முஹம்மது நபி (ஸல்) வரலாறு - பக்கம் : 455

நபியவர்களைப் பற்றி அன்சாரிகள் அஞ்சுதல்

அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு மக்காவில் வெற்றி அளித்தான். இப்புனித நகரம் அவர்களது சொந்த ஊர் அவர்கள் பிறந்த ஊர் அவர்களுக்கு பிடித்தமான ஊர் என்பது தெரிந்ததே! நபியவர்கள் ஸஃபா மலையில் தங்களது கைகளை உயர்த்தி துஆச் செய்து கொண்டிருந்தார்கள். அந்நேரத்தில் அல்லாஹ் தனது இந்த ஊரை நபியவர்களுக்கு கைவசப் படுத்தித் தந்தான். எனவே, அவர்கள் இங்கேயே தங்கி விடுவார்களோ? என அன்சாரிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

தங்களது பிரார்த்தனையை முடித்த பின்பு “நீங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?” என நபி (ஸல்) அன்சாரிகளிடம் வினவினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஒன்றுமில்லை” என அவர்கள் கூறினர். நபி (ஸல்) மீண்டும் மீண்டும் கேட்கவே இறுதியில் தங்களிடையே என்ன பேசினோம் என்பதை தெரிவித்தனர். அதற்கு நபி (ஸல்) “அல்லாஹ் காப்பாற்றுவானாக! நான் வாழ்ந்தால் உங்களுடன் வாழ்வேன். மரணித்தால் உங்களுடனே மரணிப்பேன்” என்று கூறினார்கள்.

பைஆ வாங்குதல்

அல்லாஹ் இஸ்லாமை ஓங்கச் செய்து, நபியும் முஸ்லிம்களும் மக்காவை வெற்றி கொள்ளும்படி செய்தான். இதைப் பார்த்த மக்காவாசிகள் இஸ்லாமே உண்மை மார்க்கம். வெற்றி பெற இஸ்லாமைத் தவிர வேறு வழியில்லை என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொண்டனர். எனவே, இஸ்லாமை ஏற்று நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்வதற்கு ஒன்று கூடினர். நபி (ஸல்) ஸஃபா மலைக் குன்றுக்கு மேல் அமர்ந்து கொண்டு இதற்காக தயாரானார்கள். கீழே உமர் (ரழி) அமர்ந்து கொண்டார்கள். நபியவர்கள் மக்களிடமிருந்து இஸ்லாமிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். தங்களால் இயன்ற அளவு செவிமடுப்போம் கட்டுப்படுவோம் என மக்கள் பைஆ செய்தனர்.

‘அல்மதாக்’ என்ற நூலில் வருவதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆண்களிடம் பைஆ பெற்ற பின்பு பெண்களிடம் வாங்கினார்கள். அப்போது நபி (ஸல்) ஸஃபாவின் மீதும், அதற்குக் கீழே உமரும் அமர்ந்திருந்தனர். நபி (ஸல்) ஒவ்வொரு விஷயமாகக் கூற அதனை உமர் (ரழி) அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். இந்நேரத்தில் அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா நபியவர்களிடம் வந்தார். உஹுத் போரில் வீரமரணம் எய்திய ஹம்ஜாவுடைய உடலைச் சின்னாபின்னமாக்கிய தனது செயலுக்கு நபி (ஸல்) என்ன செய்வார்களோ என்று அஞ்சியதால் தன்னை முழுதும் மறைத்துக் கொண்டு வந்தார். நபி (ஸல்) “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டீர்கள் என்று எனக்கு வாக்குத் தர வேண்டும்” என்று கூற, உமர் (ரழி) பெண்களுக்கு அதை எடுத்துரைத்தார்கள். அடுத்து, “நீங்கள் திருடக் கூடாது” என்றார்கள். அதற்கு, “அபூஸுஃப்யான் ஒரு கஞ்சன். நான் அவருடைய பொருளில் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாமா?” என ஹிந்த் வினவினார். “நீ எதனை எடுத்துக் கொண்டாயோ அது உனக்கு ஆகுமானதே” என்று அபூஸுஃப்யான் கூறினார்.