ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரவில் தங்குபவனாக இருந்தேன். அவர்களுக்கு வொளூ (அங்கசுத்தி) செய்வதற்கான தண்ணீரையும், அவர்களுக்குத் தேவையானவற்றையும் நான் கொண்டு வருவேன். (அப்போது) அவர்கள் என்னிடம், "கேளும்" என்றார்கள். நான், "சொர்க்கத்தில் தங்களுடைய தோழமையை வேண்டுகிறேன்" என்றேன். அவர்கள், "வேறு ஏதேனும் (வேண்டுமா)?" என்று கேட்டார்கள். நான், "(எனக்குத் தேவையானது) அதுவேதான்" என்றேன். அவர்கள், "அப்படியாயின், அதிகமாக ஸஜ்தா (சிரவணக்கம்) செய்வதன் மூலம் (உமக்காக) எனக்கு உதவுவீராக" என்று கூறினார்கள்.