அபூ ரஸீன் லகீத் பின் ஆமிர் அல்-உகைலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்தில் ரஜப் மாதத்தில் பலியிட்டு, நாங்களும் உண்டு, எங்களிடம் வருபவர்களுக்கும் உணவளித்து வந்தோம்" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதில் (அல்லாஹ்விற்காக அறுப்பதில்) தவறில்லை" என்று கூறினார்கள். (இதனை அறிவிக்கும்) வகீஉ பின் உதுஸ் அவர்கள், "எனவே, நான் அதை விடமாட்டேன்" என்று கூறினார்கள்.
முஆத் இப்னு ஸஃத் அல்லது ஸஃத் இப்னு முஆத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
கஅப் இப்னு மாலிக் (ரழி) அவர்களின் ஓர் அடிமைப் பெண் ‘ஸல்உ’ (மதீனாவுக்கு அருகிலுள்ள ஒரு மலை) எனும் இடத்தில் அவளுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாள். (அவற்றில்) ஓர் ஆடு (இறக்கும் தருவாயில்) பாதிக்கப்பட்டபோது, அவள் அதை (விரைந்து) அடைந்து ஒரு கல்லால் (இஸ்லாமிய முறைப்படி) அறுத்தாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதுபற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அதில் எந்தத் தீங்கும் இல்லை; ஆகவே அதை உண்ணுங்கள்” என்று கூறினார்கள்.