பக்கம் -5-
அறியாமைக் கால அரபியச் சமுதாயம்
இதுவரை அரபிய தீபகற்பத்தில் நிலவிய அரசியல் மற்றும் மதக் கோட்பாடுகளை
அறிந்தோம். இப்போது அதன் சமூக அமைப்பு, பொருளாதாரம் மற்றும் பண்பாடுகளைப் பற்றி சுருக்கமாகக்
காண்போம்.
சமுதாய அமைப்பு
அரபியர்களில் பலதரப்பட்ட வகுப்பினர் இருந்தனர். அவர்களில் உயர்மட்ட குடும்பங்களில்
ஆண்கள் தனது குடும்பப் பெண்களுடன் உயர்வான நடத்தையைக் கொண்டிருந்தார்கள். அக்குடும்பங்களில்
பெண்கள் சுய அதிகாரத்துடனும் கௌரவத்துடனும் திகழ்ந்தனர். பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பும்
மரியாதையும் அளிக்கப்பட்டது. பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வாளேந்தி போர் செய்யவும்
அவர்கள் துணிந்திருந்தனர்.
ஓர் ஆண் தனது கொடைத்தன்மை, வீரம், வலிமையைக் கூறி தன்னைப் புகழ்ந்துக்கொள்ள நினைக்கும்போது
தனது கவிதைகளில் பெண்ணை விளித்து பேசுவது போல பேசுவார். சில சந்தர்ப்பங்களில் பெண்
விரும்பினால் தங்களது குலத்தாரிடையே காணப்படும் பிளவுகளை சரிசெய்து அமைதி நிலவச் செய்திடுவாள்.
அவள் நினைத்தால் மக்களிடையே போர் நெருப்பை மூட்டிவிடுவாள். எனினும், எவ்விதக் கருத்து
வேறுபாடுமின்றி ஆண் குடும்பத் தலைவனாக விளங்கினான். அவனே முடிவெடுக்கும் அதிகாரத்தைப்
பெற்றிருந்தான். அவர்களிடையே ஆண், பெண் தொடர்பு என்பது அப்பெண்களுடைய காப்பாளர்களின்
அனுமதி பெற்று திருமணத்தின் மூலமே ஏற்படுத்தப்பட்டது. தங்கள் குடும்ப ஆண்களை மீறி செயல்பட,
பெண்கள் அதிகாரமற்றவர்களாக இருந்தார்கள்.
ஆனால், கீழ்மட்ட மக்களிடத்தில் ஆண், பெண் இணைந்து வாழ்வதற்கு பல்வேறு நடைமுறைகள் காணப்பட்டன.
அவை அனைத்தும் வெட்கமற்ற இழிவான ஈனத்தனமான பழக்க வழக்கங்களாகவே இருந்தன. இது குறித்து
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
திருமணங்கள் அறியாமைக் காலத்தில் நான்கு வகைகளாக இருந்தன.
முதல் வகை: இன்று மக்களிடையே நடைமுறையிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும். ஒருவர் மற்றொருவரின்
பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி ‘மஹ்ர்’ (விவாகக் கொடை)
கொடுத்து மணந்து கொள்வார்.
இரண்டாம் வகை: ஒருவர் தம் மனைவியிடம் “நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்தவுடன்
இன்ன நபருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்!” என்று கூறி அனுப்பி விடுவார். அதன்பின்
அந்த மனிதர் மூலம் கர்ப்பமானது தெரியும்வரை அவர் தன் மனைவியுடன் சேராமல் விலகி இருப்பார்.
அந்த மனிதர் மூலம் அவள் கர்ப்பமாகி விட்டாளெனத் தெரியவந்தால் தன் விருப்பத்திற்கேற்ப
கணவர் அவளுடன் சேர்ந்து கொள்வார். திடகாத்திரமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற ஆர்வத்தினாலேயே
இவ்வாறு செய்து வந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ழாவு’ என்று அரபியில்
பெயர் கூறப்படும்.
மூன்றாம் வகை: பத்துப் பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும்
ஒரே பெண்ணுடன் உறவு கொள்வார்கள். அவள் கர்ப்பமாகி குழந்தை பிரசவித்த சில நாட்களுக்குப்
பின் அவர்கள் அனைவரையும் தன்னிடம் வரச் சொல்வாள். அவர்கள் அனைவரும் எவ்வித மறுப்புமின்றி
அவளிடம் ஒன்று கூடுவார்கள். அவர்களிடம் அவள்: “நீங்கள் செய்தது உங்களுக்குத் தெரிந்ததே!
(இப்போது) எனக்குக் குழந்தை பிறந்து விட்டது” என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி)
“இது உன் குழந்தையே” என தான் விரும்பியவன் பெயரைக் குறிப்பிடுவாள். அக்குழந்தை அந்த
நபரிடம் ஒப்படைக்கப்படும். அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.
நான்காம் வகை: பலர் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வர். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க
மாட்டாள். இப்பெண்கள் விலை மாதர்கள் ஆவர். இவர்கள் தங்களது வீட்டு வாசலில் கொடியை நட்டு
வைத்திருப்பார்கள். பலர் அங்கு வந்து போவார்கள். இதில் ஒருத்தி கர்ப்பமாகிக் குழந்தை
பெற்றால் மக்கள் ஒன்று கூடி அங்க அடையாளங்களை வைத்து குழந்தையின் தந்தையை கண்டறியும்
முகக்குறி நிபுணர்களை அழைத்து வருவார்கள். அந்த நிபுணர்கள் ஆராய்ந்து தந்தையை முடிவு
செய்து அம்மனிதனுடன் அந்தக் குழந்தையை இணைத்து விடுவார்கள். அவனிடம் அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டு
அவனுடைய மகன் என்று பெயர் சொல்லி அழைக்கப்படும். அதைத் தன் குழந்தையல்ல என்று அவனும்
மறுக்க மாட்டான்.
அல்லாஹ் சத்திய மார்க்கத்துடன் முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பியபோது
இன்று மக்களின் வழக்கிலுள்ள இஸ்லாமியத் திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத்திருமணங்கள்
அனைத்தையும் தகர்த்து விட்டான். (ஸஹீஹுல் புகாரி, ஸுனன் அபூதாவூது)
சிலசமயம் இரு வகுப்பாரிடையே போர் நடைபெறும். அதில், தோல்வி அடைந்தவர்களின் பெண்களை
வெற்றிபெற்ற பிரிவினர் சிறைபிடித்து தங்களது அடிமைகளாக்கி அனுபவிப்பார்கள். இதில் பிறக்கும்
குழந்தைகளின் பெயர்கள் காலம் முழுவதும் அடிமைகளான அவர்களது தாய்மார்களின் பெயர்களுடன்
சேர்த்து அழைக்கப்படும் அவமானம் இருந்து வந்தது.
அறியாமைக் காலத்தில் ஆண்கள் எவ்வித வரம்புமின்றி பல பெண்களை மணந்து கொண்டனர். இஸ்லாம்
அதை தடுத்து நான்கு பெண்களுக்கு மேல் மணமுடிக்கக் கூடாது என வரையறுத்தது. மேலும், இரு
சகோதரிகளை ஒரே காலத்தில் மணந்து கொண்டனர். தங்களது தந்தை இறந்துவிட்டால் அல்லது விவாகரத்து
செய்துவிட்டால் அவன் மனைவியை (மாற்றாந்தாயை) மணந்து கொள்ளும் பழக்கமும் அவர்களிடையே
காணப்பட்டது. இவ்விரண்டையும் இஸ்லாம் தடை செய்தது. (பார்க்க அல்குர்ஆன் 4 : 22, 23).
அவ்வாறே விவாகரத்து செய்வதில் குறிப்பிட்ட முறை எதுவுமின்றி விரும்பிய நேரத்தில் தலாக்
(விவாகரத்து) கூறி விரும்பிய நேரத்தில் மனைவியரை திரும்ப அழைத்துக் கொண்டனர். இதை தடை
செய்து மூன்று முறைக்கு மேல் இவ்வாறு செய்யலாகாது என இஸ்லாம் வரையறுத்தது. (ஸுனன் அபூதாவூது)
சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் விபசாரம் பரவியிருந்தது. சிலர் மட்டும் இந்த இழிசெயலை
வெறுத்து கௌரவத்துடன் வாழ்ந்தனர். அடிமைப் பெண்களின் நிலைமை சுதந்திர பெண்களின் நிலைமையைவிட
மிக மோசமாக இருந்தது. அந்த அறியாமைக்கால மக்களில் பெரும்பாலோர் விபசாரத்தை ஒரு குற்றச்
செயலாகவே கருதவில்லை.
இது குறித்து நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் ஒரு மனிதர் எழுந்து
“அல்லாஹ்வின் தூதரே! இன்னவன் என் மகனாவான். அறியாமைக் காலத்தில் நான் அவனது தாயுடன்
விபசாரம் செய்துள்ளேன் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இஸ்லாமிய மார்க்கத்தில்
இவ்வாறான உரிமைக் கோரலுக்கு வாய்ப்பில்லை. அறியாமைக் கால செயல்களெல்லாம் முடிந்துபோய்
விட்டன. இப்போது குழந்தை அதனுடைய தாயின் கணவனையே சாரும். விபசாரம் புரிந்தவனைக் கல்லால்
எறிந்து கொல்லப்படும்” என்று கூறினார்கள். (ஸுனன் அபூதாவூது)
ஸஅது இப்னு அபீ வக்காஸ், அப்து இப்னு ஜம்ஆ ஆகிய இருவருக்கிடையே ஜம்ஆவின் அடிமைப் பெண்ணுக்குப்
பிறந்த அப்துர் ரஹ்மான் இப்னு ஜம்ஆவின் விஷயத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் மிகப் பிரபலமானதாகும்.
(பார்க்க ஸஹீஹுல் புகாரி 2053, 2218)
அரபியர்கள் தங்களது பிள்ளைகளுடன் கொண்டிருந்த தொடர்பு பலவகைகளில் அமைந்திருந்தது. அவர்களில்
சிலர் தங்களது பிள்ளைகளை உயிருக்குயிராக நேசித்தனர். இதைப் பற்றி ஒரு கவிஞர் கூறுவதாவது:
“நமது குழந்தைகள் புவியில் தவழும் நமது ஈரக்குலைகளாவர்.”
தற்காலத்தைப் போன்றே, அக்காலத்தில் சிலர் பெண் பிள்ளைகளை அவமானமாகக் கருதியும் செலவுக்குப்பயந்தும்
உயிருடன் புதைத்தனர். மேலும் சிலர், வறுமைக்கு அஞ்சி தங்களின் ஆண் குழந்தைகளையும் கொலை
செய்தனர். (பார்க்க அல்குர்ஆன் (6 : 151), (16 : 58, 59), (17 : 31), (81 : 8) எனினும்
இப்பழக்கம் பரவலாகக் காணப்படவில்லை. காரணம், எதிரிகளுடன் போரிடுவதற்கு அவர்களுக்கு
ஆண் மக்களின் தேவை அதிகமாக இருந்தது.
அரபியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்குள் மிக நெருக்கமான உறவு வைத்திருந்தனர்.
குலப்பெருமைக்காகவே வாழவும் குலப்பெருமைக்காகவே சாகவும் துணிந்தனர். ஒரே கோத்திரத்தை
சேர்ந்தவர்கள் தங்களுக்குள் சமூகப் பித்தும் இனவெறியும் கொண்டு அலைந்தனர். இனவாதமும்
இரத்த பந்தமான குடும்பப் பாரம்பரியமும் அவர்களது சமூக அமைப்பின் அஸ்திவாரமாகத் திகழ்ந்தன.
அவர்களிடையே அறியப்பட்ட “உன் சகோதரன் அநியாயக்காரனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக
இருந்தாலும் அவனுக்கு நீ உதவி செய்” என்ற பழமொழியின் வெளிப்படையான பொருளுக்கேற்பவே
அவர்கள் நடந்து வந்தார்கள். ஆனால், இஸ்லாம் இப்பழமொழிக்கு நேரடிப் பொருள் கொள்வதை மாற்றி
அநியாயக் காரனை அவனுடைய அநியாயத்திலிருந்து தடுப்பதுதான் அவனுக்குச் செய்யும் உதவி
என பொருள் தந்தது. எனினும், சில நேரங்களில் தலைமைத்துவத்தை அடைவதற்காக ஒரே வமிசத்தில்
தோன்றியவர்கள் கூட தங்களுக்குள் வாளெடுத்துப் போரிட்டுக் கொண்டனர். எடுத்துக்காட்டாக
அவ்ஸ்-கஸ்ரஜ், அப்ஸ்-துப்யான், பக்ர்-தக்லிப் கோத்திரத்தினர் தலைமைப் பதவிக்காக தங்களுக்குள்
பகைவர்களாக இருந்தனர்.
பல மாறுபட்ட கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் தொடர்பற்றவர்களாக பிரிந்து வாழ்ந்தனர்.
குடும்பச் சண்டையிலேயே தங்கள் ஆற்றல்களை இழந்தனர். சில நேரங்களில் அவர்கள் கொண்டிருந்த
மத நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் அவர்களுக்கிடையில் இருந்த பகைமையின் வேகத்தை
குறைத்தன. மற்றும் சில நேரங்களில் சமாதான ஒப்பந்தங்களும் நட்பு ஒப்பந்தங்களும் பல மாறுபட்ட
கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கிடையே நெருக்கமான உறவை ஏற்படுத்தின. புனித மாதங்கள் அவர்களுக்கு
அருளாகவும் வாழ்வுக்கும் வியாபாரத்திற்கும் பேருதவியாகவும் அமைந்திருந்தன. புனித மாதங்களை
அவர்கள் கண்ணியப்படுத்தி வந்ததால் அம்மாதங்களில் மட்டும் அவர்கள் முழு நிம்மதியுடனும்
பாதுகாப்புடனும் இருந்தனர்.
அபூரஜா அல் உதாதி (ரழி) கூறுகிறார்: “ரஜபு மாதம் வந்துவிட்டால் நாங்கள் ஈட்டிகளின்
கூர்மையை அகற்றும் மாதம் வந்துவிட்டது” என்று கூறி ஈட்டி, அம்புகளின் முனையை அகற்றிவிடுவோம்.
இவ்வாறே மற்ற புனித மாதங்களிலும் நடந்து கொள்வோம். (ஸஹீஹுல் புகாரி. ஃபத்ஹுல் பாரி)
சுருங்கக்கூறின் சமூக அமைப்பு தரங்கெட்டு உருக்குலைந்து இருந்தது. மூட நம்பிக்கைகள்
மிகைத்திருந்தன. அறியாமை அவர்களை ஆட்டிப் படைத்தது. மனிதர்கள் கால்நடைகளாக வாழ்ந்தனர்.
பெண்கள் விற்பனைப் பொருளாக்கப்பட்டு ஜடமாகவே பாவிக்கப்பட்டனர். சமூகங்களுக்கிடையில்
உறவுகள் துண்டிக்கப்பட்டிருந்தன. குடிமக்களைச் சுரண்டி தங்களது கருவூலங்களை நிரப்பிக்கொள்வது
அல்லது எதிரிகளின் மீது தாக்குதல் நடத்துவதே ஆட்சியாளர்களின் நோக்கமாக இருந்தது.
பொருளாதாரம்
சமூக நிலைமைக்கேற்ப பொருளாதாரம் அமைந்திருந்தது. அரபியர்களின் வாழ்க்கை முறைகளை ஆய்வு
செய்யும்போது இக்கருத்து நமக்குத் தெரியவரும். அவர்களது வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக்
கொள்வதற்கு வியாபாரமே பெரும் துணையாக இருந்தது. அமைதியும் பாதுகாப்பும் இருந்தால்தான்
வியாபாரப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பது தெரிந்ததே! ஆனால், அரபிய தீபகற்பத்தில்
புனித மாதங்களைத் தவிர ஏனைய மாதங்களில் அந்த அமைதியும் பாதுகாப்பும் இருக்கவில்லை.
இப்புனித மாதங்களில்தான் உக்காள், தில்மஜாஸ், மஜன்னா போன்ற அரபியர்களின் பெயர் போன
வியாபாரச் சந்தைகள் நடைபெற்றன.
அரபியர்களிடம் தொழில் துறைகளைப் பற்றிய அறிவு காணப்படவில்லை. துணி நெய்தல், தோல் பதனிடுதல்
போன்ற சில தொழில் யமன், ஹீரா மற்றும் ‘மஷாஃபுஷ் ஷாம்’ ஆகிய பகுதிகளில் மட்டும் காணப்பட்டன.
அரபிய தீபகற்பத்தின் உட்புறத்தின் சில பகுதிகளில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் நடைபெற்று
வந்தன. அரபியப் பெண்கள் அனைவரும் நெசவுத் தொழில் செய்தனர். எனினும், அனைத்து செல்வங்களும்
போர்களில் செலவழித்து வீணடிக்கப்பட்டன. அவர்களிடையே வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடியது.
அணிவதற்கான ஆடைகள் கூட இல்லாமல் தவித்தனர்.
பண்பாடுகள்
அக்கால மக்களிடையே செம்மையான சிந்தனையோ பகுத்தறிவோ இல்லை என்பதால் அக்காலத்தை “அறியாமைக்காலம்”
என வருணிக்கப்பட்டது. ஏற்க இயலாத செயல்பாடுகளும் இழிவான நடத்தைகளும் குடி கொண்டிருந்தன.
அதே நேரத்தில் வியக்கத்தக்க சில அரிய பண்புகளும் அவர்களிடம் குடிகொண்டிருந்தன.
அவையாவன:
1) கொடைத் தன்மை மற்றும் தயாளத்தன்மை: அவர்கள் கொடைத் தன்மையில் ஒருவரையொருவர் போட்டியிட்டனர்.
இந்தக் கொடைத் தன்மையைக் கொண்டே தங்களது பெரும்பாலான கவிகளில் தங்களையும் பிறரையும்
புகழ்ந்து கொண்டனர்.
கடுமையான குளிரும் பஞ்சமும் நிலவி வரும் காலத்தில் ஒருவரிடம் விருந்தினர் ஒருவர் வருகிறார்.
அம்மனிதரிடம் தனது குடும்பத்தின் தேவைக்காக இருக்கும் ஓர் ஒட்டகையைத் தவிர வேறொன்றுமில்லாத
நிலையிலும் அந்த ஒட்டகையை அறுத்து விருந்தினரை உபசரிக்க அவரைத் தூண்டுமளவு அவர்களிடம்
விருந்தோம்பல் குணம் மிகைத்திருந்தது.
அவ்வாறே அவர்களில் இயலாத ஒருவர் நஷ்டஈடு வழங்க வேண்டியிருந்தால் அது தங்களது சக்திக்கு
மீறியதாக இருப்பினும் அந்தத் தொகையைத் தான் தருவதாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள். இதனால்,
பிறர் உயிர் பறிக்கப்படுவதிலிருந்து பாதுகாத்தார்கள். இதைத் தங்களுக்குப் பெருமையாகக்
கருதினார்கள்.
அவர்களிடமிருந்த தர்ம சிந்தனையின் விளைவாக மது அருந்துவதை பெருமைக்குரியதாக கருதினர்.
அது ஒரு சிறப்பான செயல் என்பதற்காக அதனை அவர்கள் நேசிக்கவில்லை. மாறாக, மது அருந்துவது
தர்மம் செய்வதற்கான ஒரு வழியாக இருக்கிறது. செல்வத்தை வாரி இறைப்பதை மனதிற்கு எளிதாக்குகிறது
என்பதால் அதை நேசித்தனர். அதனாலேயே திராட்சைக் கொடிக்கு ‘கரம்’ (கொடை) என்றும் அதிலிருந்து
பிழியப்பட்ட மதுவுக்கு ‘பின்துல் கரம்’ (கொடையின் புதல்வி) எனவும் பெயரிட்டிருந்தனர்.
எனவேதான், மது அருந்துவதை பெருமைப்படுத்தியும் புகழ்ந்தும் பல அரபுக்கவிதைகள் அறியாமைக்
காலத்தில் இயற்றப்பட்டதை நாம் பார்க்கிறோம்.
இதுபற்றி அன்தரா இப்னு ஷத்தாத் அல் அபஸீ தனது கவிதைத் தொகுப்பில் கூறுகிறார்:
“மதிய வேளைக்குப் பின் வடிகட்டியுடன் உள்ள
மஞ்சள் நிறக் கண்ணாடி கெண்டியிலிருந்து
அடையாளமிடப்பட்ட தெளிவான கண்ணாடிக் கிண்ணத்தில் ஊற்றி
இடக்கையால் மது அருந்தினேன்.
நான் குடித்தால் என் செல்வங்கள் அனைத்தையும் வாரி இறைப்பேன்.
ஆனால் எனது கண்ணியத்தை கரைபடியாது காப்பேன்.
மது மயக்கம் தெளிந்த பின்னும் வாரி வழங்குவதில் ஒரு குறையும் வைக்கமாட்டேன்.
இத்தகைய என் பண்பாடும் பெருந்தன்மையும் உனக்குத் தெரிந்ததே!”
சூதாடுவதையும் தங்களது கொடைத்தன்மையின் வெளிப்பாடாக அவர்கள் கருதினார்கள். ஏனெனில்,
சூதாட்டத்தில் வெற்றி பெறுபவர், தான் செலவிட்டதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதத்தை
ஏழை, எளியோருக்கு கொடுத்து விடுவார். இதனாலேயே மது அருந்துவதிலும் சூதாடுவதிலும் எப்பலனுமே
இல்லை என்று குர்ஆன் மறுக்கவில்லை. மாறாக, அதன் பலனைவிட அதன் தீய விளைவுதான் அதிகம்
என்று கூறுகிறது.
(நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் உங்களிடம்
கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: “அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன
மனிதர்களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றிலுள்ள பாவம் அவற்றின் பயனை
விட மிகப் பெரிது.” (அல்குர்ஆன் 2 : 219)
2) ஒப்பந்தங்களை நிறைவேற்றல்: அவர்கள் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதிலும் வாக்குகளைக்
காப்பாற்றுவதிலும் மிக உறுதியாக இருந்தனர். தங்களது பிள்ளைகள் கொலை செய்யப்பட்டாலும்
தங்களது வீடுகள் தகர்க்கப்பட்டாலும் அது குறித்து சிறிதும் இலட்சியம் செய்யாமல் தங்களது
ஒப்பந்தத்தை நிறைவேற்றினர். இதற்கு ஹானி இப்னு மஸ்வூத் ஷைபானி, ஸமவ்அல் இப்னு ஆதியா
போன்றவர்களின் சம்பவங்கள் சான்றாகும். (இதிலுள்ள ஹானியின் சம்பவம் ‘ஹீரா நாட்டில் ஆட்சி’
என்ற தலைப்பில் சென்றுள்ளது.)
அடுத்து ஸமவ்அல் இப்னு ஆதியா பற்றிய சம்பவமாவது: ஸமவ்அலிடம் இம்ரவுல் கைஸ் சில கவச
ஆடைகளை அமானிதமாகக் கொடுத்திருந்தார். ‘ஹாஸ்’ என்ற கஸ்ஸானிய மன்னன் அதனை அபகரிக்க நாடினான்.
ஸமவ்அல் தீமாவிலுள்ள தனது கோட்டையில் தஞ்சம் புகுந்தான். அவருடைய பிள்ளைகளில் ஒருவர்
கோட்டைக்கு வெளியில் மாட்டிக்கொண்டார். அவரை மன்னன் ஹாஸ் பணயமாகப் பிடித்துக்கொண்டு
கவச ஆடைகளை கொடுக்காவிட்டால் பிள்ளையைக் கொன்று விடுவேன் என மிரட்டினான். ஸமவ்அல் கொடுக்க
மறுத்து தன் கண்ணெதிரே தன் பிள்ளை கொல்லப்படுவதையும் சகித்துக்கொண்டார்.
3) சுயகௌரவம் மற்றும் அநீதத்தை சகித்துக் கொள்ளாத் தன்மை: இப்பண்புகள் அவர்களிடம் கட்டுக்கடங்கா
வீரத்தையும் அதிரடி ரோஷத்தையும் வேகமாக உணர்ச்சி வசப்படுவதையும் தூண்டின. எவருடைய சொல்லாவது
தனக்கு கௌரவக் குறைவை அல்லது இழிவை ஏற்படுத்துகிறது என அறிந்தால் அவர்களுக்கு எதிராகக்
கிளர்ந்தெழுவார்கள். தங்களது உயிரைப் பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாமல் வாளாலும்,
அம்புகளாலும் அதற்கு பதிலடி கொடுப்பார்கள்.
4) செயலில் உறுதியுடன் இருத்தல்: அம்மக்கள் ஒரு செயல் தங்களது பெருமைக்கும் உயர்வுக்கும்
காரணமாக அமையும் என நம்பினால் அதை செயல்படுத்துவதிலிருந்து அவர்களை எந்தவொரு சக்தியும்
தடுத்துவிட முடியாது. தங்களது உயிரைக் கொடுத்தாவது அதனை அவர்கள் செய்து முடிப்பார்கள்.
5) நிதானித்தல், சகித்தல், அமைதி காத்தல்: இப்பண்புகளும் அவர்களிடம் அமைந்திருந்தன.
எனினும், வீரமும் போர் மீதான ஆர்வமும் மிகுந்திருந்ததால் இப்பண்புகள் மிக அரிதாகவே
காணப்பட்டன.
6) எளிமையை விரும்பிப் பகட்டை வெறுத்தல்: அவர்களிடம் இப்பண்பும் காணப்பட்டது. அதனால்
அவர்கள் உண்மை, நேர்மை, வாய்மை போன்றவற்றை நேசித்து மோசடி, ஏமாற்றுதல் போன்ற இழிகுணங்களை
வெறுத்தனர்.
உலகின் ஏனைய பகுதிகளைப் பார்க்கிலும் அரபிய தீபகற்பத்துக்குப் புவியியல் ரீதியான முக்கியத்துவம்
அமைந்திருந்தது. அத்துடன் அம்மக்களிடம் இருந்த மேற்கூறிய சில அரிய பண்புகளும் இருந்தன.
இதன் காரணமாகவே இறுதி இறைத்தூதை சுமப்பதற்கும் மனித குலத்தை சீர்படுத்தி நேர்வழி நோக்கி
அழைத்துச் செல்வதற்கும் அரபியர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.
அந்த மக்களிடம் அமைந்திருந்த இந்த பண்புகளில் சில தீமைகளை, துன்பங்களை ஏற்படுத்துவதாக
அமைந்திருந்தாலும் அடிப்படையில் அவை மிக உயரிய பண்புகளாகவே இருந்தன. அதனைச் சற்று சீரமைக்கும்போது
மனித குலத்துக்கு அந்த பண்புகளால் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன இஸ்லாம் அந்த சீர்திருத்தத்தையே
செய்தது.
அவர்களிடமிருந்த மிக உயரிய பண்புகளில் “ஒப்பந்தங்களை நிறைவேற்றுதல்” என்ற நற்பண்புக்கு
அடுத்ததாக “உயர்வான காரியங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருத்தல்” என்ற பண்பு மக்களுக்கு
மிக நன்மை பயக்கக் கூடியதாகும். ஏனெனில், தீமைகளையும் குழப்பங்களையும் களைந்து நீதியையும்
நன்மையையும் நிலை நிறுத்துவதற்கு இந்த பண்பு மிக அவசியமாக இருக்கிறது.
மேற்கூறப்பட்டவை மட்டுமின்றி இன்னும் பல அரிய பண்புகளும் உயரிய குணங்களும் அவர்களிடம்
இருந்தன. அவை அனைத்தையும் இங்கு கூறுவது நமது நோக்கமல்ல.