பக்கம் -93-

மக்காவை நோக்கி இஸ்லாமியப் படை

ஹிஜ்ரி 8, ரமழான் மாதம் பிறை 10ல் நபி (ஸல்) 10,000 தோழர்களுடன் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். மதீனாவில் அபூ ருஹ்ம் கிஃபா (ரழி) என்ற தோழரை நபி (ஸல்) தனக்குப் பிரதிநிதியாக நியமித்தார்கள்.

நபியவர்கள் ‘ஜுஹ்ஃபா’ என்ற இடத்தில் அல்லது அதைத் தாண்டி ஓரிடத்தில் சென்று கொண்டிருந்த போது, நபியவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபு (ரழி) தனது குடும்பத்தினருடன் அவர்களைச் சந்தித்தார்கள். இவர்கள் இஸ்லாமை ஏற்று நபியவர்களைச் சந்திக்க தனது குடும்பத்தார்களுடன் மக்காவிலிருந்து ஹிஜ்ரா செய்து மதீனா நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். பிறகு நபி (ஸல்) ‘அப்வா’ என்ற இடத்தில் தங்கியிருந்த போது, நபியவர்களது பெரிய தந்தையின் மகன் அபூ ஸுஃப்யான் இப்னு ஹாரிஸ் என்பவரும், மாமி மகன் அப்துல்லாஹ் இப்னு அபூ உமையா ஆகிய இருவரும் வந்தனர்.

ஆனால், இவ்விருவரும் நபி (ஸல்) அவர்களை எப்போதும் இகழ்ந்து கொண்டிருந்ததாலும், அதிகம் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்ததாலும் அவர்களைச் சந்திக்க, அவர்களுடன் பேச நபியவர்கள் மறுத்து விட்டார்கள். நபியவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! உங்களது பெரிய தந்தையின் மகனும், மாமி மகனும் உங்களின் புறக்கணிப்பால் நற்பேறு அற்றவர்களாக ஆகிவிட வேண்டாம். அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினார். மேலும் அலீ (ரழி), “நீ நபியவர்களின் முன்பக்கமாக சென்று நபி யூஸுஃப் (அலை) அவர்களின் சகோதரர்கள் யூஸுஃபிடம் கூறியதைப் போன்று (கீழ்காணும் வசனங்களை) நீயும் கூறு, நபி (ஸல்) அவர்கள் பிறரைவிட தான் அதிக நற்பண்புள்ளவராக இருப்பதையே அதிகம் விரும்புவார்கள். (அதாவது, தனக்கு தீங்கிழைத்த தனது சகோதரர்களை நபி யூஸுஃப் (அலை) மன்னித்து விட்டார்கள் அப்படியிருக்க நபி (ஸல்) அவர்களும் நிச்சயம் மன்னிப்பார்கள்”) என்று அபூ ஸுஃப்யானிடம் கூறினார். அவ்வாறே அபூ ஸுஃப்யானும் செய்தார்.

நபி யூஸுஃப் (அலை) அவர்களின் சகோதரர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (உங்களுக்குப் பெரும்) தீங்கிழைத்தோம். ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட உங்களை மேன்மையாக்கி வைத்திருக்கிறான். (எங்களுக்கு நன்மை செய்ய அல்லாஹ் உங்களுக்குச் சந்தர்ப்பமும் அளித்திருக்கிறான்.)” (அல்குர்ஆன் 12:91)

அதற்கு நபி (ஸல்) அவர்கள்,

“இன்றைய தினம் (நான்) உங்கள் மீது எந்த குற்றமும் (சுமத்துவது) இல்லை. அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்.” (அல்குர்ஆன் 12:92)

என்ற வசனங்களைக் கூறினார்கள். அதன் பிறகு அபூ ஸுஃப்யான் இப்னு ஹாரிஸ்,

“இது சத்தியம்! லாத்துடைய வீரர்கள்
முஹம்மதின் வீரர்களை” வீழ்த்த வேண்டும் என்பதற்காக,
நான் போர்க்கொடி சுமந்த போது
இருளில் சிக்கித் தவிக்கும் திக்கற்ற பயணிபோல் இருந்தேன்
இது எனக்கு சிறந்த நேரம்
நான் நேர்வழிக்கு அழைக்கப்படுகிறேன்
அதை ஏற்று நானும் நேர்வழி பெறுகிறேன்
என் நேர்வழிக்கு நான் காரணமல்லன்.
நான் ஒவ்வொரு இடத்திலும் விரட்டியடித்தேனே
அவர்தான் எனக்கு நேர்வழி காட்டி
அல்லாஹ்வை காட்டித் தந்தார்.”

என்ற கவிதைகளைப் பாடிக்காட்டினார்.

அதற்கு நபியவர்கள், அவரது நெஞ்சில் அடித்து “நீதான் என்னை ஒவ்வொரு இடங்களிலும் துரத்திக் கொண்டிருந்தாய்” என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

மர்ருள் ளஹ்ரானில் இஸ்லாமியப் படை

ரமழான் மாதமாக இருந்ததால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் நோன்பு வைத்திருந்தார்கள். ‘உஸ்ஃபான்’ என்ற இடத்திற்கு அருகிலுள்ள ‘குதைத்’ என்ற கிணற்றுக்கருகில் இறங்கி அனைவரும் நோன்பு திறந்தனர். (முஸ்னது அஹ்மது, பைஹகி, இப்னு ஹிஷாம்)

அதற்குப் பின் தொடர்ந்து பயணித்து ‘ஃபாத்திமா பள்ளத்தாக்கு’ என்று கூறப்படும் ‘மர்ருள் ளஹ்ரான்’ என்ற இடத்தில் இறங்கினார்கள். அங்கு நெருப்பு மூட்டும்படி நபி (ஸல்) கட்டளையிட, ஒவ்வொரு நபித்தோழரும் நெருப்பு மூட்டினார். மொத்தம் பத்தாயிரம் நெருப்புக் குண்டங்கள் அங்கு மூட்டப்பட்டன. இரவில் படையின் பாதுகாப்புக்கு உமர் இப்னு கத்தாபை நபி (ஸல்) தலைமை தாங்க வைத்தார்கள்.

நபியவர்களுக்கு முன் அபூஸுஃப்யான்

முஸ்லிம்கள் மர்ருள் ளஹ்ரானில் தங்கியதற்குப் பின் நபியவர்களின் வெள்ளைக் கோவேறு கழுதையில் அப்பாஸ் (ரழி) ஏறி, அங்கிருந்து புறப்பட்டார். விறகு சேகரிக்க வருபவர்கள் அல்லது வேறு யாராவது கிடைப்பார்களா என்று தேடினார். நபி (ஸல்) மக்கா வரும் செய்தியைக் குறைஷிகளுக்கு சொல்லி அனுப்பினால் நபி (ஸல்) மக்காவுக்குள் நுழைவதற்கு முன்பதாக நபியவர்களிடம் வந்து தங்களுக்குரிய பாதுகாப்பை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள் என்பதே அப்பாஸின் நோக்கமாக இருந்தது..

அல்லாஹ் எந்த வகையிலும் குறைஷிகளுக்கு நபியவர்களின் நடவடிக்கை தெரியாமல் மறைத்து விட்டான். அவர்கள் பயத்துடனும், எந்நேரத்திலும் தாங்கள் தாக்கப்படுவோம் என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். மக்காவில் அபூ ஸுஃப்யான் வருவோர் போவோரிடமெல்லாம் நபியவர்களின் செய்தியைப் பற்றி துருவித் துருவி விசாரித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் இரவில் அபூ ஸுஃப்யானும், ஹக்கீம் இப்னு ஸாமும், புதைல் இப்னு வரக்காவும் நிலவரங்களை அறிந்து கொள்வதற்காக விசாரித்துக் கொண்டே மக்காவை விட்டு வெளியேறினார்கள். அன்றிரவுதான் நபியவர்கள் மர்ருள் ளஹ்ரானில் படையுடன் தங்கியிருந்தார்கள்.

அந்த நிகழ்ச்சியைப் பற்றி அப்பாஸ் (ரழி) கூறுவதைக் கேட்போம்:

“நான் நபியவர்களது கோவேறு கழுதையின் மீது இரவின் இருளில் சென்று கொண்டிருந்தேன். அபூஸுஃப்யான் மற்றும் புதைல் ஆகிய இருவரும் பேசிக் கொண்டது காதில் கேட்டது. “இன்றைய இரவில் எரியும் நெருப்பைப் போன்றும், இங்குக் கூடியிருக்கும் படையைப் போன்றும் நான் வேறு எப்போதும் பார்த்ததில்லை” என்று அபூஸுஃயான் புதைலிடம் கூறினார். அதற்கு புதைல் “இங்கு வந்திருப்பது குஜாஆவின் படையாக இருக்கலாம். போர்தான் இவர்களைத் தீயாக ஆக்கிவிட்டது. நம்மீது போர்தொடுக்க கிளம்பிய இவர்கள் இவ்வாறு நெருப்பு மூட்டியிருக்கின்றனர்” என்றார். “இல்லை குஜாஆவின் எண்ணிக்கை மிகக் குறைவு அவர்கள் வீரமில்லாதவர்கள் இது அவர்களின் நெருப்பாகவோ படையாகவோ இருக்க முடியாது” என்று அபூஸுஃப்யான் கூறினார்.

நான் அபூஸுஃப்யானின் குரலைப் புரிந்து கொண்டு “ஹன்ளலாவின் தந்தையே!” என்று அழைத்தேன். (இது அவரது புனைப் பெயராகும்) அவரும் எனது குரலைப் புரிந்துகொண்டு “ஃபழ்லின் தந்தையே!” (இது அப்பாஸின் புனைப் பெயராகும்) என்று அழைத்தார். நான் ‘ஆம்! நான்தான்’ என்று கூறினேன். அதற்கவர் (என்ன! இந்நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர் எனும் பொருளில்) “உங்களுக்கு என்னவாயிற்று. எனது தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும்” என்று கூறினார். “இதோ அல்லாஹ்வின் தூதர் மக்களுடன் வந்திருக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! குறைஷிகள் அழிந்தே விட்டனர்” என்று நான் கூறினேன்.

“தப்பிப்பதற்கு வழி என்ன? எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று அபூ ஸுஃப்யான் கேட்டார். அதற்கு நான் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபியவர்களிடம் நீ சிக்கினால் உன்னை அவர்கள் கொலை செய்து விடுவார்கள். இந்தக் கோவேறு கழுதையில் என் பின்னே ஏறிக்கொள். நான் உன்னை நபியவர்களிடம் அழைத்துச் சென்று உனக்காக நபி (ஸல்) அவர்களிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினேன். அவரும் எனக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டார். மற்ற அவரது இரு நண்பர்களும் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டனர்.

நான் அவரை அழைத்து வந்து கொண்டிருந்த போது அங்கிருந்த ஒவ்வொரு நெருப்புக்கு அருகிலும் செல்லும்போதெல்லாம் “இவன் யார்?” என விசாரித்துக் கொண்டே வந்தனர். முஸ்லிம்களும் நபியின் கோவேறு கழுதையின் மீது நான் வாகனிப்பதைப் பார்த்து, “இதோ... இவர்தான் நபியுடைய தந்தையின் சகோதரர் ஆவார். இது நபியின் கோவேறு கழுதையாகும்” என்று பேசிக் கொண்டார்கள். இவ்வாறே நான் உமர் இப்னு கத்தாப் (ரழி) மூட்டியிருந்த நெருப்புக்கருகில் சென்றபோது “அவர் இது யாரென்று கேட்டுக் கொண்டே என்னை நோக்கி எழுந்து வந்தார்.” வாகனத்தின் பின்னால் அபூஸுஃப்யானைப் பார்த்தவுடன் “இவர்தான் அல்லாஹ்வின் எதிரி அபூ ஸுஃப்யான். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! எவ்வித ஒப்பந்தமும் நமக்கு மத்தியில் இல்லாமல் இருக்கும் இவ்வேளையில் அல்லாஹ் உன்னை என்னிடம் சிக்க வைத்து விட்டான்” என்று கூறிக்கொண்டே கொல்வதற்கு அனுமதி வேண்டி நபியிடம் விரைந்தார்.

நான் சுதாரித்துக் கொண்டு கழுதையை உதைத்து வேகமாக ஓட்டிக் கொண்டு நபியிடம் சென்றடைந்தேன். கழுதையிலிருந்து இறங்கி நபியின் கூடாரத்திற்குள் செல்லும் போதே உமரும் கூடாரத்திற்குள் நுழைந்து விட்டார். அவர் “அல்லாஹ்வின் தூதரே! இதோ அபூ ஸுஃப்யான்! எனக்கு அனுமதி தாருங்கள். நான் அவனைக் கொன்று விடுகிறேன்” என்று கூறினார். “அல்லாஹ்வின் தூதரே! நான் இவருக்கு அடைக்கலம் கொடுத்து விட்டேன்” என்று கூறி நபிக்கருகில் அமர்ந்து கொண்டு அவர்களது தலையை எனது நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன். மேலும் “இன்றிரவு என்னைத் தவிர வேறு யாரும் நபியிடம் பேச அனுமதிக்க மாட்டேன்” என்று கூறினேன். ஆனால் உமர் (ரழி) அபூ ஸுஃப்யான் விஷயத்தில் மிகப் பிடிவாதமாக இருந்தார்கள்.

நான் “உமரே! சற்று பொறுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உமது ‘அதீ’ கிளையைச் சேர்ந்தவராக இவர் இருந்திருந்தால் நீ இவ்வாறு கூறமாட்டாய்” என்று கூறினேன். அதற்கவர் “அப்பாஸே! நீங்கள் சற்றுப் பொறுங்கள். எனது தந்தை இஸ்லாமை ஏற்றுக் கொள்வதை விட நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதுதான் எனக்கு மிக விருப்பமானதாகும். அதாவது என் தந்தை முஸ்லிமாகுவதை விட நீங்கள் முஸ்லிமாகுவதுதான் எனக்கு அதிக விருப்பமானதாகும், ஏனெனில், என் தந்தை முஸ்லிமானால் நபிக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விட நீங்கள் முஸ்லிமானால் நபிக்கு அதிகம் மகிழ்ச்சி ஏற்படும்” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் “அப்பாஸே! நீர் இவரை அழைத்துச் சென்று உமது கூடாரத்தில் தங்க வைத்து காலையில் அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள். காலையில் நான் அவரை அழைத்துக் கொண்டு நபியிடம் சென்றேன். அவரைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் “அபூ ஸுஃப்யானே! உனக்கு என்ன கேடு நேர்ந்தது. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று நீ இன்னமும் தெரிந்து கொள்ளவில்லையா?” எனக் கேட்டார்கள். “எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் எவ்வளவு பெரிய பொறுமைசாலி; நீங்கள் மிக கண்ணியமிக்கவர்கள் உறவுகளை அதிகம் பேணுகிறீர்கள் அல்லாஹ்வுடன் வேறொரு இறைவன் இருந்திருந்தால் அவர் இன்று எனக்கு ஏதாவது நிச்சயம் பயனளித்திருப்பார்” என அபூஸுஃப்யான் கூறினார்.

அதற்கு நபியவர்கள் “அபூ ஸுஃப்யானே! உமக்கு என்ன கேடு நேர்ந்தது. நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீ தெரிந்து கொள்வதற்கு இன்னுமா உனக்கு நேரம் வரவில்லை?” என்றார்கள். “எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் எவ்வளவு பெரிய பொறுமைசாலி. நீங்கள் மிக கண்ணியமிக்கவர்கள் உறவுகளை அதிகம் பேணுகிறீர்கள், ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு சற்று சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது” என்று அபூ ஸுஃபயான் கூறினார். இதைக் கேட்ட அப்பாஸ் (ரழி) “உனக்கென்ன கேடு! நீ கொல்லப்படுவதற்கு முன் இஸ்லாமை ஏற்றுக்கொள். லாயிலாஹஇல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் என்று சாட்சி சொல்லிவிடு!” என்று கூறினார். அவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு ஏகத்துவ சாட்சியும் மொழிந்தார்.

மக்கா நோக்கி இஸ்லாமியப் படை

அன்றைய காலைப் பொழுதில், அதாவது ஹிஜ்ரி 8, ரமழான் மாதம் பிறை 17 செவ்வாய்க் கிழமை காலையில் நபி (ஸல்) மர்ருள் ளஹ்ரானிலிருந்து மக்கா நோக்கிப் புறப்படலானார்கள். வழி குறுகலாக உள்ள ‘கத்முல் ஜபல்’ என்ற இடத்தில் அபூஸுஃப்யானை நிறுத்தி வை. அல்லாஹ்வின் படை அவரைக் கடந்து செல்வதைப் பார்க்கட்டும் என்று நபி (ஸல்) அப்பாஸுக்கு ஆணை பிறப்பித்தார்கள். அப்பாஸும் அவ்வாறே செய்தார். தங்களிடமுள்ள கொடிகளுடன் ஒவ்வொரு கோத்திரத்தாரும் அபூஸுஃப்யானைக் கடந்து சென்றபோதெல்லாம் இவர்கள் யாரென்று அப்பாஸிடம் விசாரிப்பார். அப்பாஸ் (ரழி) (உதாரணமாக) “சுலைம்” என்று கூறுவார். அதற்கு அபூஸுஃப்யான் “எனக்கும் சுலைம் கோத்திரத்தாருக்கும் என்ன உறவு இருக்கிறது?” என்று கூறுவார். இவ்வாறே ஒவ்வொரு கோத்திரத்தாரையும் அபூஸுஃப்யான் விசாரிக்க அதற்கு அப்பாஸ் (ரழி) பதில் கூறிக்கொண்டிருந்தார்கள்.

இறுதியாக நபியவர்கள் தனது அடர்ந்த படையில் முஹாஜிர் அன்சாரிகளுடன் சென்றார்கள். நபி (ஸல்) மத்திம்லிருக்க தோழர்கள் நபியைச் சுற்றி ஆயுதமேந்தியிருந்தார்கள். அக்கூட்டத்தில் ஆயுதங்களைத் தவிர வேறொன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை. இக்காட்சியைப் பார்த்த அபூஸுஃப்யான் ஆச்சரியமடைந்து “ஸுப்ஹானல்லாஹ்! அப்பாஸே! இவர்கள் யார்?” என்று கேட்டார். “இக்குழுவில் அல்லாஹ்வின் தூதர் தனது முஹாஜிர் மற்றும் அன்சாரி தோழர்களுடன் செல்கிறார்கள்” என்று அப்பாஸ் (ரழி) பதிலளித்தார். இதைக் கேட்ட அபூஸுஃப்யான் “நிச்சயமாக இவர்களை யாராலும் எதிர்க்க முடியாது. ஓ அபுல் ஃபழ்லே! உமது சகோதரர் உடைய மகனின் ஆட்சி இன்று கொடி கட்டிப் பறக்கிறதே!” என்று கூறினார். அதற்கு அப்பாஸ் (ரழி) “அபூ ஸுஃப்யானே! இதுதான் நபித்துவமாகும் (சாதாரண அரசாங்கமல்ல)” என்று கூறினார். “ஆம்! சதான்” என்று அபூஸுஃப்யான் (ரழி) கூறினார்.

ஸஅது இப்னு உபாதா (ரழி) அன்சாரிகளின் கொடியை ஏந்தியிருந்தார். அவர் அபூ ஸுஃப்யானுக்கு அருகில் வந்தபோது “இன்றைய தினம் கடுமையான போராட்ட நாளாகும் இன்றைய தினம் மானமரியாதை எடுக்கப்படும் இன்றைய தினம் அல்லாஹ் குறைஷிகளைக் கேவலப்படுத்தி விட்டான்” என்று கூறினார். இந்த வார்த்தை அபூஸுஃப்யானுக்குப் பெரும் பயத்தை ஏற்படுத்தியது. அபூஸுஃப்யானுக்கு அருகில் நபி (ஸல்) வந்தபோது “அல்லாஹ்வின் தூதரே! ஸஅது என்ன கூறினார் என்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட வில்லையா?” என்று கேட்டார். “அவர் என்ன கூறினார்?” என்று நபி (ஸல்) கேட்க, “இன்னின்னதை அவர் பேசினார்” என அபூ ஸுஃப்யான் (ரழி) விளக்கினார்.

நபியுடன் இருந்த உஸ்மான் மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) ஆகிய இருவரும் “அல்லாஹ்வின் தூதரே! மேலும், அவர் குறைஷிகளைக் கொன்று குவித்து விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம்” என்றனர். அதற்கு நபி (ஸல்) அவ்வாறு நடக்காது. இன்றைய தினம் கஅபாவை மகிமைப்படுத்தும் தினமாகும். இன்றைய தினம் அல்லாஹ் குறைஷிகளுக்குக் கண்ணியமளித்த தினமாகும்” என்று கூறிவிட்டு ஒருவரை ஸஅதிடம் அனுப்பி அவரிடமுள்ள கொடியை வாங்கி அவரது மகன் கைசிடம் கொடுத்து விட்டார்கள். அதாவது, கொடி ஸஅதிடம்தான் இருக்கிறது என்று பொருளாகும். ஆனால் சிலர், அந்தக் கொடியை ஜுபைடம் நபி (ஸல்) கொடுத்தார்கள் என்கின்றனர்.