பக்கம் -63-
நழீர் இனத்தவருடன் போர் (ஹிஜ்ரி 4 ரபீஉல் அவ்வல், கி.பி. 625
ஆகஸ்டு)
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வளர்ச்சியைப் பார்த்து யூதர்கள் உள்ளுக்குள் எரிந்தனர்.
முஸ்லிம்களை எதிர்க்க ஆற்றலும் துணிவும் இல்லாததால் சூழ்ச்சி செய்வதிலும், சதித்திட்டம்
தீட்டுவதிலும் ஈடுபட்டு வந்தனர். தங்களின் பகைமை மற்றும் குரோதத்தையும் அவ்வப்போது
வெளிப்படுத்தினர். போர் புரியாமல் வேறு பலவகை தந்திரங்களைக் கொண்டு முஸ்லிம்களுக்கு
தொந்தரவு கொடுத்தனர். தங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் உடன்படிக்கை மற்றும்
ஒப்பந்தங்கள் இருந்தும் அதையெல்லாம் சிறிதும் மதிக்காமல் நடந்தனர். கைனுகா குடும்பத்தைச்
சேர்ந்த யூதர்களுக்கு நேர்ந்த கதியையும், கஅபு இப்னு அஷ்ரஃபுக்கு நேர்ந்த கதியையும்
பார்த்ததும் இவர்கள் தங்களின் அட்டூழியங்களை அடக்கிக்கொண்டு விஷமத்தனங்களை நிறுத்திக்
கொண்டனர்.
ஆனால், உஹுத் போருக்குப்பின் இவர்களுக்கத் துணிவு பிறந்தது. பகைமை மற்றும் மோசடியையும்
வெளிப்படையாக செய்யத் துவங்கினர். மக்காவிலுள்ள இணைவைப்பவர்களுடனும், மதீனாவிலுள்ள
நயவஞ்சகர்களுடனும் தங்களின் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான
செயல்களில் குதித்தனர். (ஸுனன் அபூதாவூது)
நபி (ஸல்) இந்த யூதர்கள் குறித்து மிகுந்த பொறுமையைக் கடைப்பிடித்தார்கள். ஆயினும்,
ரஜீஃ, பிஃரு மஊன் ஆகிய நிகழ்ச்சிகளுக்குப் பின் இவர்களுக்கு புது துணிவு பிறந்தது.
அதனால் நபியவர்களைக் கொன்றுவிட திட்டம் தீட்டினர்.
நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்கள் சிலரை அழைத்துக் கொண்டு இவர்களிடம் வந்தார்கள்.
“அம்ர் இப்னு உமையா ழம்ரி என்ற தனது தோழரால் தவறுதலாக கொல்லப்பட்ட கிலாப் குலத்தவர்களின்
குடும்பத்தவர்களுக்கக் கொடுக்க வேண்டும். அதற்காக தங்களால் ஆன உதவிகளைச் செய்யும்படி”
நபியவர்கள் கோரினார்கள். யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் இதற்குமுன் செய்யப்பட்ட
உடன்படிக்கையின்படி நஷ்டஈடு கொடுக்கும் விஷயத்தில் முஸ்லிம்களுக்கு யூதர்கள் உதவி செய்ய
வேண்டும் என்பதும் ஒன்று. காலங்காலமாக சூழ்ச்சிக்கு பெயர் போன வஞ்சக யூதர்கள் நபியவர்களிடம்
“இங்கு அமருங்கள்! நீங்கள் வந்த தேவையை நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம்” என்றனர். இவர்கள்,
கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்த்து நபியவர்கள் அவர்களின் வீட்டுச்
சுவரில் சாய்ந்து உட்கார்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்ர், உமர், அலீ (ரழி)
மற்றும் சில தோழர்களும் இருந்தனர்.
யூதர்கள் தங்களுக்குள் தனிமையில் சந்தித்தனர். அவர்கள் மீது விதிக்கப்பட்ட கேட்டை ஷைத்தான்
அவர்களுக்க அலங்கரித்து அதை செய்யத் தூண்டினான். எனவே, அவர்கள் நபியவர்களை கொன்றுவிட
சதித்திட்டம் தீட்டினர். திருகைக் கல்லை எடுத்து வீட்டுக் கூரைக்கு மேல் ஏறி முஹம்மதின்
தலை மீது போட்டு தலையை நசுக்கி கொன்றுவிடலாம் என் ஒருவன் ஆலோசனைக் கூறினான். அதை அனைவரும்
ஆமோதித்தனர். இதைச் செய்ய வழிகேடன் அம்ர் இப்னு ஜஹாஷ் என்ற விஷமி ஆயத்தமானான். ஆனால்
ஸலாம் இப்னு மிஷ்கம் என்பவர் “அவ்வாறு செய்ய வேண்டாம்” என்று அவர்களைத் தடுத்தார்.
மேலும் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் தீட்டும் திட்டம் அவருக்கு அறிவிக்கப்பட்டு
விடும். அது நமக்கும் அவருக்குமிடையில் உள்ள உடன்படிக்கையை முறிப்பதாகி விடும்” என்று
எச்சரித்தார். எனினும், தங்களது சதிதிட்டத்தை நிறைவேற்றுவதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.
அவர்களின் இந்தச் சதித்திட்டத்தை அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வின் புறத்திலிருந்து
நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல்(அலை) அறிவித்தார். உடனடியாக அங்கிருந்து எழுந்து நபியவர்களும்
அவர்களது தோழர்களும் மதீனா வந்தடைந்தனர். “நபியே! நீங்கள் எழுந்தது எதற்காக என்பதை
நாங்கள் அறிந்து கொள்ளவில்லையே” என வினவினார்கள். நபியவர்கள் யூதர்கள் செய்த சதியைத்
தோழர்களுக்கு அறிவித்தார்கள்.
இச்சம்பவத்திற்குப் பின் நபி(ஸல்) அவர்கள் தனது தோழர் முஹம்மது இப்னு மஸ்லமாவை நழீர்
இனத்தவரிடம் அனுப்பி, “மதீனாவிலிருந்து வெளியேறிவிடுங்கள்; எங்களுடன் மதீனாவில் நீங்கள்
தங்கக் கூடாது; இனி மதீனாவில் வசிக்கக் கூடாது; பத்து நாட்கள் மட்டும் நான் உங்களுக்கு
அவகாசம் தருகிறேன்; அதற்கு மேலும் யாராவது மதீனாவில் தங்கியிருந்தால் அவரது கழுத்தை
வெட்டி விடுவேன்” என்று கூறும்படி சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்களின் இக்கட்டளையை யூதர்கள் ஏற்றே ஆகவேண்டி இருந்தது. மதீனாவை விட்டுச்
செல்ல தேவையான தயாரிப்புகளைச் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நயவஞ்சகர்ளின் தலைவன்
இப்னு உபை யூதர்களிடம் தூது அனுப்பி, “நீங்கள் உங்களது இல்லங்களில் இருந்து கொண்டு
உங்களைப் பாதுகாத்து கொள்ளுங்கள். உங்களது இல்லங்களிலிருந்து வெளியேறவேண்டாம். என்னுடன்
இரண்டாயிரம் வீரர்கள் தயாராக உள்ளனர். முஹம்மது உங்கள் மீது போர் தொடுத்தால் அந்த வீரர்கள்
உங்களுடன் சேர்ந்து கொண்டு உங்கள் உயிரைக் காக்க தங்களின் உயிரையும் தியாகம் செய்யத்
தயாராக உள்ளனர். மேலும், குரைளா மற்றும், கத்ஃபான் கோத்திரத்தில் உள்ள உங்களது நண்பர்களும்
உங்கள் உதவிக்கு வருவார்கள்” என்று கூறினான்.
இப்னு உபைபின் மேற்கூறப்பட்ட கூற்றை விவதித்து, இந்த குர்ஆன் வசனம் இறங்கியது.
(நபியே!) நயவஞ்சகம் செய்வோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையோரிலுள்ள
நிராகரித்துக் கொண்டிருப்போரான தம் சகோதரர்களிடம் “நீங்கள் வெளியேற்றப்பட்டால், உங்களுடன்
நாங்களும் நிச்சயமாக வெளியேறுவோம்; அன்றியும், (உங்களுக்கெதிராக) நாங்கள் எவருக்கும்,
எப்பொழுதும் நாம் வழிப்பட மாட்டோம்; மேலும், உங்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால்,
நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்” என்று கூறுகின்றனர்; ஆனால் நிச்சயமாக
அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியங் கூறுகிறான். அல்குர்ஆன் 59:11
மதீனாவை விட்டு வெளியேறிவிடலாம் என்றிருந்த யூதர்களுக்கு இதனால் துணிவு பிறந்தது. எதிர்த்து
போரிடுவோம் என்று முடிவு செய்தனர். நயவஞ்சகர்களின் தலைவன் கூறியதைக் கேட்டு நப்பாசை
கொண்ட யூதர்களின் தலைவன் ஹை இப்னு அக்தப் நபி (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி “நாங்கள் எங்களின்
இல்லங்களிலிருந்து வெளியேற மாட்டோம். உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்துகொள்!” என்று
கூறினான்.
உண்மையில் இந்நிலைமை முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகச் சிக்கலானதாகவே இருந்தது. முஸ்லிம்களின்
மிகச் சிரமமான இக்காலகட்டத்தில் எதிரிகளிடம் மோதுவதும், சண்டை செய்வதும் ஆபத்தான முடிவை
உண்டாக்கலாம்; மற்ற அரபுகள் ஒருபக்கம் தங்களைத் தாக்குகிறார்கள். மேலும், தங்களின்
அழைப்புப் பணிக்காக அனுப்பப்படும் குழுக்களையும் சதி செய்து கொன்று விடுகிறார்கள் என்பதை
முஸ்லிம்கள் உணர்ந்திருந்தனர். இதுமட்டுமின்றி நழீர் கோத்திரத்தைச் சேர்ந்த யூதர்கள்
ஓரளவுக்கு தேவையான வலிமையுடன் விளங்கியதால் அவர்கள் சரணடைவது அடிபணிவது சற்று கடினமான
விஷயம்தான். அவர்களுடன் போரிடுவது பல இன்னல்களை சந்திக்கக் காரணமாகலாம். ஆயினும், இதற்கெல்லாம்
முஸ்லிம்கள் தளர்ந்து விடவில்லை. பிஃரு மஊனாவின் நிகழ்ச்சியும் அதற்கு முன் நடந்த நிகழ்ச்சியும்
முஸ்லிம்களின் உணர்ச்சிகளை அதிகம் தூண்டின. தங்களின் தனி நபர்களுக்கும் குழுக்களுக்கும்
ஏற்படும் மோசடி மற்றும் வஞ்சகச் செயல்களை முடிவுக்குக் கொணடு வந்து அதை செய்பவர்களுக்கும்,
செய்யத் தூண்டுபவர்களுக்கும் நல்ல பாடம் புகட்ட வேண்டும்; நபி (ஸல்) அவர்களையே கொல்லத்
துணிந்த நழீர் இனத்தவரிடம் போர் செய்தே தீர வேண்டும் என்று முடிவு செய்தனர். அதனால்
எத்தகைய விளைவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கத் துணிந்தனர்.
நபி (ஸல்) அவர்களுக்கு ஹை இப்னு அக்தப் கூறிய பதில் கிடைத்தவுடன் தக்பீர் (அல்லாஹ்
அக்பர் என்று) முழங்கினார்கள். தோழர்களும் தக்பீர் முழங்கினர். பின்பு நழீர் இனத்தவரிடம்
சண்டையிட ஆயத்தமானார்கள். மதீனாவில் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக
நியமித்தார்கள். அலீ (ரழி) படையின் கொடியை ஏந்தியிருக்க நபியவர்கள் படையுடன் புறப்பட்டுச்
சென்று யூதர்களை முற்றுகையிட்டார்கள். நழீர் இனத்தவர் தங்களின் கோட்டைகளுக்குள் புகுந்து
கொண்டனர். முஸ்லிம்களை நோக்கி அம்புகளையும், கற்களையும் வீசி எறிந்து தாக்கினர். இதற்கு,
அவர்களது தோட்டங்களும் பேரீத்த மரங்களும் அவர்களுக்கு சாதகமாக இருந்தன. எனவே, அவர்களின்
தோட்டங்களையும் பேரீத்த மரங்களையும் வெட்டி எரித்து விடும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதைப் பற்றியே ஹஸ்ஸான் கூறுகிறார்.
புவைராவில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிவது
பனூ லுஅய் கூட்டத் தலைவர்களுக்கு மிக எளிதாகிவிட்டது.
இவர்களின் பேரீத்த தோட்டத்தின் பெயர்தான் புவைரா என்பது. அல்லாஹ் இதுகுறித்தே இந்த
வசனத்தை இறக்கினான்.
நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களின் மீது அவை
நிற்கும்படியாக விட்டு விட்டதோ அல்லாஹ்வின் அனுமதியாலும், அந்த ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை)
அவன் இழிவு படுத்துவதற்காகவுமே தான். அல்குர்ஆன் 59:5
குரைளா யூதர்கள் உதவிக்கு முன் வரவில்லை. அவ்வாறே இவர்களின் நண்பர்கள் கத்ஃபான் கிளையைச்
சேர்ந்தவர்களும் மற்றும் அப்துல்லாஹ் இப்ன உபைய்யும் உதவிக்கு வராமல் விலகிக் கொண்டனர்.
எனவேதான் இவர்களின் இந்த நடத்தையை அல்லாஹ் உவமானத்துடன் கூறுகிறான்.
(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (அவன்) மனிதனை நோக்கி:
“நீ (இறைவனை) நிராகரித்து விடு” என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் “நான்
உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய
அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்றான். அல்குர்ஆன் 59:16
முற்றுகை 6 அல்லது 15 இரவுகள் நீடித்தது. அல்லாஹ் யூதர்களின் உள்ளத்தில் பயத்தையும்
நடுக்கத்தையும் போட்டான். “ஆயுதங்களைக் கீழே போட்டு நாங்கள் பணிந்து விடுகிறோம்; நாங்கள்
மதீனாவை விட்டு வெளியேறி விடுகிறோம்” என்று நபியவர்களிடம் தூதனுப்பினார்கள்.
அதற்க நபி(ஸல்) அவர்கள் “உங்களையும் உங்கள் பிள்ளை குட்டிகளையும் அழைத்துக் கொண்டு
இங்கிருந்து சென்று விடுங்கள்; ஒட்டகங்கள் சுமக்கும் அளவுள்ள சாமான்களையும் உங்களுடன்
நீங்கள் எடுத்துச் செல்லலாம்; ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது” என்று கூறினார்கள்.
இந்த நிபந்தனைக்கு அவர்கள் அடிபணிந்தனர். தங்களுக்குப் பிறகு தங்கள் வீடுகளை எவரும்
பயன்படுத்தக் கூடாது என்பதற்காக அவற்றை அழித்தனர். வீட்டு கதவுகளையும் ஜன்னல்களையும்
பெயர்த்து தங்களுடன் எடுத்து கொண்டனர். அவர்களில் சிலரோ ஆணிகளையும், முகட்டில் இருந்த
பலகைகளையும், முளைக் கம்புகளையும் கூட தங்களுடன் எடுத்துக் கொண்டனர். பின்பு பெண்கள்,
சிறுவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு 600 ஒட்டகைகளில் புறப்பட்டனர். ஹை இப்னு அக்தப்,
ஸல்லாம் இப்னு அபூஹுகைக் போன்ற தலைவர்களும் மற்றும் பெரும்பாலான யூதர்களும் கைபர் சென்று
தங்கினர். மற்றவர்கள் ஷாம் நாட்டிற்குச் சென்றனர். அவர்களில் இருவர் மட்டும் இஸ்லாமை
ஏற்றுக் கொண்டதால் தங்களது சொத்து செல்வங்களுடன் மதீனாவில் தங்க அனுமதிக்கப்பட்டனர்.
நபி (ஸல்) அவர்கள் இம்மக்களின் ஆயுதங்கள், அவர்கள வீடுகள், நிலங்கள், செல்வங்கள் என
அனைத்தையும் கைப்பற்றினார்கள். மொத்தம் 50 கவச ஆடைகளும், 50 தலைக் கவசங்களும், 340
வாட்களும் இருந்தன.
இந்த யூதர்களின் செல்வங்கள், சொத்துகள், வீடுகள், நிலங்கள் அனைத்தையும் அல்லாஹ் நபி
(ஸல்) அவர்களுக்கு மட்டும் அருளினான். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதை செய்து கொள்ள
முழு அனுமதியளித்தான். அதை ஐந்து பங்காக ஆக்க வேண்டும் என்று நபியவர்களுக்கு கட்டளையிடவில்லை.
ஏனெனில், இது சண்டையின்றி கிடைத்த பொருளாகும். இப்பொருட்களை முந்திய முஹாஜிர்களுக்கு
(மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறியவர்களுக்கு) மட்டும் நபியவர்கள் பங்கு வைத்தார்கள்.
ஆனால், அன்சாரிகளில் ஏழையாக இருந்த அபூ துஜான, ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரழி) இருவருக்கும்
அதில் பங்கு கொடுத்தார்கள். அதிலிருந்துதான் நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினருக்கு
ஓராண்டுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து வந்தார்கள். மீதமிருந்ததை அல்லாஹ்வின் பாதையில்
போருக்குப் பயன்படுத்தினார்கள்.
இப்போர் குறித்த விவரங்களை முழுவதுமாக ஹஷ்ர் என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் இறக்கினான்.
இந்த அத்தியாயத்தில் “யூதர்கள் எவ்வாறு விரட்டியடிக்கப்பட்டனர்; நயவஞ்சகர்களின் கொள்கையும்
பழக்கமும் எவ்வாறனது? போரின்றி கிடைக்கும் செல்வத்தின் சட்டம் என்ன?” போன்ற விவரங்கள்
கூறப்பட்டன. மேலும் முஹாஜிர்கள், அன்சாரிகள் குறித்து இந்த அத்தியாயத்தில் புகழ்ந்து
கூறியிருக்கிறான். போர் நலன்களை கருத்தில் கொண்டு எதிரிகளுக்குச் சொந்தமான மரங்களை
வெட்டுவதும், கொளுத்துவதும் சரியானதே; இது விஷமத்தனமாக ஆகாது என்ற அல்லாஹ் இந்த அத்தியாயத்தில்
கூறியுள்ளான். அத்துடன் முஸ்லிம்கள் எப்போதும் இறையச்சத்தைக் கடைப்பிடித்து, மறுமைக்கான
நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு இறுதியாக தனது புகழ்ச்சியைக்
கூறி உயர்வுமிக்க தனது பெயர்களை விவரித்து அத்தியாயத்தை நிறைவு செய்கிறான்.
இந்த அத்தியாயத்தில் நழீர் இன யூதர்களை குறித்து முழுவதுமாக கூறப்பட்டிருப்பதால் இந்த
அத்தியாயத்தை நழீர் என்றும் கூறலாம் என இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள். (ஸஹீஹுல்
புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) மற்றும் பெரும்பான்மையான வரலாற்று ஆசிரியர்கள் இப்போர் குறித்து
கூறியதை நாம் இதுவரை பார்த்தோம்.
அபூதாவது, அப்துர் ரஜாக் (ரஹ்) மற்றும் பல அறிஞர்கள் இச்சம்பவத்திற்க வேறு பல காரணங்களைக்
கூறுகின்றனர். அஃதாவது: பத்ர் போருக்குப் பின் குறைஷிகள் நழீர் இன யூதர்களுக்க கடிதம்
எழுதினர். அதில் “நீங்கள் மதீனாவில் நல்ல பாதுகாப்புடன் வாழ்கிறீர்கள். உங்களிடம் கோட்டைகளும்
அரண்களும் உள்ளன. எனவே, அங்கு இருக்கும் எங்களுடைய ஊர்வாசிகளிடம் நீங்கள் போர் செய்யுங்கள்.
அவ்வாறு செய்யாவிட்டால் நாங்கள் உங்களுக்க பல வகையில் தொல்லைகள் தருவோம். உங்களின்
பெண்களை எங்களை விட்டும் நீங்கள் காப்பாற்றிக் கொள்ள முடியாது.” இவ்வாறு அக்கடிதத்தில்
குறைஷிகள் குறிப்பிட்டனா.
இக்கடிதத்தைப் பார்த்தவுடன் நழீர் கிளையினர் நபி (ஸல்) அவர்களுடன் செய்த உடன்படிக்கைக்குத்
துரோகம் செய்ய முடிவெடுத்தனர். அவர்கள் நபியவர்களிடம் தூது அனுப்பி, “நீங்கள் உங்களுடைய
30 தோழர்களுடன் எங்களிடம் வாருங்கள். நாங்கள் எங்களுடைய 30 அறிஞர்களை அழைத்துக் கொண்டு
வருகிறோம். குறிப்பிட்ட ஓர் இடத்தில் நாம் சந்திப்போம். நீங்கள் கூறுவதை எங்களது பாதிரிகள்
கேட்பார்கள். அவர்கள் நீங்கள் கூறுவதை உண்மை என்று ஆமோதித்து உங்களை நம்பிக்கை கொண்டால்
நாங்கள் அனைவரும் உங்களை நம்பிக்கை கொள்வோம்” என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள் 30 தோழர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். யூதர்களும் தங்களது
30 பாதிரிகளுடன் வந்தனர். இரு குழுக்களும் ஒரு திறந்த வெளி மைதானத்திற்கு வந்தவுடன்
யூதர்கள் தங்களுக்குள், “இப்போது எப்படி இவரை (முஹம்மதை) நாம் கொல்ல முடியும். இவரைச்
சுற்றி 30 தோழர்கள் உள்ளனர். அந்த தோழர்கள் இவருக்காக தங்களது உயிரையும் அர்ப்பணிக்கத்
துணிந்தவர்களாயிற்றே! எனவே, நாம் இப்போது நமது திட்டத்தை நிறைவேற்றுவது சரியன்று” என்று
யோசித்தனர். ஒரு வழியாக வேறு முடிவெடுத்து திரும்ப நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நாம்
இப்போது 60 நபர்களாக இருக்கும் போது நீங்கள் கூறுவதை எங்களால் சரியாக புரிந்து கொள்ள
முடியாது. நாங்கள் கூறுவதையும் உங்களால் சரியாக புரிந்து கொள்ள முடியாது. எனவே, மூன்று
தோழர்களை மட்டும் அழைத்துக் கொண்டு வாருங்கள். நாங்களும் மூன்று அறிஞர்களை மட்டும்
அழைத்து வருகிறோம். அந்த அறிஞர்கள் நீங்கள் கூறுபவற்றை கேட்பார்கள். அவர்கள் உங்கள்
மீது நம்பிக்கை கொண்டால் நாங்களும் உங்கள் மீது நம்பிக்கை கொள்வோம். உங்களை உண்மையாளர்
என்று ஏற்றுக் கொள்வோம்” என்றனர்.
இதற்கும் நபி (ஸல்) அவர்கள் இணங்கி மூன்று தோழர்களை மட்டும் அழைத்துக் கொண்டு சந்திக்கப்
புறப்பட்டார்கள். யூதர்கள் தங்களுடன் வீச்சரிவாளை எடுத்துக் கொண்டு நபியவர்களைத் திடீரென
பாய்ந்து கொன்றுவிட வேண்டும் என்ற முடிவில் வந்தனர். ஆனால், நழீர் கோத்திரத்தில் உள்ள
ஒரு பெண் முஸ்லிமான தன் உறவினர் ஒருவருக்கு சதித்திட்டத்தைப் பற்றி அறிவித்தார். அவர்
நபியவர்கள் அங்கு செல்வதற்கு முன் அவர்களைச் சந்தித்து செய்தியைக் கூறினார். இதைக்
கேட்டவுடன் நபியவர்கள் போகாமல் பாதி வழியிலேயே திரும்பிவிட்டார்கள்.
அதற்கடுத்த நாள் நபி (ஸல்) அவர்கள் படையுடன் யூதர்களை முற்றுகையிட்டார்கள். அப்போது
அவர்களிடம் “நீங்கள் எனக்கு ஒப்பந்தம் செய்து கொடுக்காத வரை உங்களுக்கு என்னிடம் எவ்வித
பாதுகாப்பும் நிச்சயம் இல்லை” என்று கூறினார்கள். ஆனால், நழீர் யூதர்கள் அதற்கு ஒத்துவரவில்லை.
ஆகவே, நபியவர்களும் முஸ்லிம்களும் அன்றைய தினம் அவர்களுடன் போர் புரிந்தனர். பின்பு
இரண்டாம் நாள் அவர்களுடன் போர் செய்யாமல் அவர்களை அவர்களின் நிலைமையிலேயே விட்டு அவர்களுக்கருகில்
உள்ள குரைளா யூதர்களிடம் நபி (ஸல்) படையுடன் சென்று அவர்களிடம் “நீஙகள் எனக்கு ஓர்
ஒப்பந்தத்தைச் செய்து கொடுத்தால் நான் உங்களுடன் போர் செய்ய மாட்டேன்” என்றார்கள்.
குரைளா யூதர்களும் அதற்கு இணங்கி நபியவர்களிடம் ஒப்பந்தம் செய்தனர்.
பின்பு நபி (ஸல்) மீண்டும் நழீர் இனத்தவரிடம் சென்று அவர்களுடன் சண்டையிட்டார்கள்.
அவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் இறுதியாக நபியவர்களிடம் சரணடைந்ததனர். அதாவது “மதீனாவைவிட்டு
வெளியேற வேண்டும் ஆயுதங்களைத் தவிர மற்ற பொருட்களை ஒட்டகம் சுமக்கும் அளவிற்கு எடுத்துச்
செல்லலாம்” என்ற நிபந்தனைக்கும் கட்டுப்பட்டு போரை முடித்துக் கொண்டனர். பின்பு தங்களின்
வீடுகளை நாசப்படுத்தினர். அதை இடித்துத் தள்ளி அதிலிருந்த மரப்பலகைகளையும் எடுத்துக்
கொண்டனர். இதுதான் முதன்முறையாக யூதர்களை நாடுகடத்திய சம்பவமாகும். இவர்களை மதீனாவிலிருந்து
ஷாம் தேசத்திற்கு நாடு கடத்தப்பட்டது. (முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக், ஸுனன் அபூதாவது)