நான் ஓர் இரவில் வெளியே சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுடன் மனிதர் யாரும் இருக்கவில்லை. அவர்களுடன் யாரும் நடந்து செல்வதை அவர்கள் விரும்பவில்லை என்று நான் எண்ணினேன். எனவே நான் நிலவின் நிழலில் நடக்கலானேன். அவர்கள் திரும்பி என்னைப் பார்த்து, “யார் இது?” என்று கேட்டார்கள். நான், “அபூ தர்! அல்லாஹ் என்னை உங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக!” என்றேன். அவர்கள், “அபூ தர்ரே! வாருங்கள்” என்றார்கள்.
நான் அவர்களுடன் சிறிது நேரம் நடந்தேன். அப்போது அவர்கள், “நிச்சயமாக (உலகில் செல்வத்தை) அதிகம் சேகரித்தவர்களே மறுமை நாளில் (நற்கூலியில்) குறைந்தவர்களாவர்; அல்லாஹ் யாருக்கு நன்மையை (செல்வத்தை) வழங்கி, அவர் (அதை) தமது வலப்புறமும், இடப்புறமும், தமக்கு முன்னாலும், பின்னாலும் (அள்ளி) வழங்கி, அதில் நன்மையைச் செய்தாரோ அவரைத் தவிர” என்று கூறினார்கள்.
பிறகு நான் அவர்களுடன் சிறிது நேரம் நடந்தேன். அவர்கள், “இங்கே அமருங்கள்” என்று கூறினார்கள். கற்கள் சூழ்ந்த ஒரு பள்ளமான பகுதியில் என்னை அவர்கள் அமரவைத்தார்கள். மேலும் அவர்கள் என்னிடம், “நான் உன்னிடம் திரும்பி வரும் வரை இங்கேயே அமர்ந்திரு” என்று கூறினார்கள். பிறகு அவர்கள் அந்த ‘ஹர்ரா’ (கரும்கற்கள் நிறைந்த) பகுதியில், என் கண்ணிலிருந்து மறையும் வரை நடந்து சென்றார்கள். வெகுநேரம் ஆகியும் அவர்கள் திரும்பவில்லை. பிறகு அவர்கள் திரும்பி வருவதையும், வரும்போது “அவன் திருடினாலும் சரியே; அவன் விபச்சாரம் செய்தாலும் சரியே” என்று சொல்லிக்கொண்டே வருவதையும் நான் கேட்டேன்.
அவர்கள் வந்தபோது என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நான், “அல்லாஹ்வின் நபியே! அல்லாஹ் என்னை உங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! அந்த ‘ஹர்ரா’வின் ஓரத்திலே யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்? உங்களிடம் யாரும் பதில் பேசுவதை நான் கேட்கவில்லையே?” என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் கூறினார்கள்: “அது ஜிப்ரீல். அந்த ‘ஹர்ரா’வின் ஓரத்தில் எனக்கு அவர் காட்சியளித்தார். ‘அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடும் உமது சமுதாயத்தவர் சொர்க்கம் செல்வார் என்று உமது சமுதாயத்திற்கு நற்செய்தி கூறுங்கள்’ என்று கூறினார். அப்போது நான் (ஜிப்ரீலிடம்), ‘ஜிப்ரீலே! அவன் திருடி, விபச்சாரம் செய்திருந்தாலுமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘ஆம்’ என்றார். நான், ‘அவன் திருடி, விபச்சாரம் செய்திருந்தாலுமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘ஆம்’ என்றார். நான் (மீண்டும்), ‘அவன் திருடி, விபச்சாரம் செய்திருந்தாலுமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஆம்; அவன் மது அருந்தியிருந்தாலும் சரியே’ என்று கூறினார்.”