நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் என்னை எத்தகைய நேர்வழியுடனும் கல்வியுடனும் அனுப்பியுள்ளானோ, அதற்கான உதாரணம் பூமியில் பெய்த பெருமழையைப் போன்றதாகும்.
(அதில்) ஒரு பகுதி நல்ல நிலமாக இருந்தது; அது நீரை ஏற்றுக்கொண்டு ஏராளமான புற்களையும் செடிகொடிகளையும் முளைப்பித்தது.
அதில் மற்றொரு பகுதி (நீரைத்) தேக்கி வைத்துக்கொள்ளும் திடர்ப் பகுதியாக இருந்தது; அல்லாஹ் அதனால் மக்களுக்குப் பயனளித்தான். அவர்கள் (அந்நீரைத்) தாங்களும் குடித்து, (கால்நடைகளுக்கும்) புகட்டி, விவசாயமும் செய்தார்கள்.
(அம்மழையின்) ஒரு பகுதி வேறொரு வகை நிலத்திலும் விழுந்தது; அது (தண்ணீர் தங்காத) வெறும் பாழுந்தரை. அது நீரைத் தேக்கி வைக்கவும் இல்லை; புற்களை முளைப்பிக்கவும் இல்லை.
இதுதான், அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று, அல்லாஹ் என் மூலம் அனுப்பியவற்றால் பயனடைந்து, தானும் கற்றுக்கொண்டு (பிறருக்கும்) கற்றுக்கொடுத்தவரின் உதாரணமும்; இதைப் பொருட்படுத்தாமலும், நான் அனுப்பப்பட்டுள்ள அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக்கொள்ளாமலும் இருப்பவனின் உதாரணமும் ஆகும்."
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், என்னை எதனுடன் அனுப்பினானோ அந்த நேர்வழி மற்றும் கல்வியின் உவமையானது, பூமியில் பெய்த பெருமழையைப் போன்றதாகும்.
(அம்மழை பெய்த இடத்தில்) ஒரு நல்ல நிலப்பகுதி இருந்தது; அது நீரை ஏற்றுக்கொண்டு, ஏராளமான புற்களையும் செடிகொடிகளையும் முளைக்கச் செய்தது.
மேலும், அதில் (தண்ணீரை உறிஞ்சாத) கடினமான பகுதிகளும் இருந்தன. அவை தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொண்டன. அல்லாஹ் அவற்றின் மூலம் மக்களுக்குப் பயனளித்தான். மக்கள் (அந்நீரைத்) தாமும் பருகினர்; (பிறருக்கும்) புகட்டினர்; (கால்நடைகளை) மேய்த்தனர்.
(அம்மழை) வேறொரு நிலப்பகுதியிலும் விழுந்தது. அது (நீர் தங்காத) வெற்றுச் சமவெளியாகும். அது நீரையும் தேக்கி வைக்காது; புற்பூண்டுகளையும் முளைக்கச் செய்யாது.
இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று, அல்லாஹ் என்னை எதைக்கொண்டு அனுப்பினானோ அதனால் பயனடைந்து, தாமும் கற்று, (பிறருக்கும்) கற்றுக்கொடுத்தவரின் உவமையாகும்.
மேலும் (இது,) நான் கொண்டுவந்தவற்றின் பக்கம் தலையை உயர்த்திப் பாராமலும் (அதாவது அலட்சியப்படுத்தி), நான் எதைக்கொண்டு அனுப்பப்பட்டேனோ அந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக்கொள்ளாமலும் இருப்பவனின் உவமையாகும்.”