நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அறியாமைக் காலத்தில் திருமணம் நான்கு வகைகளாக இருந்தது.” அவற்றில் ஒன்று, மக்கள் இன்று செய்துகொள்ளும் திருமணமாகும். ஒருவர் இன்னொருவரிடம் சென்று அவருடைய பொறுப்பிலுள்ள பெண்ணை (சகோதரியையோ மகளையோ) தனக்கு மணமுடித்துத் தருமாறு கேட்பார். பிறகு அப்பெண்ணுக்குரிய மஹரைக் கொடுத்து அவரை மணந்துகொள்வார். இன்னொரு வகை திருமணம் யாதெனில், ஒருவர் தம் மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மையானதும் அவளிடம், ‘இன்னாரிடம் ஆளனுப்பி அவருடன் உடலுறவு கொள்’ என்று கூறுவார். பிறகு அவளுடைய கணவன் அவளைவிட்டு விலகியிருப்பான்; அவள் யாருடன் உடலுறவு கொண்டாளோ அந்த நபரிடமிருந்து அவள் கர்ப்பமுற்றிருப்பது தெளிவாகும் வரை அவளுடன் உடலுறவு கொள்ளமாட்டான். அவள் கர்ப்பமுற்றிருப்பது தெளிவான பின், அவளுடைய கணவன் விரும்பினால் அவளுடன் கூடுவான். இத்திருமணத்திற்கு ‘இஸ்திப்தா’ (புத்திசாலி மகனைப் பெறுவதற்காக உடலுறவு கொள்ள வைத்தல்) என்று பெயர். மூன்றாவது வகை திருமணம் யாதெனில், பத்துக்கும் குறைவான சிலர் ஒன்றுசேர்ந்து ஒரு பெண்ணிடம் சென்று அனைவரும் அவளுடன் உடலுறவு கொள்வார்கள். அப்பெண் கர்ப்பமுற்று, குழந்தை பெற்றெடுத்து, பிரசவத்திற்குப் பின் சில நாட்கள் கழிந்ததும் அவர்கள் அனைவரையும் அழைத்து வர ஆளனுப்புவாள். அவர்களில் யாரும் வராமல் இருக்க முடியாது. அனைவரும் அவள் முன்னே ஒன்று கூடுவார்கள். அப்போது அப்பெண், ‘உங்கள் விஷயம் உங்களுக்குத் தெரியும். நான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளேன். இன்னாரே! இது உங்கள் குழந்தை’ என்று அவர்களில் தான் விரும்பிய ஒருவரின் பெயரைச் சொல்லி, அக்குழந்தையை அவருடன் இணைத்துவிடுவாள். நான்காவது வகை திருமணம் யாதெனில், பலர் ஒன்றுசேர்ந்து ஒரு பெண்ணிடம் செல்வார்கள். தன்னிடம் யார் வந்தாலும் அவள் தடுக்கமாட்டாள். இப்பெண்கள் விபச்சாரிகளாவர். அவர்கள் தங்கள் வீட்டு வாசல்களில் கொடிகளை நட்டு வைத்திருப்பார்கள். அது, அவர்களை நாடி வருபவர்களுக்கு ஓர் அடையாளமாகும். அவள் கர்ப்பமாகி, குழந்தையைப் பெற்றெடுத்ததும் அவளுடன் உடலுறவு கொண்டவர்கள் அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து சந்ததியைக் கண்டறியும் நிபுணர்களை (காஃபாக்களை) வரவழைப்பார்கள். அந்த நிபுணர்கள் யாரை அக்குழந்தையின் தந்தை என அடையாளம் காட்டுகிறார்களோ, அவரிடமே அக்குழந்தை ஒப்படைக்கப்படும். அக்குழந்தை அவருடைய மகன் என்று அழைக்கப்படும். அதை அவர் மறுக்க முடியாது. அல்லாஹ், முஹம்மது (ஸல்) அவர்களை நபியாக அனுப்பியபோது, இன்று முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் திருமண முறையைத் தவிர, அறியாமைக் காலத்தில் நடைமுறையில் இருந்த அனைத்துத் திருமண முறைகளையும் அவர் ஒழித்துவிட்டார்.