத்தால் அம்மூவருக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதே நிலையில் நாற்பது நாட்கள் கழிந்த பின்பு மூவரும் அவரவர் மனைவியை விட்டு விலகியிருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு ஐம்பது நாட்கள் கழிந்தன. இந்நாட்களில் அவர்களின் மனநிலையை அல்லாஹ்வே அறிவான். பிறகு அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான்.

(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துத் தீர்ப்புக் கூறாது) விட்டு வைக்கப்பட்டிருக்கும் மூவரையும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்.) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு மிக்க நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் மிக்க கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்வையன்றி அவனை விட்டுத் தப்புமிடம் அவர்களுக்கு இல்லவே இல்லை என்பதையும் அவர்கள் நிச்சயமாக அறிந்து கொண்டனர். ஆதலால், அவர்கள் (பாவத்தில் இருந்து) விலகிக் கொள்வதற்காக அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்(து அவர்களுக்கு அருள் புந்)தான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவ னாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:118)

இவ்வசனம் இறக்கப்பட்டதும் மூவர் மட்டுமின்றி முஸ்லிம்களும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தனர். அல்லாஹ் தங்களை மன்னித்த ஆனந்தத்தால் ஏராளமான தான தர்மங்களை வாரி வழங்கினர். இந்நாளை தங்களது வாழ்வின் பாக்கியமான நாளாகக் கருதினர். போரில் தக்க காரணங்களால் கலந்து கொள்ள இயலாதவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுவதாவது:

பலவீனர்களும், நோயாளிகளும், போருக்குச் செலவு செய்யும் பொருளை அடையாதவர்களும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கலப்பற்ற நம்பிக்கையாளர்களாக இருந்தால் (அதுவே போதுமானது. அவர்கள் போருக்குச் செல்லாவிட்டாலும் அதனைப் பற்றி அவர்கள் மீது எந்த குற்றமுமில்லை.) இத்தகைய நல்லவர்கள் மீது (குற்றம் கூற) எந்த வழியும் இல்லை. அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:91)

மதீனாவுக்கு அருகில் வந்த போது “மதீனாவில் சிலர் இருக்கின்றனர். நீங்கள் பயணித்த இடங்களிலெல்லாம் அவர்களும் உங்களுடன் இருந்தனர் தகுந்த காரணம் ஒன்றே அவர்களைப் போரில் கலக்க விடாமல் செய்து விட்டது.” என்று நபி (ஸல்) மேற்கூறப்பட்டவர்களை குறித்து கூறினார்கள். “அவர்கள் மதீனாவில் இருந்து கொண்டேவா!” (நம்முடன் வந்த நன்மையைப் பெறுகிறார்கள்!) என ஆச்சரியத்துடன் தோழர்கள் வினவினர். “ஆம்! மதீனாவில் இருந்து கொண்டே! (நன்மையைப் பெறுகிறார்கள்)” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

போரின் தாக்கங்கள்

இப்போனால் முஸ்லிம்களின் கை அரபிய தீபகற்பத்தில் ஓங்கியது. அரபிய தீபகற்பத்தில் இஸ்லாமைத் தவிர இனி வேறெந்த சக்தியும் வாழ முடியாது என்பதை அனைவரும் நன்றாக அறிந்தனர். எஞ்சியிருந்த சில மடையர்கள் மற்றும் முஸ்லிம்களின் சிரமங்களை எதிர்பார்க்கும் நயவஞ்சகர்கள் ஆகியோரின் உள்ளத்தில் மிச்ச மீதமிருந்த சில கெட்ட ஆசைகளும் அடியோடு அழிந்தன. இவர்கள் ரோமர்களின் உதவியோடு முஸ்லிம்களை வீழ்த்திவிடலாம் என்று இறுமாந்தது நாசமாகி விடவே, முற்றிலும் முஸ்லிம்களிடம் பணிந்து வாழத் தலைப்பட்டனர்.

முஸ்லிம்கள் இனி நயவஞ்சகர்கள் நளினமாகவும் மிருதுவாகவும் இருக்க வேண்டுமென்ற தேவை இல்லாது போனது. அல்லாஹ்வும் இந்த நயவஞ்சகர்களுடன் கடுமையாக நடந்து கொள்ள வேண்டுமென சட்டங்களை இறக்கி வைத்தான். இவர்களின் தர்மங்களை ஏற்பதோ, இவர்களுக்காக ஜனாஸா தொழுவதோ, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவதோ, இவர்களின் அடக்கத்தலங்களுக்குச் செல்வதோ கூடாது என தடை செய்து விட்டான். பள்ளி என்ற பெயரில் சூழ்ச்சிகள் செய்யவும், அதனைச் செயல்படுத்தவும் அவர்கள் பயன்படுத்திய இடங்களைத் தகர்த்தெரியுமாறு கட்டளையிட்டான். மேலும், அவர்களின் தீய பண்புகளை விவரித்து பல வசனங்களையும் இறக்கி வைத்த காரணத்தால் அவர்கள் மிகுந்த இழிவுக்குள்ளானார்கள். இந்த வசனங்கள் நயவஞ்சகர்கள் யார் எனத் தெளிவாக மதீனாவாசிகளுக்குச் சுட்டிக்காட்டுவது போல அமைந்திருந்தது. முதலாவதாக. ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் இஸ்லாமை ஏற்கவும் அறியவும் மக்கள் அலை அலையாய் மதீனா நோக்கி வந்தனர். இரண்டாம் கட்டமான மக்கா வெற்றிக்குப் பின்போ இது பன்மடங்காகப் பெருகியது. மூன்றாம் கட்டமான தபூக் போருக்குப் பின் இவற்றையெல்லாம் மிகைக்கும் வகையில் எண்ணிலடங்கா மக்கள் கூட்டங்கூட்டமாக மதீனா வந்தனர்.

(இப்போரின் விவரங்கள் “ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம், ஃபத்ஹுல் பாரி” ஆகிய நூற்களிலிருந்து எடுக்கப்பட்டன.)

இப்போர் குறித்து குர்ஆன்...

இப்போர் குறித்து பல திருவசனங்கள் அத்தியாயம் (பராஆ) தவ்பாவில் அருளப்பட்டன. அவற்றில், சில நபி (ஸல்) போருக்குப் புறப்படும் முன்பும், சில பயணத்தின் இடையிலும், சில போர் முடிந்து மதீனா திரும்பிய பின்பும் அருளப்பட்டன. அவற்றில் போரின் நிலவரங்கள், நயவஞ்சகர்களின் தீய குணங்கள், போரில் கலந்து கொண்ட தியாகிகள் மற்றும் உண்மை முஸ்லிம்களின் சிறப்புகள், போரில் கலந்து கொண்ட உண்மை முஃமின்கள், கலந்து கொள்ளாத உண்மை முஃமின்களின் பிழை பொறுத்தல் ஆகிய அனைத்தும் இடம்பெற்றன.

இந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்

வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்ச்சிகள் இந்த ஆண்டில் நடந்தன:

1) நபி (ஸல்) தபூக்கிலிருந்து திரும்பிய பின்பு உவைமிர் அஜ்லானிக்கும், அவருடைய மனைவிக்குமிடையில் ‘லிஆன்’ (பழி சுமத்தி ஒருவரையொருவர் சபித்தல்) நடந்தது.

2) “தவறு செய்து விட்டேன். என்னை தூய்மையாக்குங்கள்” என நபியவர்களிடம் வந்த காமிதிய்யா பெண்மணி மீது ‘ரஜ்ம்’ தண்டனை நிறைவேற்றப்பட்டது.

3) ஹபஷா மன்னர் அஸ்ஹமா ரஜபு மாதத்தில் மரணமானார். அவருக்காக நபி (ஸல்) மதீனாவில் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.

4) நபி (ஸல்) அவர்களின் மகள் உம்மு குல்தும் (ரழி) ஷஅபான் மாதத்தில் மரணமானார்கள். நபி (ஸல்) இதனால் மிகுந்த கவலையடைந்தார்கள். எனக்கு மூன்றாவதாக ஒரு மகள் இருந்தால், அவரையும் உங்களுக்கே மணமுடித்துத் தந்திருப்பேன் என உஸ்மான் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.

5) தபூக்கிலிருந்து நபி (ஸல்) மதீனா வந்த பின்பு நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் இறந்து போனான். உமர் (ரழி) அவர்கள் தடுத்தும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்குத் தொழுகை நடத்தி இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடினார்கள். இது தொடர்பாக உமர் (ரழி) அவர்கள் கூறிய ஆலோசனையே ஏற்றமானது என குர்ஆன் வசனம் இறங்கியது.

அபூபக்ர் ஹஜ்ஜுக்கு புறப்படுதல்

ஒன்பதாவது ஆண்டு துல்ஹஜ் அல்லது துல்கஅதா மாதத்தில் முஸ்லிம்களுக்கு ஹஜ்ஜை தலைமையேற்று நடத்தும்படி நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்களை மக்கா அனுப்பினார்கள்.

மதீனாவிலிருந்து அபூபக்ர் (ரழி) புறப்பட்ட பின்பு அத்தியாயம் தவ்பாவின் முதல் வசனங்கள் இறக்கப்பட்டன. அதில் முஷ்ரிக்குகளுடன் இருந்த உடன்படிக்கைகளை முறித்துவிட வேண்டும் என அல்லாஹ் ஆணையிட்டான். தன் சார்பாக இதனை மக்களிடம் தெரிவிக்க மதீனாவிலிருந்து அலீ இப்னு அபூதாலிபை நபி (ஸல்) மக்கா அனுப்பி வைத்தார்கள். புறப்பட்ட அலீ (ரழி) ‘அர்ஜ் அல்லது ழஜ்னான்’ என்ற இடத்தில் அபூபக்ரை சந்திக்கிறார்கள். “தாங்கள் (அமீர்) தலைவராக வந்தீர்களா? அல்லது தலைவன் கீழ் செயல்பட வந்தீர்களா?” என்று அபூபக்ர் (ரழி) கேட்க, அதற்கு “நான் தங்களுடைய தலைமையில் பணியாற்றவே வந்திருக்கிறேன்” என்று அலீ (ரழி) கூறினார்கள். பிறகு இருவரும் ஒன்றாக மக்கா சென்றனர்.

அபூபக்ர் (ரழி) மக்களுக்கு ஹஜ் கடமைகளை நிறைவேற்றித் தந்தார்கள். ஹஜ் பிறை 10ல் ஜம்ரா அருகில் நின்று கொண்டு, மக்களுக்கு நபி (ஸல்) கூறியவற்றைச் சொல்லி “ஒப்பந்தங்கள் அனைத்தும் இன்றுடன் முடிந்து விட்டன” என்று அறிவித்தார்கள். மேலும், அவர்களுக்கு நான்கு மாதங்கள் தவணையளித்தார்கள். ஒப்பந்தமில்லாதவர்களுக்கும் நான்கு மாதத் தவணைக் கொடுத்தார்கள். உடன்படிக்கை செய்தவர்கள் அதனை மீறாமலும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பிறருக்கு உதவி செய்யாமலும் இருந்தால் அவர்களது ஒப்பந்தக் காலம் முடியும் வரை தவணையளிக்கப்படும் என்றும் அறிவித்தார்கள்.

அபூபக்ர் (ரழி) தங்களது ஆட்களை அனுப்பி “இந்த ஆண்டிற்குப் பிறகு முஷ்ரிக்குகள் யாரும் மக்கா வரக்கூடாது. நிர்வாணமாக கஅபாவை யாரும் வலம் வரக்கூடாது” என்று அறிவிப்புச் செய்தார்கள். இது “அரபுலகம் முழுவதும் சிலை வணக்கம் ஒழிந்தது இனி அது தலைதூக்க முடியாது” என்று அறிவிப்பதற்குச் சமமாக இருந்தது. (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)