அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் எதன் மூலம் பாவங்களை அழித்து, அந்தஸ்துகளை உயர்த்துகின்றானோ அதனை நான் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா?" அதற்கு அவர்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்றனர். அவர்கள் கூறினார்கள்: "சிரமங்களுக்கு மத்தியிலும் (குளிரின் கடுமை, உடல் சோர்வு போன்ற காரணங்களால் ஏற்படும் சிரமங்கள் இருந்தபோதிலும்) உளூவை முழுமையாகவும் சரியாகவும் செய்வதும், பள்ளிவாசல்களுக்கு அதிக அடிகள் எடுத்து வைப்பதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இதுவே (மார்க்கக் காவலான) எல்லைப் பாதுகாப்பாகும்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் எவரும் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்க வேண்டாம்; பின்னர் அதிலிருந்து குஸ்ல் செய்ய வேண்டாம் (ஏனெனில் அவ்வாறு செய்தால், அந்த நீர் தூய்மையற்றதாகி, அதைக் கொண்டு தூய்மை அடைய முடியாது)" என்று கூறினார்கள்.