அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்-ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "அல்லாஹ் அறிவை, மக்களிடமிருந்து (அவர்களின் உள்ளங்களிலிருந்து) பறிப்பதன் மூலம் நீக்குவதில்லை; ஆனால் மார்க்க அறிஞர்களின் மரணத்தின் மூலம் அதை எடுத்துவிடுகிறான். எந்த அளவுக்கு என்றால் (மார்க்க அறிஞர்களில்) ஒருவரும் மீதமில்லாத நிலை ஏற்படும் வரை (அவன் அவ்வாறு செய்வான்). அந்நிலை ஏற்பட்டதும், மக்கள் அறிவற்றவர்களைத் தங்களின் தலைவர்களாக எடுத்துக்கொள்வார்கள். அவர்களிடம் ஆலோசனை கேட்கப்படும்போது, அவர்கள் அறிவில்லாமல் தீர்ப்பளிப்பார்கள். அதனால் அவர்கள் தாமும் வழிகெட்டு, மேலும் மக்களையும் வழிகெடுப்பார்கள்."
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்-ஆஸ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
நிச்சயமாக, அல்லாஹ் மக்களிடமிருந்து கல்வியை ஒரேயடியாகப் பறித்துவிடுவதில்லை. மாறாக, அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலம் (அவர்களின் மரணத்தின் மூலம்) அவன் (அல்லாஹ்) கல்வியை எடுத்துக்கொள்கிறான். எந்தவொரு அறிஞரையும் அவன் (அல்லாஹ்) விட்டுவைக்காத நிலை ஏற்படும்போது, மக்கள் அறிவற்றவர்களைத் தங்களுடைய தலைவர்களாக ஆக்கிக்கொள்வார்கள். பிறகு அவர்களிடம் மார்க்கத் தீர்ப்புகள் கேட்கப்படும்; அவர்களும் அறிவில்லாமல் தீர்ப்புகளை வழங்குவார்கள். அதனால் அவர்களும் வழிகெடுவார்கள், பிறரையும் வழிகெடுப்பார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், "என் சகோதரி மகனே! (அப்துல்லாஹ் இப்னு அம்ர்) நபி (ஸல்) அவர்களிடமிருந்து அதிகமான கல்வியைப் பெற்றுள்ளார் எனும் செய்தி எனக்கு எட்டியது" என்று கூறினார்கள்.
(உர்வா கூறினார்:) "எனவே நான் அவரைச் சந்தித்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அவர் குறிப்பிடும் விஷயங்கள் குறித்துக் கேட்டேன்."
அவர் குறிப்பிட்டவற்றில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகப் பின்வரும் செய்தியும் இருந்தது:
"நிச்சயமாக அல்லாஹ் மக்களிடமிருந்து கல்வியை(த் தன்னால்) ஒரேயடியாகப் பறித்துவிடுவதில்லை. மாறாக அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே கல்வியைக் கைப்பற்றுகிறான். இறுதியில் மக்களில் தலைவர்கள் (எனக் கருதத் தக்க அறிஞர்கள்) எவரையும் அவன் விட்டுவைக்காத போது, மக்கள் அறிவீனர்களையே தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் (மார்க்கத் தீர்ப்புக்) கேட்கப்படும்போது, அவர்கள் அறிவின்றித் தீர்ப்பளிப்பார்கள். இதன் மூலம் அவர்களும் வழிதவறி, (பிறரை)யும் வழிதவறச் செய்வார்கள்."
உர்வா (ரஹ்) கூறினார்: "நான் இதை ஆயிஷா (ரலி) அவர்களிடம் அறிவித்தபோது, அவர்கள் அதை மிகப் பெரிய விஷயமாகக் கருதினார்கள்; (அதன் பாரதூரத்தின் காரணமாக) அதை ஏற்கத் தயங்கினார்கள். 'நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவதை அவர் செவியுற்றதாக உன்னிடம் அறிவித்தாரா?' என்று கேட்டார்கள்."
உர்வா (ரஹ்) கூறினார்: "அடுத்த ஆண்டு வந்தபோது, ஆயிஷா (ரலி) என்னிடம், 'இப்னு அம்ர் வந்துள்ளார்; அவரைச் சந்தித்து அவருடன் பேச்சுக் கொடுத்து, கல்வி குறித்து அவர் உமக்குக் குறிப்பிட்ட அந்த ஹதீஸைப் பற்றி அவரிடம் கேட்பீராக!' என்று கூறினார்கள். (உர்வா கூறினார்:) அவ்வாறே நான் அவரைச் சந்தித்து அது குறித்துக் கேட்டேன். அவர் முதல் முறை எனக்கு அறிவித்ததைப் போலவே (மாற்றமின்றி) எனக்கு அறிவித்தார்."
உர்வா (ரஹ்) கூறினார்: "நான் அதை ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவித்தபோது, 'அவர் உண்மையையே கூறியுள்ளார் என்றே நான் கருதுகிறேன். அவர் அதில் எதையும் கூட்டவுமில்லை; குறைக்கவும் இல்லை என்பதை நான் காண்கிறேன்' என்று கூறினார்கள்."