முஹம்மது நபி (ஸல்) வரலாறு - பக்கம் : 417

நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவுடைய கன்னத்தில் அடியின் வடுவைப் பார்த்து “இது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்கள் ஊர் வருவதற்கு முன் முழுநிலா தனது இடத்திலிருந்து விலகி எனது மடியில் விழுவதாகக் கனவு கண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களைப் பற்றிய எவ்விஷயத்தையும் நான் நினைக்கவில்லை. இக்கனவை எனது கணவனிடம் கூறியபோது எனது கன்னத்தில் வேகமாக அறைந்து, மதீனாவில் இருக்கும் அரசரையா நீ ஆசைப்படுகிறாய்? என்றார். அதன் காரணமாக ஏற்பட்ட வடுதான் இது” என்று கூறினார். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

நஞ்சு கலந்த உணவு

கைபரை முழுமையாக வெற்றி கொண்டு நபி (ஸல்) அவர்கள் முழு நிம்மதி அடைந்தார்கள். அப்போது ஸல்லாம் இப்னு மிஷ்கம் என்பவனின் மனைவி ‘ஜைனப் பின்த் ஹாரிஸ்’ என்பவள், நபி (ஸல்) அவர்களுக்கு விருந்து ஒன்று ஏற்பாடு செய்தாள். விருந்தில் ஓர் ஆட்டை விஷத்துடன் சமைத்தாள். குறிப்பாக, நபி (ஸல்) அவர்கள் விரும்பி உண்ணும் பகுதி முன் சப்பை என்பதை தெரிந்து அதிலே அதிக விஷத்தை ஏற்றினாள்.

நபியவர்கள் அதிலிருந்து ஒரு துண்டை எடுத்துக் கடித்தார்கள். ஆனால் அதை விழுங்காமல் துப்பிவிட்டார்கள். “இந்த எலும்பு தன்னில் விஷமேற்றப்பட்டுள்ளது என்று என்னிடம் கூறுகிறது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்பு அப்பெண்ணை அழைத்து விசாரிக்கவே அவள் உண்மையை ஒப்புக் கொண்டாள். “இவ்வாறு செய்ததற்கான காரணம் என்ன?” என்று நபி (ஸல்) விசாரித்தார்கள். அதற்கு அவள், “நீங்கள் அரசராக இருந்தால் உங்களைக் கொல்வதில் எங்களுக்கு நிம்மதி கிடைக்கலாம். நீங்கள் தூதராக இருந்தால் உண்மை உங்களுக்கு தெரிந்து விடும். அதனால்தான் அவ்வாறு செய்தேன்” என்று கூறினாள். நபியவர்கள் அவளை மன்னித்து விட்டு விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுடன் பிஷ்ர் இப்னு பரா (ரழி) என்ற தோழரும் சாப்பிட்டார். அவர் அந்த ஆட்டிலிருந்து ஒரு துண்டை முழுமையாகச் சாப்பிட்டதால் அந்த விஷம் அவரது உடலில் கலந்து மரணித்து விட்டார்.

அப்பெண் முற்றிலும் மன்னிக்கப்பட்டாளா? அல்லது கொல்லப்பட்டாளா? என்பதைப் பற்றி பல மாறுபட்ட அறிவிப்புகள் வந்துள்ளன.

இதைப் பற்றி அறிஞர்கள் கூறுவதாவது: நபியவர்கள் ஆரம்பத்தில் அப்பெண்ணை மன்னித்து விட்டார்கள். அடுத்து, அவள் தந்த விஷத்தால் பிஷ்ர் (ரழி) இறந்துவிடவே அவளைக் கொல்லும்படி கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

கைபர் போரில் இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

இப்போரில் முஸ்லிம்களில் பதினாறு நபர்கள் கொல்லப்பட்டார்கள். அதில் நான்கு நபர்கள் குறைஷிகள். ஒருவர் அஷ்ஜாஃ கிளையைச் சேர்ந்தவர் மற்றும் ஒருவர் அஸ்லம் கிளையைச் சேர்ந்தவர், மற்றொருவர் கைபரைச் சேர்ந்தவர். மீதமுள்ள 9 பேர்கள் அன்சாரிகளாவர். சிலர் முஸ்லிம்களில் கொல்லப்பட்டவர்கள் பதினேழு பேர்கள் என்றும் கூறுகின்றனர்.