பக்கம் -89-

உம்ராவை நிறைவேற்றப் புறப்படுதல் (உம்ரத்துல் கழா)

அறிஞர் ஹாகிம் (ரஹ்) கூறுகிறார்: துல்கஅதா பிறை உதயமானதும், “சென்ற ஆண்டு (ஹுதைபிய்யாவில்) தவறிப்போன உம்ராவை நிறைவேற்ற வேண்டியிருப்பதால், இடைப்பட்ட காலங்களில் (ஷஹீத்) வீரமரணம் அடைந்தவர்களைத் தவிர ஹுதைபிய்யாவில் கலந்து கொண்ட (ஒருவர்கூட பின்தங்கி விடாமல்) அனைவரும் புறப்பட வேண்டும்” என நபி (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள்.

நபியவர்களின் கட்டளைக்கிணங்க ஹுதைபிய்யாவில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் உம்ராவை நிறைவேற்ற புறப்பட்டனர். இவர்களுடன் உம்ராவில் ஆர்வம் கொண்ட மற்றும் பலரும் புறப்பட்டனர். இவர்களில் பெண்கள், சிறுவர்கள் தவிர ஆண்கள் மட்டும் மொத்தம் இரண்டாயிரம் பேர் இருந்தனர்.” (ஃபத்ஹுல் பாரி)

மதீனாவில் உவைஃப் இப்னு அழ்பத் அத்தய்லி அல்லது அபூ ரூஹும் அல்கிஃபாயை பிரதிநிதியாக நியமித்துவிட்டு குர்பானிக்காக அறுபது ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு நபி (ஸல்) புறப்பட்டார்கள். இந்த ஒட்டகங்களுக்குப் பொறுப்பாளராக நாஜியா இப்னு ஜுன்துப் அஸ்லமியை நியமித்தார்கள். துல்ஹுலைபா வந்தவுடன் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து கொண்டு தல்பியா கூறினார்கள். முஸ்லிம்களும் நபியவர்களைப் பின்பற்றி தல்பியா கூறலானார்கள். குறைஷிகள் மோசடி செய்யலாம் அல்லது ஒப்பந்தத்தை மீறலாம் என்ற அச்சத்தில் போர் வீரர்கள், ஆயுதங்கள் சகிதம் எதற்கும் ஆயத்தமாகவே நபி (ஸல்) புறப்பட்டார்கள். ‘யஃஜுஜ்’ என்ற இடத்தை அடைந்தவுடன் தங்களிடமிருந்த ஈட்டிகள், அம்புகள், கேடயங்கள் அனைத்தையும் அங்கு வைத்துவிட்டு, அவற்றிற்கு அவ்ஸ் இப்னு கவ்லி அன்சாரியை 200 வீரர்களுடன் அதன் பாதுகாப்புக்கு நியமித்தார்கள். ஒரு பயணி வைத்திருக்கும் ஆயுதத்தை மட்டும் அதாவது, உறையிலிடப்பட்ட வாட்களை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள். (ஃபத்ஹுல் பாரி, ஜாதுல் மஆது)

நபி (ஸல்) தனது கஸ்வா ஒட்டகத்தில் வாகனிக்க, முஸ்லிம்கள் நபியவர்களை சுற்றி படை சூழ வாளேந்தியவர்களாக தல்பியாவையும் முழங்கிக் கொண்டு மக்காவிற்குள் நுழைந்தார்கள். இணைவைப்பாளர்கள் கஅபாவின் வடப் பகுதியில் இருந்த ‘குஐகிஆன்’ என்ற மலையின் மீது ஏறி நின்று முஸ்லிம்களை வேடிக்கை பார்க்கலானார்கள். மதீனாவின் காய்ச்சலால் பாதிப்படைந்த ஒரு குழுவினர் இப்போது நம்மிடம் வர இருக்கின்றனர் என்று கிண்டலாக தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இதனைக் கேள்விப்பட்ட நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடம் “வலது தோள்பட்டை வெளியில் தெரியும்படி இஹ்ராமுடைய ஆடையை அணிந்து கொள்ளுங்கள் தவாஃபுடைய முதல் மூன்று சுற்றுகளில் மட்டும் குதித்து ஓடுங்கள் ஆனால், இரண்டு ருகூன்களுக்கு மத்தியில் சாதாரணமாக நடந்துச் சுற்றுங்கள் மீதமுள்ள நான்கு சுற்றுகள் முழுவதும் சாதாரணமாக நடந்தே சுற்றுங்கள்!” எனக் கட்டளையிட்டார்கள். தங்களது தோழர்கள் மீதுள்ள கருணையினால் ஏழு சுற்றுகளிலும் தோள்களை உயர்த்தி ஓட வேண்டுமென்று நபி (ஸல்) கூறவில்லை. இணைவைப்பாளர்களுக்குத் தங்களது பலத்தைக் காட்டுவதற்காகவே நபி (ஸல்) இவ்வாறு கட்டளையிட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஹஜுனுக்கு அருகிலுள்ள மலைக் கணவாயின் வழியாக நபி (ஸல்) மக்காவுக்குள் நுழைந்தார்கள். இணைவைப்பாளர்கள் வரிசையாக நின்று கொண்டு நபியவர்களை வேடிக்கை பார்த்தனர். நபி (ஸல்) தல்பியா கூறிக்கொண்டே பள்ளிக்குள் நுழைந்து தனது தடியால் ஹஜ்ருல் அஸ்வத்தைத் தொட்டுவிட்டு தவாஃபைத் தொடங்க, முஸ்லிம்களும் தங்களது தவாஃபைத் தொடங்கினார்கள். அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) பின்வரும் கவிகளைப் பாடிக்கொண்டு வாளேந்தியவர்களாக நபியவர்களுக்கு முன் சென்று கொண்டிருந்தார்கள்.

“இறைமறுப்போரின் பிள்ளைகளே!அகன்றுபோய் வழிவிடுங்கள்!
இறைத்தூதரிடத்தில் நன்மைகள் அனைத்தும் இருக்கின்றன.
வழிவிடுங்கள்! திட்டவட்டமாக ரஹ்மான் அவன் தன் திருமறையில்...
தனது தூதருக்கு ஓதிக்காட்டப்படும் ஏடுகளில் இறக்கினான்.
இறைவா! அவர் கூற்றை ஏற்கிறேன்.
அவரை ஏற்பதில் உண்மைதனை நிச்சயம் நான் பார்க்கிறேன்.
வெட்டுவதில் சிறந்த வெட்டு இறைப்பாதையில் நிகழ்வதுதான்
இறைமறை கட்டளை, இன்று உங்களை வெட்டுவோம்
அது தலை தனி, முண்டம் தனி ஆக்கிடும் வெட்டு
அது நண்பனை விட்டு நண்பனைப் பிரித்திடும் வெட்டு.

உமர் (ரழி), “ஏ! ரவாஹாவின் மகனே! அல்லாஹ்வின் தூதருக்கு முன், அதுவும் அல்லாஹ்வின் புனிதப் பள்ளிக்குள் நீ கவிதை பாடுகிறாயா?” என்று அதட்டினார்கள். அதற்கு நபியவர்கள் “உமரே! அவரை விட்டுவிடுங்கள். அம்பால் எறிவதைவிட இந்தக் கவிதை குறைஷிகளுக்கு மிக விரைவாக ரோஷத்தை ஊட்டக் கூடியது” என்று கூறினார்கள். (ஜாமிவுத் திர்மிதி)

நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் முதல் மூன்று சுற்றுகளை (முன் கூறியவாறு) ரமல் செய்தவர்களாகச் சுற்றினார்கள். இதை பார்த்து ஆச்சரியமடைந்த இணைவைப்பாளர்கள் “என்ன! மதீனாவின் காய்ச்சல் இவர்களை மிகப் பலவீனப்படுத்தி விட்டது என்றல்லவா எண்ணியிருந்தோம். ஆனால், இவர்களோ இவ்வளவு வீரமுள்ளவர்களாக இருக்கிறார்களே” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் முதலில் தவாஃபை முடித்தார்கள். அதற்குப் பின் ‘ஸஃபா, மர்வா’ என்ற இரு மலைகளுக்கு மத்தியில் ‘ஸயீ“” செய்தார்கள். அதற்குப் பின் மர்வா மலைக்கு வந்தார்கள். அங்குதான் நபியவர்களின் ஒட்டகங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நபியவர்கள் “இந்த இடத்திலும் குர்பானி பிராணியை அறுக்கலாம். மக்காவின் அனைத்து தெருக்களிலும் குர்பானி பிராணியை அறுக்கலாம்” என்று அனுமதி வழங்கிவிட்டு, தங்களது குர்பானியை மர்வாவில் வைத்து அறுத்தார்கள். அதற்குப் பின் தங்களது தலைமுடியை சிரைத்து (மொட்டை அடித்து)க் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி முஸ்லிம்களும் அவ்வாறே செய்தார்கள். உம்ராவை முடித்த தோழர்களில் சிலரை ஆயுதங்களை வைத்துவிட்டு வந்த ‘யஃஜுஜ்’ என்ற இடத்திற்கு அனுப்பிவிட்டு, அங்கிருந்தவர்களை மக்கா வந்து உம்ராவை நிறைவேற்ற அழைத்தார்கள். நபியவர்களின் சொல்லுக்கிணங்க இக்கூட்டத்தினர் அங்குச் சென்று ஆயுதங்களைப் பாதுகாப்பதில் ஈடுபட, அங்கிருந்தவர்கள் மக்கா வந்து உம்ரா செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். குறைஷிகள் நான்காவது நாள் காலையில் அலீயிடம் வந்து, “தவணை முடிந்துவிட்டது. உமது தோழரை வெளியேறும்படி சொல்” என்று கூறினர். நபியவர்கள் மக்காவிலிருந்து வெளியேறி ‘ஸஃப்’ என்ற இடத்தில் தங்கினார்கள்.

நபியவர்கள் மக்காவிலிருந்து வெளியேறிய போது ஹம்ஜா (ரழி) அவர்களின் மகளார், “எனது சிறிய தந்தையே! எனது சிறிய தந்தையே!” என கூவிக்கொண்டு நபியவர்களை நோக்கி ஓடிவந்தார்கள். அவரை அலீ (ரழி) தூக்கி அணைத்துக் கொண்டார்கள். அவரை வளர்ப்பதற்காக அலீ, ஜஅஃபர், ஸைது (ரழி) மூவரும் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டனர். ஆனால், நபியவர்கள் அச்சிறுமியை வளர்க்கும் உரிமையை ஜஅஃபருக்குக் கொடுத்தார்கள். காரணம், இச்சிறுமியின் தாயின் சகோதரியைத்தான் ஜஅஃபர் (ரழி) மணம் முடித்திருந்தார்கள்.

இப்பயணத்தில் நபியவர்கள் மைமூனா பின்த் அல்ஹாரிஸ் அல்ஆமியாவைத் திருமணம் செய்தார்கள். நபியவர்கள் மக்கா நுழையும் முன்பே இது விஷயமாக ஜஅஃபர் இப்னு அபூதாலிபை மைமூனாவிடம் அனுப்பி வைத்தார்கள். மைமூனா (ரழி) இந்த உரிமையைத் தனது சகோதரியின் (உம்முல் ஃபழ்லின்) கணவர் அப்பாஸ் (ரழி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.

அப்பாஸ் (ரழி) நபியவர்களின் விருப்பத்தை ஏற்று அவர்களுக்கு மைமூனாவை மணம் முடித்து வைத்தார்கள். நபியவர்கள் உம்ராவை முடித்துவிட்டு மக்காவிலிருந்து வெளியேறியபோது மைமூனாவை அழைத்து வருவதற்காக அபூராஃபியை விட்டு வந்தார்கள். நபி (ஸல்) ஸஃபில் தங்கியிருந்தபோது அபூராபிஃ, மைமூனாவை அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்கள். (ஜாதுல் மஆது)

இந்த உம்ராவிற்கு ‘உம்ரத்துல் கழா’ என்று கூறப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, சென்ற ஆண்டு உம்ராவை நிறைவேற்ற முடியாமல் போனதற்குப் பகரமாக இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டதால் இப்பெயர் வந்தது. இரண்டாவது, ஹுதைபிய்யாவின் போது செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஏற்ப இந்த உம்ரா அமைந்திருந்ததால் இந்தப் பெயர் வந்தது.

மார்க்க அறிஞர்கள் இரண்டாவது காரணமே மிக ஏற்றமானது எனக் கூறுகின்றனர். (ஜாதுல் மஆது, ஃபத்ஹுல் பாரி)

இந்த உம்ராவிற்கு வரலாற்றில் நான்கு பெயர்கள் கூறப்படுகின்றன. 1) உம்ரத்துல் கழா, 2) உம்ரத்துல் கழிய்யா, 3) உம்ரத்துல் கிஸாஸ், 4) உம்ரத்துல் சுல்ஹ். (ஜாதுல் மஆது, ஃபத்ஹுல் பாரி)

இந்த உம்ராவிலிருந்து மதீனாவிற்குத் திரும்பியதற்குப் பின் நபி (ஸல்) பல சிறிய படைகளை அனுப்பி வைத்தார்கள். அதன் விவரங்கள் வருமாறு:

1) இப்னு அபுல் அவ்ஜா படைப் பிரிவு: ஹிஜ்ரி 7, துல்ஹஜ் மாதத்தில் 50 வீரர்களுடன் இவரை இஸ்லாமிய அழைப்பு விடுப்பதற்காக சுலைம் கிளையினரிடம் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் சுலைமனரிடம் சென்று, அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தபோது “உங்களது அழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய எந்தத் தேவையும் எங்களுக்கு இல்லை” என்று அவர்கள் மறுத்து விட்டனர். அதனால், இரு சாராருக்குமிடையில் கடுமையான சண்டை நடைபெற்றது. அதில் அபூஅவ்ஜா (ரழி) காயமடைந்தார். இரண்டு எதிரிகள் முஸ்லிம்களால் சிறைபிடிக்கப்பட்டனர்.

2) காலிபு இப்னு அப்துல்லாஹ் படைப் பிரிவு: ‘ஃபதக்’ என்ற இடத்திற்கு அனுப்பப்பட்ட பஷீர் இப்னு ஸஅது அன்சாரியின் தோழர்கள் கொல்லப்பட்டனர் அல்லவா, அதற்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காக 200 வீரர்களை காலிபு இப்னு அப்துல்லாஹ் (ரழி) தலைமையில் ஹிஜ்ரி 8, ஸஃபர் மாதத்தில் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அங்கு சென்று ஏராளமானவர்களை கொன்றுவிட்டு அதிகமான கால்நடைகளை ஓட்டி வந்தனர்.

3) கஅபு இப்னு உமைர் அன்சாரி படைப் பிரிவு: ஹிஜ்ரி 7, ரபீஉல் அவ்வல் மாதத்தில் இப்படை அனுப்பப்பட்டது. குழாஆ கிளையினர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த பெருமளவில் கூட்டங்களைச் சேர்க்கின்றனர் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. அதனால் கஅபு இப்னு உமைர் அல்அன்சாரியின் தலைமையில் பதினைந்து தோழர்களை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் எதிரிகளைச் சந்தித்து அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தனர். ஆனால், அவர்கள் ஏற்க மறுத்து முஸ்லிம்களை நோக்கி அம்பெறிந்தனர். இதில் அனைத்து முஸ்லிம்களும் கொல்லப்பட்டு விட்டனர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)

4) ஷுஜா இப்னு வஹபு அல்அசதி படைப் பிரிவு: ‘ஹவாஸின்’ என்ற கிளையினர் முஸ்லிம்களின் எதிரிகளுக்குப் பலமுறை உதவி செய்து வந்தனர். இதனால் அவர்களைக் கண்டிப்பதற்காக ஹிஜ்ரி 8, ரபீஉல் அவ்வல் மாதம், 25 வீரர்களுடன் ஷுஜா இப்னு வஹப் என்ற தோhழரை ‘தாத் இர்க்’ என்ற இடத்திற்கு நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். முஸ்லிம்கள் எதிரிகளின் ஏராளமான கால்நடைகளை ஓட்டிக் கொண்டு மதீனா வந்து சேர்ந்தனர். அங்கு சண்டை ஏதும் நடக்கவில்லை. (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)