முஹம்மது நபி (ஸல்) வரலாறு - பக்கம் : 129

அபூலஹபின் மகன் உத்பாவிற்கு எதிராக நபி (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தனக்கு எதிராக செய்த பிரார்த்தனையின் பலனை சந்தித்தே ஆக வேண்டும் என்று அவன் உறுதியாக நம்பியிருந்தான். அவன் பயணத்தில் ஓரிடத்தில் தங்கியிருந்தபோது சிங்கத்தைப் பார்த்துவிட்டு, “மக்காவில் இருந்து கொண்டே முஹம்மது என்னைக் கொலை செய்துவிட்டார்” என்று கத்தினான்.

உபை இப்னு கலஃப், நபி (ஸல்) அவர்களை கொன்று விடுவேன் என்று மிரட்டி வந்தான். நபி (ஸல்) “இன்ஷா அல்லாஹ்! நான்தான் உன்னைக் கொல்வேன்” என்று கூறினார்கள். உஹுத் போரில் நபி (ஸல்) அவர்கள் அவன்மீது ஈட்டியை எய்து சிறிய காயத்தை ஏற்படுத்தியபோது, “இந்த முஹம்மது மக்காவில் இருக்கும்போதே என்னைக் கொல்வேன் என்று சொல்லியிருந்தார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்மீது துப்பியிருந்தாலும் அவர் என்னை கொன்றிருப்பார்” என்றான் உபை. (இதன் விவரம் பின்னால் வருகிறது). (இப்னு ஹிஷாம்)

மக்காவில் இருக்கும்போது ஸஅத் இப்னு முஆத் (ரழி) அவர்கள் உமய்யாவைப் பார்த்து “முஸ்லிம்கள் உன்னை நிச்சயம் கொலை செய்து விடுவார்கள் என்று நபி (ஸல்) கூற நான் கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள். இதைத் கேட்ட உமய்யாவுக்கு மரண பயம் ஏற்பட்டு மக்காவை விட்டு வெளியேறவே மாட்டேன் என்று தனக்குத் தானே உறுதி செய்து கொண்டான். பத்ர் போர் அன்று அபூஜஹ்ல் தன்னுடன் வந்தே ஆக வேண்டும் என்று அவனை நிர்ப்பந்தித்த போது போரிலிருந்து தப்பிப்பதற்கு வசதியாக மக்காவில் உள்ள ஒட்டகங்களில் மிகச் சிறந்ததை வாங்கி தன்னுடன் வைத்துக் கொண்டான். அவனுடைய மனைவி “ஏ! அபூஸஃப்வான். மதீனாவில் உள்ள சகோதரர் உனக்கு கூறியதை நீ மறந்துவிட்டாயா?” என்று கேட்டாள். அவன் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அவர்களுடன் சிறிது தூரம்தான் செல்ல நாடுகிறேன்” என்று கூறினான். (ஸஹீஹுல் புகாரி)

இவ்வாறே நபி (ஸல்) அவர்களது எதிரிகளின் நிலை இருந்தது. நபி (ஸல்) அவர்களது தோழர்களின் நிலை எவ்வாறு இருந்ததெனில், நபி (ஸல்) அவர்களைத் தங்களது உயிரினும் மேலாக அவர்கள் மதித்தார்கள். பள்ளத்தை நோக்கி தண்ணீர் விரைந்து வருவதுபோல நபி (ஸல்) அவர்களை நோக்கி அவர்களது உள்ளத்தில் உண்மையான பிரியம் விரைந்து வந்தது காந்தத்தை நோக்கி இரும்பு ஈர்க்கப்படுவதுபோல உள்ளங்கள் ஈர்க்கப்பட்டன.

நபி (ஸல்) அவர்கள் மீது தோழர்கள் உள்ளத்தில் இருந்த அர்ப்பணிக்கும் ஆசை அளவிட முடியாதது நபியவர்கள் மீது அவர்கள் வைத்திருந்த அன்பும் பிரியமும் அப்படித்தான். எனவே, அவர்களுக்காகத் தங்களது கழுத்து துண்டிக்கப்படுவதையும் அவர்கள் பொருட்படுத்தியதில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்களின் நகத்திற்கு ஒரு சேதம் ஏற்படுவதையோ, அவர்களுக்கு ஒரு முள் தைப்பதைக் கூட அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.

ஒருமுறை அபூபக்ர் (ரழி) கல் நெஞ்சக்காரர்களால் கடுமையாக மிதிக்கப்பட்டார்கள்; வன்மையாக அடிக்கப்பட்டார்கள். அந்நேரத்தில் அங்கு வந்த உத்பா, ஆபூபக்ரை செருப்பால் அடித்தது மட்டுமல்ல, அவர்களது முகத்தை செருப்பால் தேய்க்கவும் செய்தான். அவர்களது வயிற்றின் மீது ஏறி மிதித்தான். அவர்களது மூக்கு சிதைக்கப்பட்டதால் மூக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு ஆகிவிட்டது. “தைம்’ கிளையினர் அன்னாரை ஒரு துணியில் சுமந்து சென்று அவர்களது வீட்டில் வைத்தார்கள். அனைவரும் அவர் இறந்துவிட்டார் என்றே எண்ணி இருந்தார்கள்.