பக்கம் -41-
இக்கட்டான நிலையில் இஸ்லாமிய ராணுவம்
மதீனா படையின் ஒற்றர்கள், நபி (ஸல்) ‘தஃபிரான்’ பள்ளத்தாக்கில் இருக்கும் போது அபூஸுஃப்யானின்
வியாபாரக் கூட்டம் மற்றும் மக்கா படை ஆகியவற்றின் நிலைமைகளைப் பற்றிய செய்திகளைக் கொண்டு
வந்தனர். ஒற்றர்கள் கூறிய செய்திகளை நன்கு ஆராய்ந்த பின் கண்டிப்பாக அபாயகரமான போரைச்
சந்திக்காமல் இருக்க வாய்ப்பில்லை. மேலும், முழுமையான வீரத்துடனும் துணிவுடனும் நிராகரிப்பாளர்களை
எதிர்த்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு நபி (ஸல்) வந்தார்கள். மக்கா படைகளை எதிர்க்காமல்
விட்டுவிட்டால் அந்தப் பகுதியில் அவர்கள் தங்களின் ராணுவ மற்றும் அரசியல் செல்வாக்கை
நிலைநிறுத்தி விடுவார்கள். இதனால் முஸ்லிம்களுக்கு அந்தப் பகுதி மக்களிடம் கேவலமும்
அவமானமும் ஏற்படலாம். இஸ்லாமிய அழைப்புப் பணி தனது வலிமையை இழந்து விடலாம். இஸ்லாமின்
மீது வெறுப்பும் பகைமையும் கொண்ட ஒவ்வொருவரும் முஸ்லிம்களுக்குத் தீங்கு செய்ய துணிவு
கொள்ளலாம். இவற்றை கருத்தில் கொண்டு நபி (ஸல்) மக்கா படையினரை எதிர்த்தே ஆகவேண்டுமென்ற
உறுதியான முடிவுக்கு வந்தார்கள்.
முஸ்லிம்கள் சண்டையிடாமல் தங்களின் ஊருக்குத் திரும்பி விடுவதால் மக்கா எதிரிகள் மதீனாவரை
படையெடுத்து வரமாட்டார்கள் என்பதற்கு எவ்விதமான உத்திரவாதமுமில்லை. ஆகவே, ஒருவேளை முஸ்லிம்கள்
மதீனா திரும்பியிருந்தால் அவர்களுக்கு மிகப்பெரிய அவப்பெயரும் மற்றவர்களிடம் அவர்களைப்
பற்றிய அச்சமற்றத் தன்மையும், துணிவும் பிறந்திருக்கும்.
ஆலோசனை சபை
திடீரென ஏற்பட்ட அபாயகரமான சூழ்நிலையைக் கருதி நபி (ஸல்) ராணுவத்தின் உயர்மட்ட ஆலோசனை
சபையைக் கூட்டினார்கள். அதில், தற்போதுள்ள நிலைமையைச் சுட்டிக்காட்டி தங்களது படையினருடனும்
அதன் தளபதிகளுடனும் கருத்துகளைப் பறிமாறிக் கொண்டார்கள். அப்போது சிலருடைய உள்ளங்கள்
அச்சத்தால் நடுங்கின. இரத்தம் சிந்தும்படியானப் போரை பயந்தனர். இவர்களைப் பற்றிதான்
அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:
(நபியே!) உங்களது இறைவன் உங்கள் இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உங்களை வெளியேற்றிய
சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தினர் (உங்களுடன் வர) விரும்பாதவாறே, (போர்
செய்வது அவசியம் என) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் இந்த உண்மையான விஷயத்தில்
அவர்கள் உங்களுடன் தர்க்கிக்கின்றனர். தங்கள் கண்ணால் காணும் மரணத்தின் பக்கமே அவர்கள்
ஓட்டிச் செல்லப்படுகின்றனர் போலும்! (அல்குர்ஆன் 8:5, 6)
ஆனால், படையின் தளபதிகளோ மிகத்துணிவுடன் இருந்தார்கள். அபூபக்ர் (ரழி) எழுந்து பேசினார்கள்
அழகாகப் பேசி முடித்தார்கள். பின்பு உமர் (ரழி) எழுந்து அவர்களும் அழகாகப் பேசினார்கள்.
பின்பு மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) எழுந்து பேசினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்
உங்களுக்குக் காட்டிய வழியில் செல்லுங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். அல்லாஹ்வின்
மீது சத்தியமாக! சங்கைமிகு குர்ஆனில்,
“மூஸாவே! அவர்கள் அதில் இருக்கும் வரையில் ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம்.
நீங்களும், உங்களுடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக
நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்.” (அல்குர்ஆன் 5:24)
என்று இஸ்ரவேலர் நபி மூஸா (அலை) அவர்களிடம் கூறியதைப் போல் நாங்கள் உங்களிடம் கூறமாட்டோம்.
மாறாக, நீங்களும் உங்களது இறைவனும் போர் புரியுங்கள். நாங்களும் உங்கள் இருவருடன் சேர்ந்து
போர் புரிவோம். சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பியவன் மீதாணையாக! நீங்கள் எங்களை
அழைத்துக் கொண்டு ‘பர்குல் ஃகிமாது“” என்ற இடம் வரை சென்றாலும் நாங்களும் உங்களுடன்
மிகத்துணிவுடன் வருவோம்.” இவ்வாறு மிக்தாத் (ரழி) கூறிமுடித்தார்.
அவன் வீர உரையைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் அவரைப் பாராட்டி புகழ்ந்து அவருக்காகப்
பிரார்த்தனை புரிந்தார்கள்.
இந்த மூன்று தளபதிகளும் முஹாஜிர்களில் உள்ளவர்கள். முஹாஜிர்கள் படையில் மிகக் குறைவானவர்களாக
இருந்ததால், நபி (ஸல்) அன்சாரி தளபதிகளின் கருத்துகளை அறிய விரும்பினார்கள். ஏனெனில்,
இவர்கள்தான் அதிகமாக இருந்தனர். மேலும், போரினால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அன்சாரிகளையே
அதிகம் பாதிக்கக் கூடியதாக இருக்கும். நபி (ஸல்) அகபாவில் செய்து கொண்ட உடன்படிக்கையில்
அன்சாரிகள் மதீனாவிற்கு வெளியில் சென்று போர் புரிய வேண்டுமென்ற நிபந்தனை இல்லாமலிருந்தது.
ஆகவே தான் நபி (ஸல்) அன்சாரிகளின் கருத்துகளைக் கேட்க விரும்பினார்கள். மூன்று தளபதிகளின்
பேச்சைக் கேட்டதற்குப் பின்பு அன்சாரிகளை மனதில் கொண்டு “மக்களே! எனக்கு ஆலோசனை கூறுங்கள்”
என்று பொதுவாகக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் நோக்கத்தை விளங்கிக் கொண்ட அன்சாரிகளின்
தளபதியாக இருந்த ஸஅது இப்னு முஆது (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் கேட்பது போல் தெரிகிறதே” என்றார். அதற்கு நபி (ஸல்) “ஆம்!”
என்றார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி) அவர்கள் எழுந்து பின்வருமாறு பதிலளித்தார்:
“நாங்கள் உங்களை விசுவாசித்தோம் உங்களை உண்மையானவர்கள் என நம்பினோம் நீங்கள் கொண்டு
வந்ததுதான் சத்தியமென்று சாட்சி கூறினோம் இதை ஏற்று உங்களின் கட்டளைகளைச் செவிமடுத்தோம்,
அதற்குக் கட்டுப்படுவோம் என்று உடன்படிக்கையும் ஒப்பந்தமும் செய்து கொடுத்தோம் எனவே,
நீங்கள் விரும்பிய வழியில் செல்லுங்கள் உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய இறைவன்
மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு கடலுக்குள் மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம்
எங்களிலிருந்து ஒருவரும் பின் தங்கிவிட மாட்டார் நாளை எங்களுடன் எதிரிகளை நீங்கள் சந்திப்பதை
நாங்கள் வெறுக்கவில்லை நிச்சயமாக போரில் நாங்கள் உறுதியுடன் இருப்போம் எதிரிகளைச் சந்திப்பதில்
உண்மை யாளர்களாக இருப்போம் உங்களுக்குக் கண் குளிர்ச்சி தருபவற்றை அல்லாஹ் எங்களால்
வழங்கலாம் அல்லாஹ்வுடைய அருளுடன் எங்களை அழைத்துச் செல்லுங்கள்.”
மற்றுமொரு அறிவிப்பில் வந்துள்ளது: “அல்லாஹ்வின் தூதரே! தங்களின் இல்லங்களில் இருந்து
கொண்டு உங்களுக்கு உதவி செய்வது மட்டுமே கடமை என அன்சாரிகள் நினைப்பார்கள் என்று நீங்கள்
அஞ்சுகிறீர்களா? அன்சாரிகளின் சார்பாக நான் பேசுகிறேன் அவர்களின் சார்பாக நான் பதிலளிக்கிறேன்
நீங்கள் விரும்பிய இடத்திற்குப் பயணித்துச் செல்லுங்கள் நீங்கள் விரும்பியவருடன் உறவு
வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியவன் உறவை வெட்டிவிடுங்கள் நீங்கள் விரும்பியதை
எங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களுக்குக் கொடுங்கள்
நீங்கள் எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டது நீங்கள் எங்களுக்காக விட்டுவிட்டதை விட
மேலானதாகும் நீங்கள் எங்களுக்கு எவ்விஷயத்திலும் எதைக் கட்டளையிடுகிறீர்களோ அது விஷயத்தில்
எங்களின் செயல்கள் உங்களின் கட்டளைக் கிணங்கத்தான் இருக்கும் அல்லாஹ்வின் மீதாணையாக!
நீங்கள் எங்களை ‘கிம்தான்’ பகுதியில் உள்ள ‘பர்க்’ என்ற இடம் வரை அழைத்துச் சென்றாலும்
நாங்கள் உங்களுடன் வருவோம் அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களைக் கடலுக்குள் அழைத்துச்
சென்று மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம்” என்று ஸஅது இப்னு முஆது, நபி (ஸல்) அவர்களிடம்
கூறினார்கள்.
ஸஅதின் பேச்சையும் அவன் உற்சாகத்தையும் கண்ட நபி (ஸல்) அவர்கள் மிகுந்த ஆனந்தமடைந்தார்கள்.
பின்பு “நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் இரண்டு கூட்டங்களில் ஒன்றை
எனக்கு வாக்களித்துள்ளான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அக்கூட்டத்தினர் வெட்டுண்டு விழும்
இடங்களை நான் இப்போது பார்ப்பதைப் போன்று இருக்கின்றது” என்று கூறினார்கள்.
இஸ்லாமியப் படை பயணத்தைத் தொடர்கிறது
பின்பு நபி (ஸல்) ‘ஃதபிரான்’ என்ற இடத்திலிருந்து புறப்பட்டு, அஸாஃபிர் வழியாகச் சென்று,
‘தப்பா’ என்ற இடத்தை அடைந்து, பின்பு அங்கிருந்து மலை போன்ற மிகப் பெரிய மணற் குன்றான
ஹன்னானை வலப்பக்கம் விட்டுவிட்டு பத்ருக்குச் சமீபமாக வந்திறங்கினார்கள்.
கண்காணிக்கும் பணியில் நபியவர்கள்
அங்கிருந்து நபி (ஸல்) தனது குகைத் தோழர் அபூபக்ருடன் மக்கா படைகளைக் கண்காணிக்கப்
புறப்பட்டார்கள். அவ்விருவரும் மக்கா படையினர் எங்கு கூடாரமிட்டுள்ளார்கள் என்பதை தெரிந்து
கொள்ள சுற்றிக் கொண்டிருக்கும் போது ஒரு வயது முதிர்ந்தவரைப் பார்த்தார்கள். அவரிடம்
“குறைஷிகளைப் பற்றியும் முஹம்மது மற்றும் அவரது தோழர்களைப் பற்றியும் உமக்குத் தெரியுமா?”
என்று விசாரித்தார்கள். அவர் தங்களை யார் என விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவர்கள்
இரு படைகளைப் பற்றியும் விசாரித்தார்கள். ஆனால், அந்த வயது முதிர்ந்தவரோ “நீங்கள் எந்தக்
கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை சொல்லாத வரை நான் உங்களுக்கு எந்த செய்தியையும் கூறமாட்டேன்”
என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நாங்கள் கேட்டதை நீர் கூறினால் நாங்கள் யார் என்பதை
உமக்குக் கூறுவோம்” என்றார்கள். அதற்கு அந்த வயோதிகர் “அவ்வாறுதானே!” என்று கேட்க அதற்கு
நபி (ஸல்) “ஆம்!” என்றார்கள்.
அதற்குப் பின் அந்த வயோதிகர் “முஹம்மதும் அவன் தோழர்களும் இன்ன நாளில் மதீனாவிலிருந்து
வெளியேறினார்கள் என்று எனக்கு செய்தி கிடைத்தது. எனக்கு இந்த செய்தியைக் கூறியவர் உண்மையைக்
கூறியிருந்தால் அவர்கள் இன்று இந்த இடத்தில் இருப்பார்கள்” என்று மதீனாவின் படை இருந்த
இடத்தை சரியாகக் கூறினார். மேலும், “குறைஷிகள் இந்த நாளில் மக்காவிலிருந்து கிளம்பினார்கள்
என்று எனக்கு செய்தி கிடைத்தது. எனக்கு இச்செய்தியைக் கூறியவர் உண்மையைக் கூறியிருந்தால்
அவர்கள் இன்று இன்ன இடத்தில் இருப்பார்கள்” என்று மக்கா படை தங்கியிருந்த இடத்தைச்
சரியாகக் கூறினார்.
“பின்பு நீங்கள் யார்?” என்று அவர் கேட்க, நபி (ஸல்) “நாங்கள் (மாஃ) தண்ணீலிருந்து
வந்திருக்கிறோம்” என்று கூறி, அங்கிருந்து உடனே சென்றுவிட்டார்கள். இதைக் கேட்ட அந்த
வயோதிகர் “என்ன! தண்ணீலிருந்து வந்தவர்களா? எந்தத் தண்ணீலிருந்து...? இராக் நாட்டு
தண்ணீலிருந்தா...?” என்று புரியாமல் புலம்பிக் கொண்டிருந்தார்.
மக்கா படையின் முக்கிய விஷயங்களை அறிதல்
அன்றைய மாலை எதிரிகளைப் பற்றி மேலும் பல புதிய தகவல்களை அறிந்து வருவதற்காக முஹாஜிர்களில்
உள்ள மூன்று முக்கிய தளபதிகளை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அவர்கள் அலீ இப்னு அபூ
தாலிப், ஸுபைர் இப்னு அவ்வாம், ஸஅது இப்னு அபீவக்காஸ் (ரழி) ஆவார்கள். இவர்கள் பத்ரின்
தண்ணீர் உள்ள இடத்திற்குச் சென்றபோது அங்கு இருவர் மக்கா படைகளுக்காக தண்ணீர் எடுத்துக்
கொண்டிருந்தனர். அவர்களைக் கைது செய்து நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அப்போது
நபி (ஸல்) தொழுது கொண்டிருந்தார்கள். அவ்விருவரிடமும் இஸ்லாமிய படையினர் விசாரிக்கவே
அவர்கள், “நாங்கள் குறைஷிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல வந்திருக்கிறோம்” என்றனர்.
இவர்கள் அபூஸுஃப்யானின் கூட்டத்தினராக இருக்கலாம் என்றெண்ணி இவர்களின் பதிலை ஏற்றுக்
கொள்ளாமல் கடுமையாக அடித்தனர். அடிக்குப் பயந்த அவ்விருவரும் “ஆம்! நாங்கள் அபூஸுஃப்யானின்
கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான்” என்றனர். உடனே அவ்விருவரையும் அடிக்காமல் விட்டுவிட்டனர்.
நபி (ஸல்) தொழுது முடித்தவுடன் தங்களது படையினரை கண்டிக்கும் விதமாக “அவ்விருவரும்
உங்களிடம் உண்மை கூறியபோது அடித்தீர்கள். ஆனால் பொய் கூறியபோது அவர்களை விட்டு விட்டீர்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்விருவரும் உண்மையைத்தான் கூறினார்கள். அவர்கள் குறைஷிகளுக்காக
வந்தவர்களே!” என்று கூறினார்கள்.
பின்பு அவ்விருவரையும் அழைத்து “குறைஷிகளைப் பற்றி நீங்கள் எனக்கு சொல்லுங்கள்” என்று
நபி (ஸல்) கேட்கவே, “நீங்கள் பார்க்கும் அந்தப் பெரிய மேட்டிற்குப் பின் குறைஷிகள்
இருக்கிறார்கள்” என்றனர். “அவர்கள் எத்தனை நபர்?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். “மிக
அதிகமாக இருக்கின்றனர்” என்று அவர்கள் கூறினார்கள். “அவர்களிடம் எப்படிப்பட்ட தயாரிப்புகள்
உள்ளன” என்று நபி (ஸல்) கேட்கவே, அவர்கள் “தெரியாது” என்று கூறினர். நபி (ஸல்) “அவர்கள்
ஒவ்வொரு நாளும் எத்தனை ஒட்டகங்கள் அறுக்கிறார்கள்?” என்று கேட்க, அதற்கு அவர்கள் “ஒரு
நாள் ஒன்பது. மறுநாள் பத்து ஒட்டகங்கள் அறுக்கிறார்கள்” என்று கூறினார்கள். அப்போது
நபி (ஸல்) “அவர்கள் தொள்ளாயிரத்திலிருந்து ஆயிரம் நபர்கள் வரை இருக்கலாம்” என்றார்கள்.
பின்பு அவர்களிடம் “குறைஷி பிரமுகர்களில் யார் யார் வந்திருக்கிறார்கள்?” என்று நபி
(ஸல்) கேட்க “உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, அபுல் பக்த இப்னு ஹிஷாம், ஹக்கீம்
இப்னு ஜாம், நவ்ஃபல் இப்னு குவைலித், ஹாரிஸ் இப்னு ஆமிர், துஅய்மா இப்னு அதி, நழ்ர்
இப்னு ஹாரிஸ், ஜம்ஆ இப்னு அஸ்வத், அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், உமய்யா இப்னு கலஃப் ஆகியோரும்
மற்றும் பலரும் வந்திருக்கிறார்கள்” என அவ்விருவரும் கூறினர்.
நபி (ஸல்) மக்களை நோக்கி “இதோ! மக்கா தனது ஈரக் குலைகளை உங்களுக்கு முன் கொண்டு வந்திருக்கிறது”
என்றார்கள்.
மழை பொழிதல்
அல்லாஹ் அன்றிரவு மழையை இறக்கினான். அந்த மழை இணைவைப்பவர்களுக்கு அடைமழையாக இருந்தது.
அது அவர்களை முன்னேறவிடாமல் தடுத்தது. ஆனால், முஸ்லிம்களுக்கோ அது மென்மையான தூறலாக
இருந்தது. அம்மழையினால் அல்லாஹ் முஸ்லிம்களைச் சுத்தப்படுத்தினான். ஷைத்தானின் அசுத்தத்தை
அவர்களை விட்டும் அகற்றினான். அங்கிருந்த மணற்பாங்கான பூமியை முஸ்லிம்கள் தங்குவதற்கு
வசதியாக இறுக்க மாக்கிக் கொடுத்தான். மேலும், அவர்களது உள்ளங்களையும் பாதங்களையும்
உறுதியாக்கினான்.