பக்கம் -104-

மக்கள் அலை அலையாய் அல்லாஹ்வின் மார்க்கத்தைத் தழுவுகின்றனர்

முஸ்லிம்களுக்கு மக்காவில் கிடைத்த வெற்றி, மூளையை மழுங்கச் செய்த சிலை வணக்க கலாச்சாரத்தை வேரோடு கலைந்து விட்டது. இவ்வெற்றியால் பொய்யிலிருந்து மெய்யை, அசத்தியத்திலிருந்து சத்தியத்தை மக்கள் பிரித்து அறிந்து கொண்டனர். அவர்களின் சந்தேகங்கள் நீங்கின. எனவே, இஸ்லாமை ஏற்றுக் கொள்ள விரைந்தனர். இவ்விஷயத்தை உறுதி செய்யும் ஒரு நிகழ்ச்சியைக் காண்போம். அம்ர் இப்னு ஸலமா (ரழி) கூறுகிறார்:

மக்கள் பயணிக்கும் பாதையை ஒட்டி உள்ள கிணற்றின் அருகில் நாங்கள் வசித்துக் கொண்டிருந்தோம். எங்களைக் கடந்து பயணிகள் செல்லும் போது அந்த மக்களின் செய்தி என்ன? இந்த மக்களின் செய்தி என்ன? அந்த மனிதன் யார்? (நபியென்று கூறும் அந்த ஆள் யார்?) என்று அவர்களிடம் விசாரிப்போம். அல்லாஹ் தன்னைத் தூதராக அனுப்பியிருக்கின்றான் என தன்னைப் பற்றி அவர் சொல்லிக் கொண்டிருப்பதாக மக்கள் பதில் கூறுவர். அவர்கள் கூறும் கூற்றை என் அடிமனதில் பதிய வைத்து விடுவேன். அது நன்றாகப் படிந்து விடும். அரபி மக்கள் தாங்கள் முஸ்லிமாவதற்கு மக்கா வெற்றியடைய வேண்டும் என எதிர்பார்த்திருந்தனர்.

அவர்களின் கூற்று என்னவெனில், “இம்மனிதரையும் அவரது கூட்டத்தினரையும் அவரது போக்கில் விட்டு விடுங்கள். இவர் தமது கூட்டத்தாரை வெற்றி கண்டால் உண்மை நபியாவார். இவ்வாறு எண்ணம் கொண்டிருந்த அம்மக்கள், நபி (ஸல்) மக்காவை வெற்றி கொண்டவுடன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ள விரைந்தனர். எனது தந்தை தனது சமுதாயத்திற்கு முன்னரே இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். பின்பு எங்களிடம் வந்து, “இந்த நேரத்தில் இந்தத் தொழுகையை நிறைவேற்றுங்கள். இந்த நேரத்தில் இந்தத் தொழுகையைத் தொழுங்கள். நேரம் வந்துவிட்டால் உங்களில் ஒருவர் அதான் கூறட்டும். உங்களில் அதிகமாகக் குர்ஆனை மனனம் செய்தவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்” என்று கூறினார். (ஸஹீஹுல் புகாரி)

மக்காவின் வெற்றி பல மாற்றங்களை நிகழ்த்தியது. இஸ்லாமுக்கு கண்ணியம் வழங்கி அரபியர்களை அதற்குப் பணிய வைத்தது என்பதை மேற்கூறிய நிகழ்ச்சி நமக்குத் தெளிவாக விளக்குகிறது. தபூக் போருக்குப் பின் இந்நிலை மேலும் முன்னேறியது. ஆகவேதான் ஹிஜ்ரி 9, 10 ஆகிய ஆண்டுகளில் மதீனாவை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக குழுக்கள் வரத் தொடங்கின. மக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைந்தனர். மக்காவை மீட்கச் சென்றபோது நபி (ஸல்) அவர்களுடன் பத்தாயிரம் வீரர்கள் இருந்தனர். ஆனால், மக்கா வெற்றிக்குப் பின் தபூக் போருக்கு சென்ற போது நபி (ஸல்) அவர்களுடன் முப்பதாயிரம் வீரர்கள் இருந்தனர். தபூக் போர் முடிந்து நபி (ஸல்) ஹஜ்ஜுக்காக மக்கா பயணமான போது முஸ்லிம்களின் ஒரு கடலே அவர்களுடன் இருந்தது. அதாவது தஸ்பீஹ், தக்பீர், தஹ்லீல் முழக்கங்கள் விண்ணை முட்ட ஒரு இலட்சம் அல்லது ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களை புடை சூழ சென்றனர்.

குழுக்கள்

வரலாற்று ஆசிரியர்கள் எழுபதுக்கும் மேற்பட்ட குழுக்கள் இக்கால கட்டத்தில் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தன என குறிப்பிட்டுள்ளனர். எனினும், அவை அனைத்தையும் முழுவதுமாக இங்குக் குறிப்பிடுவது முடியாத காரியம். அதனை விரிவாகக் கூறுவதில் பெரிய பலன் ஏதுமில்லை என்பதால் அவற்றில் முக்கியமான குழுக்களின் விவரங்களைச் சுருக்கமாகக் காண்போம். பெரும்பாலான சமூகத்தார் மக்கா வெற்றிக்குப் பின்புதான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தனர். என்றாலும், மக்கா வெற்றிக்கு முன்பும் குழுக்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

1) அப்துல் கைஸ் குழு

இக்குழுவினர் இரு பிரிவினராக நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துள்ளனர். ஒரு பிரிவினர் ஹிஜ்ரி 5 அல்லது அதற்கு முன்பு மதீனா வந்தனர். இவர்களில் முன்கித் இப்னு ஹய்யான் என்பவர் வியாபார நிமித்தமாக மதீனா வந்து போய் கொண்டிருந்தார். நபி (ஸல்) மக்காவிலிருந்த மதீனா ஹிஜ்ரா செய்த பின்பு வியாபார வேலையாக மதீனா வந்த முன்கித் நபி (ஸல்) வருகையை அறிந்து அவர்களிடம் சென்று இஸ்லாமைத் தழுவினார். பின்னர் தமது சமூகத்தாருக்காக நபி (ஸல்) தந்த கடிதத்தை எடுத்துச் சென்று தன் சமூகத்தாரிடம் கொடுக்கவே, அவர்களும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர். பதிமூன்று அல்லது பதிநான்கு பேர் கொண்ட ஒரு குழுவுடன் மகத்துவமிக்க மாதங்களின் ஒரு மாதத்தில் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்பொழுது ஈமான் மற்றும் குடிபானங்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு சென்றனர். இக்கூட்டத்தில் வயது முதிர்ந்த ‘அஷஜ் அஸ்ரீ’ என்பவரைப் பார்த்து “உங்களிடம் இரண்டு பண்புகள் இருக்கின்றன. அவற்றை அல்லாஹ் விரும்புகின்றான். 1) சகிப்புத் தன்மை, 2) நிதானம்” என நபி (ஸல்) கூறினார்கள்.

இரண்டாவது குழு இக்காலக் கட்டத்தில் வந்தது. இதில் நாற்பது பேர்கள் இருந்தனர். ஜாரூத் இப்னு அலா அப்தீ என்ற கிறிஸ்தவரும் இருந்தார். இவரும் இஸ்லாமை ஏற்று சிறந்த முஸ்லிமாகத் திகழ்ந்தார். (ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம், ஃபத்ஹுல் பாரி)

2) தவ்ஸ் குழுவினர்

இவர்கள் ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மதீனா வந்த நேரத்தில் நபி (ஸல்) கைபர் போருக்குச் சென்றிருந்தார்கள். நபி (ஸல்) மக்காவில் இருந்த போதே தவ்ஸ் சமூகத்தைச் சார்ந்த ‘துஃபைல் இப்னு அம்ர்’ என்பவர் இஸ்லாமை ஏற்ற சம்பவத்தை முன்னரே கூறியிருக்கிறோம். இவர் மக்காவிலிருந்து சென்ற போது தனது சமூகத்தாரை இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைத்தார். அவர்கள் ஏற்கத் தயங்கினர். இதனால் கோபத்துடன் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்த இவர் “அல்லாஹ்வின் தூதரே! தவ்ஸ் சமூகத்தாரைச் சபித்து விடுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) “அல்லாஹ்வே! தவ்ஸ் சமூகத்தாருக்கு நேர்வழி காட்டு” என துஆச் செய்தார்கள். தனது சமூகத்தாரிடம் திரும்பி வந்து மீண்டும் இஸ்லாமைப் பற்றி எடுத்துக் கூறவே அவர்களில் பெரும்பாலோர் இஸ்லாமைத் தழுவினர். அதன் பின் அவர் எழுபது, எண்பது குடும்பங்களை அழைத்துக் கொண்டு மதீனா வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து கைபர் சென்றிருந்தார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க இவரும் கைபர் சென்று விட்டார்.

3) ஃபர்வா இப்னு அம்ருடைய தூதர்

ம்ஃபர்வா’ மிகச் சிறந்த போர் தளபதியாக விளங்கினார். அவர் ரோம் நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த அரபியர்களுக்கு ஆளுநராக இருந்தார். அவரது முக்கியத் தலம் ‘மஆன்’ மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஷாம் நாட்டுப் பகுதிகளாகும். ஹிஜ்ரி 8, முஃதா போரில் முஸ்லிம்கள் ரோமர்களை எதிர்த்துத் துணிவுடன் போராடினர். முஸ்லிம்களின் இந்த வீர தீரத்தையும் மன உறுதியையும் பார்த்து ஆச்சரியமடைந்து இஸ்லாமால் அவர் கவரப்பட்டார். தான் முஸ்லிமானதைத் தெரிவிப்பதற்காக ஒரு தூதரை அனுப்பினார். நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக ஒரு கோவேறு கழுதையையும் அனுப்பி வைத்தார். இவர் முஸ்லிமான செய்தி கேட்ட ரோமர்கள் அவரைச் சிறையிலடைத்து துன்புறுத்தி, “மார்க்கமா? அல்லது மரணமா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்!” என்றனர். அவரோ மார்க்கத்தை தேர்ந்தெடுத்தார். ஃபலஸ்தீனில் ‘அஃபரா’ என்ற கிணற்றுக்கருகே ரோமர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து தலையைக் கொய்தனர். (ஜாதுல் மஆது)

4) சுதா குழுவினர்

ஹிஜ்ரி 8ல் ஜிஃரானாவிலிருந்து (ஹுனைன் போர் முடிந்து) நபி (ஸல்) மதீனா திரும்பிய பின் இக்குழுவினர் வந்தனர். இதன் விவரமாவது: யமன் தேசத்தில் சுதா கிளையினர் வசிக்கும் பகுதிக்குச் செல்லுமாறு நபி (ஸல்) நானூறு வீரர்களை அனுப்பினார்கள். இவர்கள் ‘கனாத்’ பள்ளத்தாக்குடைய முற்பகுதியில் தங்கினர். முஸ்லிம்களின் வருகையை அறிந்த சுதா சமூகத்தைச் சார்ந்த ஜியாத் இப்னு ஹாரிஸ் என்பவர், நபி (ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் எனக்குப் பின்னால் இருக்கும் எனது சமூகத்தார் சார்பாக வந்துள்ளேன். நான் எம் சமூகத்தாருக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். தங்களுடைய படையைத் திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

நபி (ஸல்) தங்களது படையை திரும்ப அழைத்துக் கொண்டார்கள். ஜியாத் தமது சமூகத்தாரிடம் வந்து நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்கு ஆர்வமூட்டினார். அவர்களில் பதினைந்து நபர்கள் தயாராகி நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க மதீனா வந்தனர். நபி (ஸல்) அம்மக்களுக்கு இஸ்லாமை எடுத்துக் கூற, அவர்கள் முஸ்லிம்களாயினர். அதன் பின் தமது சமூகத்தாரிடம் வந்து இஸ்லாமிய அழைப்புப் பணி மேற்கொண்டதால் அம்மக்களில் பலர் முஸ்லிம்களாயினர். நபி (ஸல்) இறுதி ஹஜ்ஜுக்காக வந்த போது அவர்களில் நூறு பேர்கள் நபி (ஸல்) அவர்களுடன் கலந்து கொண்டனர்.

5) கஅப் இப்னு ஜுஹைர் வருகை

அரபியரின் பிரபலமான கவிக் குடும்பத்தில் பிறந்தவரான இவரும் புகழ்பெற்ற கவிஞராகத் திகழ்ந்தார். இவர் நபி (ஸல்) அவர்களைத் தன் கவிகள் மூலம் காயப்படுத்திக் கொண்டிருந்தார். நபி (ஸல்) ஹிஜ்ரி 8ல், தாயிஃப் போர் முடிந்து மதீனா திரும்பிய பின் கஅப் இப்னு ஜுஹைருக்கு அவரது சகோதரர் ஃபுஜைர் இப்னு ஜுஹைர் கடிதம் ஒன்று எழுதினார். அதில், “தன்னை இகழ்ந்து கவிபாடி நோவினை தந்த பலரை மக்காவில் நபி (ஸல்) கொன்று விட்டார்கள். நபியவர்களை இகழ்ந்து வந்த குறைஷிகளில் பலர், தப்பித்தோம்! பிழைத்தோம்! என பல இடங்களுக்கு வெருண்டோடினர். உனக்கு உயிர் மேல் ஆசையிருந்தால் நபி (ஸல்) அவர்களிடம் உடனே செல்! மன்னிப்புக் கோரி வருபவரை நபி (ஸல்) கொல்ல மாட்டார்கள். அவ்வாறில்லையெனில் நீ பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிடு!” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு கஅப் பதில் எழுத, அதற்கு அவரது சகோதரர் பதில் தர இவ்வாறு கடிதத் தொடர்பு இருந்து கொண்டிருந்தது. கஅப் தனது சகோதரன் கடிதங்களால் நெருக்கடியை உணர்ந்தார். அவருக்கு உயிர் மீது பயம் வந்தது. உடனே மதீனா சென்று ஜுஹைனா கிளையிலுள்ள ஒருவரிடம் விருந்தாளியாகத் தங்கினார். அவருடன் சென்று ஸுப்ஹ் தொழுகையை நிறைவேற்றிய பின் அவரது ஆலோசனைக்கிணங்க நபி (ஸல்) அவர்களிடம் சென்றமர்ந்து தனது கரத்தை நபி (ஸல்) அவர்களின் கரத்துடன் வைத்துப் பேசினார்.

நபி (ஸல்) அவர்களுக்கு இவர் யார் என்பது தெரியாது. “அல்லாஹ்வின் தூதரே! கஅப் இப்னு ஜுபைர் உங்களிடம் பாதுகாப்புத் தேடி வந்துள்ளார். அவர் தனது தவறுகளுக்காக வருந்தி மன்னிப்புக்கோரி இஸ்லாமையும் ஏற்றுக் கொண்டு விட்டார். நான் அவரை அழைத்து வந்தால் தாங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?” என்று கேட்டார். நபி (ஸல்) “ஆம்! தாராளமாக ஏற்றுக் கொள்வேன்” என்றார்கள் “அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அந்த கஅப்” என்று கூறினார். கூறியதுதான் தாமதம். அவர்மீது வேகமாகப் பாய்ந்து அவரைப் பிடித்துக் கொண்டு “அல்லாஹ்வின் தூதரே! ஆணையிடுங்கள். இவன் தலையைக் கொய்து விடுகிறேன்” என்று அன்சாரிகளில் ஒருவர் கூறினார். ஆனால் நபி (ஸல்), “நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டாம். அவரை விட்டு விடுங்கள். அவர் திருந்தி, தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு வந்துள்ளார்” எனக் கூறினார்கள். அதனால் மனங்குளிர்ந்த கஅப் நபி (ஸல்) அவர்களுக்கு முன் சில கவிதைகளைப் படித்தார்.

சுஆது பிரிந்து விட்டாள்.
இன்னும் என்னுள்ளம் நிலை குலைந்து
சுய நினைவிழந்து கைதியாய் அவள் பின் அலைகிறது.
இதைக் காப்பாற்ற முடியவில்லையே!

என்று ஆரம்பித்து,

அல்லாஹ்வின் தூதர் என்னை எச்சரித்தார்கள் என
எனக்குத் தகவல் வந்தது. அல்லாஹ்வின் தூதரிடம்
மன்னிப்பை நான் விரும்புகிறேன்.
சற்று நில்லுங்கள்! நல்லுரைகளும் விளக்கங்களும்
நிறைந்த குர்ஆன் எனும் வெகுமதியை வழங்கியவன்
உங்களுக்கு நல்வழி காட்டியுள்ளான்.
கோள் மூட்டுவோர் பேச்சால் என்னை நீங்கள்
தண்டித்து விடாதீர்கள். என்னைப் பற்றி பலவாறு
பேச்சுகள் இருப்பினும் நான் எக்குற்றமும் புரியவில்லை.
நான் இருக்கும் இவ்விடத்தில் யானை இருந்து
நான் பார்ப்பதையும் கேட்பதையும் அது கேட்டால் நடுநடுங்கிவிடும்.
ஆனால் அல்லாஹ்வின் தூதர் அதற்கு அனுமதி அருளினாலேயன்றி...
பழிவாங்கும் ஆற்றலுள்ளவன் கையில்
என் கையை வைத்து விட்டேன்.
இனி நான் அவரிடம் சண்டையிடேன்.
அவர் கூற்றை முழுமையாக ஏற்பேன்

‘உன்னைப் பற்றி பல தகவல்கள் வந்துள்ளன,
நீ விசாரணைக்குரியவன்’ எனக் கூறக் கேட்டேன்.
பல சிங்கக் காடுகளை அடுத்துள்ள ‘அஸ்ஸர்“
என்ற பள்ளத்தாக்கின் அடர்ந்த காடுகளில்
குகை கொண்ட சிங்கத்தை அஞ்சுவதை விட
நான் நபியுடன் பேசும் போது அவரை அஞ்சுகிறேன்.
நிச்சயம் நபி ஒளிமயமானவரே!
அவரால் நாமும் ஒளி பெறலாம்.
அல்லாஹ்வின் வாட்களிலே
உருவப்பட்ட இந்திய வாட்களைப் போல் நபி மிளிர்கிறார்கள்.

தனது கவியில் முஹாஜிர்களையும் கஅப் புகழ்ந்தார். ஏனெனில், குறைஷிகளில் அனைவரும் கஅபைப் பற்றி நல்லதையே கூறி வந்தனர். தன்னைக் கொல்ல வந்த அன்சாரிகளைப் பற்றி சற்று குத்தலாகக் கவி படித்தார். அன்சாரிகளைப் பற்றி அவர் கூறியதாவது:

ஈட்டிகள் காவலுடன் அழகு.
ஆண் ஒட்டகங்கள் நடப்பது போல்
(குறைஷிகள்) நடைபோடுகின்றனர்.
கருங்குட்டையர்களோ பயந்து விரண்டோடினர்.
(இது மதீனாவாசிகளைக் குறித்து கேலி செய்தது.)

ஆனால், இஸ்லாமைத் தழுவி மார்க்கத்தில் உறுதியானவுடன் அன்சாரிகளின் சிறப்புகளையும் உயர்வுகளையும் தெரிந்து கொண்டு, தான் செய்த தவறுக்காக வருந்தினார். தான் அவர்களை இகழ்ந்து படித்ததை நிவர்த்தி செய்வதற்காக அவர்களைப் புகழ்ந்து கவிதை கூறினார்.

“சிறந்த வாழ்க்கையை விரும்புவோர் என்றும்
நல்லோர் அன்சாரிகளுடன் சேரட்டும்!
அவர்கள் வாழையடி வாழையாக
நற்பண்புகளுக்கு வாரிசுகள்
சான்றோர்கள் யாரெனில்
சான்றோர்களின் மைந்தர்களே!”