அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
பத்ருப் போர் நாளன்று நான் போர்க்கள அணிவகுப்பில் நின்றுகொண்டிருந்தபோது, எனது வலப்புறமும் இடப்புறமும் பார்த்தேன். அங்கே மிகவும் இளம் வயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்களுக்கு மத்தியில் நான் இருப்பதைக் கண்டேன். அவர்களைவிட வலுவானவர்களுக்கு மத்தியில் நான் இருந்திருக்கக் கூடாதா என்று ஆசைப்பட்டேன். அவர்களில் ஒருவன் எனக்குச் சைகை காட்டி, “என் பெரிய தந்தையே! நீங்கள் அபூ ஜஹ்லை அறிவீர்களா?” என்று கேட்டான். நான், “ஆம்; என் சகோதரன் மகனே! அவனைக்கொண்டு உனக்கு என்ன தேவை?” என்று கேட்டேன்.
அதற்கு அவன், “அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஏசுவதாக எனக்குச் செய்தி கிடைத்தது. என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த (இறைவன்) மீது ஆணையாக! அவனை நான் பார்த்தால், நம்மில் யாருக்கு (மரணம்) முந்துகிறதோ அவர் மடியும் வரை, எனது நிழல் (உடல்) அவனது நிழலை (உடலை) விட்டுப் பிரியாது” என்று கூறினான். அவனது பேச்சைக் கேட்டு நான் வியப்படைந்தேன். பின்னர் மற்றவனும் எனக்குச் சைகை காட்டி இது போன்றே கூறினான்.
சிறிது நேரத்திற்குப் பின், அபூ ஜஹ்ல் மக்களுக்கு மத்தியில் நடமாடிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன். நான் (அச்சிறுவர்களிடம்), “நீங்கள் விசாரித்துக் கொண்டிருந்த உங்களின் ஆள் இதோ! இவன்தான் அவன் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்டேன்.
உடனே அவ்விருவரும் அவனை நோக்கி முந்திக்கொண்டு ஓடிச் சென்று, அவனைத் தங்களின் வாள்களால் வெட்டிக் கொன்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று (விவரத்தைக்) கூறினார்கள்.
அப்போது அவர், “உங்களில் யார் அவனைக் கொன்றது?” என்று கேட்டார்கள். அவ்விருவரில் ஒவ்வொருவரும் “நானே அவனைக் கொன்றேன்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “உங்கள் வாள்களை நீங்கள் துடைத்துவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள் “இல்லை” என்றனர். அவ்வாள்களைப் பார்வையிட்ட நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள்” என்று கூறினார்கள்.
அவனது இடுப்புடைமைகளை முஆத் பின் அம்ர் பின் அல்-ஜமூஹ் (ரழி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். (அபூ ஜஹ்லைக் கொன்ற) அந்த இரண்டு ஆண்களும், முஆத் பின் அம்ர் பின் அல்-ஜமூஹ் (ரழி) அவர்களும், முஆத் பின் அஃப்ரா (ரழி) அவர்களும் ஆவார்கள்.