பக்கம் - 218 -
(நம்பிக்கையாளர்களே! உங்களை எதிர்த்துப் போர் புரியும்) நிராகரிப்பவர்களை நீங்கள் சந்திப்பீர்களாயின், (தயக்கமின்றி) அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள். அவர்களை முறியடித்துவிட்டால், (மிஞ்சியவர்களைச் சிறை) பிடித்துக் கட்டுங்கள் அதன் பின்னர், அவர்களுக்குப் பதிலாக யாதொரு ஈடு பெற்றேனும் அல்லது (ஈடின்றி அவர்கள் மீது) கருணையாகவேனும் விட்டுவிடுங்கள்.

இவ்வாறு, (எதிரிகள்) தம் ஆயுதத்தைக் கீழே வைக்கும் வரையில் (போர் செய்யுங்கள்.) இது அல்லாஹ்(வின் கட்டளை. அவன்) நாடியிருந்தால், (அவர்கள் உங்களுடன் போர் புரிய வருவதற்கு முன்னதாகவே) அவர்களைப் பழி வாங்கியிருப்பான். ஆயினும், (போரின் மூலம்) உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்.

ஆகவே, அல்லாஹ்வுடைய பாதையில் எவர்கள் வெட்டப்பட்டு (இறந்து) விடுகின்றார்களோ, அவர்களுடைய நன்மைகளை அவன் வீணாக்கி விட மாட்டான். (தக்க கூலியையே கொடுப்பான்.) அவர்களை நேரான பாதையில் செலுத்தி அவர்களுடைய நிலைமையையும் சீர்படுத்தி விடுவான்.

அன்றி, அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சுவனபதியிலும் அவர்களைப் புகுத்துவான்.

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால், அவனும் உங்களுக்கு உதவி புரிந்து உங்களுடைய பாதங்களை உறுதியாக்கிவிடுவான். (அல்குர்ஆன் 47:4-7)

பின்பு, போர் கடமையாக்கப்பட்டதை கேள்விப்பட்டு உள்ளம் நடுங்கியவர்களை மிக வன்மையாக பழித்து குர்ஆன் வசனங்களை இறக்கினான்:

நம்பிக்கை கொண்டவர்களிலும் சிலர், (போரைப் பற்றி) யாதொரு (தனி அத்தியாயம் இறக்கப்பட வேண்டாமா? என்று கூறுகின்றனர். அவ்வாறே (தெளிவான) ஒரு திட்டமான அத்தியாயம் இறக்கப்பட்டு, போர் செய்யுமாறு அதில் கூறப்பட்டிருந்தால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அவர்கள், மரண அவஸ்தையில் சிக்கி மயங்கிக் கிடப்பவர் பார்ப்பதைப் போல் (நபியே!) உங்களை அவர்கள் நோக்குவார்கள். ஆகவே, அவர்களுக்குக் கேடுதான். (அல்குர்ஆன் 47:20)

போர் கடமையாக்கப்பட்டதும், அதற்கு ஆர்வமூட்டப்பட்டதும், அதற்குரிய தயாரிப்புகளைச் செய்ய வேண்டுமென்று கட்டளையிடப்பட்டதும் அக்காலச் சூழ்நிலையின் தேவையாகவும் கட்டாயமாகவும் இருந்தது. சூழ்நிலைகளை நன்கு அலசிப்பார்க்கும் ஆற்றலுள்ள தலைவர் யாராக இருப்பினும் அக்கால அவசியத்தைக் கருதி திடீர் நிகழ்வுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டுமென தனது படைகளுக்கு நிச்சயம் கட்டளையிட்டிருப்பார். விஷயம் இவ்வாறிருக்க அனைத்தையும் அறிந்தவனும் மிகைத்தவனுமான அல்லாஹ் இக்கட்டளைகளை முஸ்லிம்களுக்கு பிறப்பிக்காமல் இருப்பானா? அக்கால சூழ்நிலையோ முற்றிலும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் மத்தியில் கடும் மோதல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷுடைய படையின் நிகழ்ச்சி இணைவைப்போரின் ரோஷத்திற்கும் இன பெருமைக்கும் மிகப் பெரிய அடியாக இருந்தது. இந்நிகழ்ச்சி இவர்களுக்கு மிகுந்த நோவினை அளித்தது மட்டுமல்லாமல் நெருப்புக் கங்குகளில் புரள்பவர்களாக இவர்களை ஆக்கி விட்டது.