நபி (ஸல்) அவர்கள் ஒரு சபையில் மக்களுக்கு உரையாற்றிக்கொண்டிருந்தபோது, ஒரு கிராமவாசி அவர்களிடம் வந்து, "மறுமை நாள் எப்போது?" என்று கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அவருக்குப் பதிலளிக்காமல்) தமது பேச்சைத் தொடர்ந்தார்கள். (இதைக் கண்ட) மக்களில் சிலர், "அவர் கூறியதை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள்; எனினும் அவர் கூறியதை அவர்கள் விரும்பவில்லை" என்று பேசிக்கொண்டனர். வேறு சிலர், "இல்லை! அவர் கூறியதை நபி (ஸல்) அவர்கள் செவியுறவில்லை" என்றனர்.
நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்ததும், "மறுமை நாளைப் பற்றிக் கேட்டவர் எங்கே?" என்று வினவினார்கள். அதற்கு அவர், "இறைத்தூதர் அவர்களே! இதோ நான்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "அமானிதம் (நம்பகத்தன்மை) பாழாக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பார்" என்று கூறினார்கள்.
அதற்கு அவர், "அது எவ்வாறு பாழாக்கப்படும்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "தகுதியற்றவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பார்" என்று பதிலளித்தார்கள்.