பக்கம் - 340 -
அன்சாரிகளின் இந்த உறுதி, நிலை குலையாமை, துணிவு, மற்ற எல்லாத் தோழர்களின் பொறுமை, தியாகம் - இவை அனைத்தும் அல்லாஹ்விற்கு பிடித்துவிட்டது. அல்லாஹுத் தஆலா தன் புறத்திலிருந்து உதவியை இறக்கினான். எதிரிகளைத் தோற்கடித்து அவர்களது ராணுவங்களை புறமுதுகு காட்டி ஓடச் செய்தான். இதற்காக அல்லாஹ் செய்த ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சியும் ஒன்றாகும். கத்ஃபான் கோத்திரத்தில் நுஅய்ம் இப்னு மஸ்வூத் இப்னு ஆமிர் என்பவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து “அல்லாஹ்வின் தூதரே! நான் முஸ்லிமாகி விட்டேன். ஆனால், நான் முஸ்லிமானது எனது கூட்டத்தினருக்குத் தெரியாது. எனவே, நீங்கள் முஸ்லிம்களுக்குச் சாதகமாக ஏதாவது செய்யச் சொன்னால், நான் அதன்படி செய்கிறேன்” என்றார். அதற்கு நபியவர்கள் “நீ தனியாக என்ன செய்து விட முடியும்? உன்னால் முடிந்தால் எங்களை விட்டும் எதிரிகளைத் திசை திருப்பும் தந்திரம் எதையாவது செய். ஏனெனில், போர் என்பதே ஒரு சூழ்ச்சிதான்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றுக்கினங்க அவர் குரைளாவனரிடம் சென்றார். இவர் குரைளாவினன் நண்பராக இருந்ததால், அவர்களிடம் சென்று “நான் உங்களை எந்தளவு விரும்புகிறேன் என்பதையும் எனக்கும் உங்களுக்குமிடையிலுள்ள வலுவான தொடர்பையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்தானே?” என்றார். அதற்கவர்கள் “ஆம்! என்றனர். இந்த ஊர் உங்களுடைய ஊராகும். இதில்தான் உங்களுடைய சொத்துகளும், பிள்ளைகளும், பெண்களும் இருக்கின்றனர். நீங்கள் இந்த ஊரைவிட்டு வேறு எங்கும் தப்பித்துச் செல்ல முடியாது. ஆனால், குறைஷிகள் உங்களைப் போன்றல்ல. அவர்களும் கத்ஃபான்களும் முஹம்மதிடம் போர் செய்வதற்காக இங்கு வந்திருக்கின்றனர். நீங்களும் முஹம்மதுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்கிறீர்கள். ஆனால், அவர்களது ஊர் இதுவல்ல. அவர்களது செல்வங்களும் பிள்ளைகளும் இங்கு இல்லை. அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படி வாய்ப்பு கிட்டவில்லை என்றாலோ அல்லது போரில் தோல்வியுற்றாலோ அவர்கள் தங்களது ஊர்களுக்குத் திரும்பச் சென்று தப்பித்துக் கொள்வார்கள். நீங்கள் முஹம்மதிடம் வசமாக மாட்டிக் கொள்வீர்கள். அவரோ உங்களிடம் பழிதீர்த்துக் கொள்வார். நீங்கள் என்ன செய்ய முடியும்” என்று கேட்டார். அதற்கு யூதர்கள் “நுஅய்மே! நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீ கூறுகிறாய்” எனக் கேட்டனர். அதற்கவர் “நீங்கள் அவர்களிடம் அவர்களின் சில நபர்களை உங்களிடம் அடைமானமாக வைத்துக்கொள்ள கேளுங்கள். அவர்கள் சிலரை ஒப்படைக்காத வரை நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக போர் புரியாதீர்கள்” என்று கூறினார். அதற்கு யூதர்கள் “நீ எங்களுக்குச் சரியான ஆலோசனை கூறிவிட்டாய்” என்று கூறினர்.

இதற்குப் பின் நேரடியாக நுஅய்ம் குறைஷிகளைச் சந்தித்தார். அவர்களிடம் “உங்களை நான் நேசிப்பதையும் உங்களுக்கு நான் நல்லதையே செய்வேன் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள் தானே” என்று கேட்டார். அதற்கு அவர்கள் “ஆம்!” அப்படித்தான் என்றனர். அப்போது குறைஷிகளிடம் நுஅய்ம், “யூதர்கள் முஹம்மதுக்கும் அவரது தோழர்களுக்கும் செய்து கொடுத்த உடன்படிக்கையை முறித்தது பற்றி மிகவும் கைதேசமடைந்துள்ளனர். அதனால் உங்களிடமிருந்து உங்களின் சில நபர்களை அடைமானமாக உங்களிடமிருந்து வாங்கி, அவர்களை முஹம்மதிடம் கொடுத்துத் தாங்கள் செய்த குற்றத்திற்கு பரிகாரம் தேடிக்கொள்ள எண்ணுகின்றனர். ஆகையால், அவர்கள் உங்களிடம் உங்களின் ஆட்களை அடைமானமாகக் கேட்டால் நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள்” என்று கூறினார். அவ்வாறே கத்ஃபானியரைச் சந்தித்து குறைஷிகளிடம் கூறியது போன்று கூறினார்.