இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூ சுஃப்யான் (ரலி) அவர்கள் என்னிடம் நேரில் தெரிவித்ததாவது:
"எனக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையே (ஹுதைபிய்யா உடன்படிக்கையின்) காலக்கெடு இருந்த நேரத்தில் நான் (வியாபாரத்திற்காக) புறப்பட்டேன். நான் ஷாம் (சிரியா) தேசத்தில் இருந்தபோது, நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு கடிதம் ஹிரக்ள் (ரோமப் பேரரசர்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அக்கடிதத்தை (நபித்தோழர்) திஹ்யா அல்கல்பீ (ரலி) கொண்டு வந்து, 'புஸ்ரா'வின் ஆளுநரிடம் கொடுத்தார். அவர் அதை ஹிரக்ளிடம் சேர்ப்பித்தார்.
(கடிதத்தைப் பெற்ற) ஹிரக்ள், 'தன்னை நபி என்று வாதிடும் இந்த மனிதருடைய சமூகத்தைச் சார்ந்த யாரேனும் இங்கே இருக்கிறார்களா?' என்று கேட்டார். அதற்கு (அவைக்களத்தில் இருந்தவர்கள்) 'ஆம்' என்றனர். உடனே குறைஷிப் பிரமுகர்கள் சிலருடன் நானும் அழைக்கப்பட்டேன். நாங்கள் ஹிரக்ளிடம் சென்றோம். எங்களை அவருக்கு முன்னால் அமரவைத்தனர்.
அவர், 'தன்னை நபி என்று வாதிடும் அந்த மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?' என்று கேட்டார். அதற்கு அபூ சுஃப்யான் ஆகிய நான், 'நான்தான்' என்றேன். அவர்கள் என்னை அவருக்கு மிக அருகில் அமர வைத்தார்கள். என் தோழர்களை எனக்குப் பின்னால் அமர வைத்தார்கள். பிறகு அவர் தன் மொழிபெயர்ப்பாளரை அழைத்து, 'நான் இவரிடம் அந்த மனிதரைப் பற்றிக் கேட்கப் போகிறேன். இவர் என்னிடம் பொய் சொன்னால், (அவருக்குப் பின்னால் இருக்கும்) நீங்கள் இவர் சொல்வது பொய் என்று சுட்டிக்காட்ட வேண்டும் என இவர்களிடம் கூறு' என்றார்.
(அபூ சுஃப்யான் கூறுகிறார்:) அல்லாஹ்வின் மீது ஆணையாக! என் தோழர்கள் என் மீது பொய்யன் என்று பழி சுமத்துவார்கள் என்ற அச்சம் மட்டும் எனக்கில்லை என்றால், நான் (நபி (ஸல்) அவர்களைப் பற்றிப்) பொய் சொல்லியிருப்பேன்.
பிறகு ஹிரக்ள் தன் மொழிபெயர்ப்பாளரிடம், 'உங்களில் அவருடைய குலப் பெருமை எத்தகையது என்று இவரிடம் கேள்' என்றார். நான், 'எங்களில் அவர் மிகச் சிறந்த குலப் பெருமை உடையவர்' என்றேன்.
'அவருடைய முன்னோர்களில் யாரேனும் அரசராக இருந்திருக்கின்றனரா?' என்று கேட்டார். நான் 'இல்லை' என்றேன்.
'அவர் இந்த (நபித்துவம் எனும்) வாதத்தை முன்வைப்பதற்கு முன்பு, அவர் பொய் சொல்வார் என்று எப்போதாவது நீங்கள் அவர் மீது குற்றம் சாட்டியதுண்டா?' என்று கேட்டார். நான் 'இல்லை' என்றேன்.
'மக்களில் மேட்டுக்குடியினர் அவரைப் பின்பற்றுகின்றனரா? அல்லது சாமானிய மக்களா?' என்று கேட்டார். நான், 'சாமானிய மக்களே (பின்பற்றுகின்றனர்)' என்றேன்.
'அவர்கள் அதிகரிக்கின்றனரா? அல்லது குறைகின்றனரா?' என்று கேட்டார். நான், 'இல்லை; அவர்கள் அதிகரிக்கவே செய்கின்றனர்' என்றேன்.
'அவருடைய மார்க்கத்தில் இணைந்த பிறகு, அதன் மீதள்ள வெறுப்பினால் யாரேனும் மதம் மாறியதுண்டா?' என்று கேட்டார். நான் 'இல்லை' என்றேன்.
'அவருடன் நீங்கள் போரிட்டதுண்டா?' என்று கேட்டார். நான் 'ஆம்' என்றேன்.
'அவருடன் உங்கள் போர் எத்தகையதாக இருந்தது?' என்று கேட்டார். 'எங்களுக்கிடையேயான போர் (கிணற்றிலிருந்து நீர் இறைக்கும் வாளியைப் போன்று) மாறி மாறி வெற்றியைத் தரக்கூடியதாக இருந்தது. அவர் எங்களை வெல்வார்; நாங்கள் அவரை வெல்வோம்' என்று கூறினேன்.
'அவர் மோசடி செய்வாரா?' என்று கேட்டார். நான், 'இல்லை. ஆனால், நாங்கள் இப்போது அவருடன் ஒரு (சமாதான) காலக்கெடுவில் இருக்கிறோம். அதில் அவர் என்ன செய்வார் என்று எங்களுக்குத் தெரியாது' என்றேன். (அபூ சுஃப்யான் கூறுகிறார்: அவர் மீது குறை சொல்வதற்கு, இந்த வாக்கியத்தைத் தவிர வேறு எந்த வாய்ப்பும் எனக்குக் கிடைக்கவில்லை).
'இவருக்கு முன்பு யாரேனும் (உங்களில்) இப்படி (நபி என்று) வாதிட்டதுண்டா?' என்று கேட்டார். நான் 'இல்லை' என்றேன்.
பிறகு ஹிரக்ள் தன் மொழிபெயர்ப்பாளரிடம் (என்னுடைய பதில்களுக்கான விளக்கத்தை) என்னிடம் கூறுமாறு பணித்தார்:
'உங்களில் அவருடைய குலத்தைப் பற்றி நான் உன்னிடம் கேட்டேன். அவர் உங்களில் நற்குலத்தைச் சார்ந்தவர் என்று கூறினாய். அவ்வாறே இறைத்தூதர்கள் தங்கள் சமூகத்தின் நற்குலத்தில்தான் அனுப்பப்படுவார்கள்.
அவருடைய முன்னோர்களில் யாரேனும் அரசர் இருந்தனரா என்று கேட்டேன். இல்லை என்று கூறினாய். அவருடைய முன்னோர்களில் யாரேனும் அரசர் இருந்திருந்தால், தன் தந்தையின் ஆட்சியை இவர் அடைய விரும்புகிறார் என்று நான் நினைத்திருப்பேன்.
சாமானியர்கள் அவரைப் பின்பற்றுகின்றனரா அல்லது மேட்டுக்குடியினரா என்று கேட்டேன். சாமானியர்கள்தாம் அவரைப் பின்பற்றுகிறார்கள் என்று கூறினாய். இறைத்தூதர்களைப் பின்பற்றுபவர்களும் அவர்களே ஆவர்.
இதற்கு முன் அவர் மீது நீங்கள் பொய்யர் என்று குற்றம் சுமத்தியதுண்டா என்று கேட்டேன். இல்லை என்று கூறினாய். மக்களிடமே பொய் சொல்லாதவர், அல்லாஹ்வின் மீது எப்படிப் பொய் சொல்வார் என்பதை நான் அறிந்துகொண்டேன்.
அவருடைய மார்க்கத்தில் இணைந்தபின், யாரேனும் வெறுப்புற்று மதம் மாறியதுண்டா என்று கேட்டேன். இல்லை என்று கூறினாய். ஈமான் (இறைநம்பிக்கை) இதயத்தின் ஆழத்தில் கலந்துவிட்டால் இதுதான் நிலை.
அவர்கள் அதிகரிக்கின்றனரா அல்லது குறைகின்றனரா என்று கேட்டேன். அவர்கள் அதிகரிக்கவே செய்கின்றனர் என்று கூறினாய். இறைநம்பிக்கை முழுமை பெறும்வரை அதன் நிலை இதுவேதான்.
அவருடன் போர் புரிந்தது பற்றி உன்னிடம் கேட்டேன். நீங்களும் அவரும் போரிட்டதாகவும், போர் வெற்றி தோல்வி மாறி மாறி வருவதாகவும், அவர் உங்களை மிகைப்பார், நீங்கள் அவரை மிகைப்பீர்கள் என்றும் கூறினாய். இறைத்தூதர்கள் அவ்வாறே சோதிக்கப்படுவார்கள்; இறுதியில் (வெற்றி) முடிவு அவர்களுக்கே சாதகமாக அமையும்.
அவர் மோசடி செய்வாரா என்று கேட்டேன். அவர் மோசடி செய்யமாட்டார் என்று கூறினாய். அவ்வாறே இறைத்தூதர்கள் மோசடி செய்யமாட்டார்கள்.
இவருக்கு முன் யாரேனும் இப்படி வாதிட்டதுண்டா என்று கேட்டேன். இல்லை என்று கூறினாய். இவருக்கு முன் யாரேனும் இப்படிச் சொல்லியிருந்தால், தனக்கு முன் சொல்லப்பட்ட ஒரு சொல்லையே இவரும் பின்பற்றுகிறார் என்று நான் கூறியிருப்பேன்.'
பிறகு ஹிரக்ள், 'அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்?' என்று கேட்டார். நான், 'தொழுகை, ஜகாத், உறவுகளைப் பேணுதல், கற்பொழுக்கம் ஆகியவற்றைப் பேணும்படி அவர் எங்களை ஏவுகிறார்' என்றேன்.
அதற்கு அவர், 'நீ சொல்வது உண்மையானால், நிச்சயமாக அவர் ஒரு இறைத்தூதர்தாம். (இறுதித்) தூதர் ஒருவர் தோன்றுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அவர் உங்களிலிருந்து வருவார் என்று நான் நினைக்கவில்லை. அவரைச் சென்றடைய முடியும் என்று நான் உறுதியாக அறிந்திருந்தால், அவரைச் சந்திக்க விரும்பி இருப்பேன். நான் அவர் அருகில் இருந்தால், அவரது பாதங்களைக் கழுவிவிட்டிருப்பேன். நிச்சயமாக அவரது அதிகாரம் என் பாதங்களுக்குக் கீழுள்ள இந்த இடத்தையே வந்தடையும்' என்றார்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டுவரச் சொல்லிப் படித்தார். அதில் இருந்ததாவது:
"அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ரோமப் பேரரசர் ஹிரக்ளுக்கு (எழுதப்படுவது). நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி உண்டாகட்டும்!
இதற்குப் பின்,
நான் உம்மை இஸ்லாத்தின் பக்கம் அழைக்கிறேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்! ஈடேற்றம் (பாதுகாப்பு) பெறுவாய். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்! அல்லாஹ் உனக்குரிய நற்கூலியை இரண்டு முறை வழங்குவான். நீ (இதை) புறக்கணித்தால், (உன் நாட்டு) குடிமக்களின் பாவமும் உன்னைச் சாரும்.
'வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் பொதுவான ஒரு வார்த்தையின் பக்கம் வாருங்கள். (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; அல்லாஹ்வை விடுத்து நம்மில் சிலர் சிலரைக்கடவுள்களாக ஆக்கிக்கொள்ளக் கூடாது. (இதனை) அவர்கள் புறக்கணித்தால், நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள் என்று (முஸ்லிம்களே!) நீங்கள் கூறிவிடுங்கள்.'" (திருக்குர்ஆன் 3:64).
ஹிரக்ள் அக்கடிதத்தைப் படித்து முடித்ததும், அவருக்கு அருகில் கூச்சல்கள் அதிகமாயின; சப்தங்கள் உயர்ந்தன. நாங்கள் வெளியேற்றப்பட்டோம்.
நாங்கள் வெளியேறியதும் நான் என் தோழர்களிடம், "இப்னு அபீ கப்ஷாவின் (நபி (ஸல்) அவர்களின்) விவகாரம் பெரிதாகிவிட்டது. பனூ அஸ்ஃபர் (ரோமானியர்களின்) மன்னர் கூட அவருக்கு அஞ்சுகிறார்" என்று கூறினேன். அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை நுழைக்கும் வரை, நபி (ஸல்) அவர்கள் வெற்றியடைவார்கள் என்ற உறுதியுடன் நான் இருந்து வந்தேன்."
(அறிவிப்பாளர்) அஸ்-ஸுஹ்ரி (ரஹ்) கூறுகிறார்:
பின்னர் ஹிரக்ள் ரோமப் பிரமுகர்களைத் தம்முடைய ஒரு மாளிகையில் ஒன்று திரட்டினார். பிறகு, "ரோமர்களே! உங்களுக்கு வெற்றியும், நேர்வழியும், உங்கள் ஆட்சி நிலைத்திருப்பதும் வேண்டுமா?" என்று கேட்டார். (இதைக்கேட்டவுடன்) அவர்கள் காட்டுக் கழுதைகள் மிரண்டு ஓடுவதைப் போன்று வாசல்களை நோக்கி ஓடினர். ஆனால் வாசல்கள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர்.
(அவர்களின் வெறுப்பைக் கண்ட) ஹிரக்ள், "அவர்களை என்னிடம் திரும்ப அழைத்து வாருங்கள்" என்றார். அவர்களை அழைத்ததும், "நான் உங்கள் மதத்தின் மீது உங்களுக்குள்ள பிடிப்பைச் சோதிப்பதற்காகவே சற்றுமுன் அவ்வாறு கூறினேன். (உங்கள் உறுதியை) நான் இப்போது பார்த்துவிட்டேன்" என்றார். உடனே அவர்கள் அவருக்குச் சிரவணக்கம் செய்து, அவரைப் பற்றித் திருப்தியடைந்தனர்.