அம்ர் பின் தக்லிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பங்கீட்டிற்காக) நிதியோ அல்லது போர்க்கைதிகளோ கொண்டுவரப்பட்டனர். அதை அவர்கள் பங்கிட்டுக் கொடுத்தார்கள். (அப்போது) சிலருக்குக் கொடுத்தார்கள்; சிலருக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள். தங்களால் விட்டுவிடப்பட்டவர்கள் (அது குறித்து) குறை பேசிக்கொண்டார்கள் எனும் செய்தி அவர்களுக்கு எட்டியது.
ஆகவே, அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "அம்மா பஃது" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் ஒரு மனிதருக்குக் கொடுக்கிறேன்; மற்றொருவருக்குக் கொடுக்காமல் விட்டுவிடுகிறேன். நான் எவருக்குக் கொடுக்காமல் விடுகிறேனோ அவரே, நான் கொடுப்பவரை விட எனக்கு மிகவும் விருப்பமானவர் ஆவார். ஆயினும், சில மனிதர்களின் உள்ளங்களில் நான் காணும் பொறுமையின்மையையும் பேராசையையும் கருத்தில் கொண்டே அவர்களுக்குக் கொடுக்கிறேன். ஆனால், அல்லாஹ் எவர்களது உள்ளங்களில் தன்னிறைவையும் நன்மையையும் அமைத்திருக்கிறானோ அவர்களை (அவற்றின் பொறுப்பிலேயே) விட்டுவிடுகிறேன். அத்தகையவர்களில் அம்ர் பின் தக்லிபும் ஒருவர்."
அம்ர் பின் தக்லிப் (ரலி) அவர்கள் (இதைக் கேட்டு), "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இவ்வார்த்தைக்குப் பகரமாக (உலகில் மிகவும் விலையுயர்ந்த) சிவப்பு ஒட்டகங்கள் கிடைப்பதை நான் விரும்பமாட்டேன்" என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் செல்வம் கொண்டு வரப்பட்டது. அதை அவர்கள் சிலருக்குக் கொடுத்தார்கள்; வேறு சிலருக்குக் கொடுக்காமல் தடுத்துக்கொண்டார்கள். (கொடுக்கப்படாத) அவர்கள் அதைக் குறித்துக் குறைப்பட்டுக் கொண்டார்கள் என்பது நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. எனவே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நிச்சயமாக நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; மற்றொருவரை (அவருக்குக் கொடுக்காமல்) விட்டுவிடுகிறேன். நான் யாரை (கொடுக்காமல்) விட்டுவிடுகிறேனோ அவர், நான் யாருக்குக் கொடுக்கிறேனோ அவரை விட எனக்கு மிகவும் விருப்பமானவர் ஆவார். நான் சிலருக்கு அவர்களுடைய உள்ளங்களில் இருக்கும் பொறுமையின்மை மற்றும் பதற்றத்தின் காரணமாகக் கொடுக்கிறேன். ஆனால் மற்றும் சிலரை, அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் அமைத்துள்ள மனநிறைவு மற்றும் நன்மையின் பொறுப்பிலேயே விட்டுவிடுகிறேன். அவர்களில் அம்ர் பின் தஃக்லிப் அவர்களும் ஒருவர்.”
அம்ர் பின் தஃக்லிப் (ரழி) கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அந்த வார்த்தைக்குப் பகரமாகச் சிவப்பு ஒட்டகங்கள் எனக்கு இருப்பதை நான் விரும்பமாட்டேன்.”